சினிமா பிரபலங்கள் பாலியல் தொல்லையால் பாதிக்கப்படுவதை தடுத்து நிறுத்த நடிகர் சங்கம் போன்று நடிகைகளுக்கும் புதிய சங்கம் தொடங்கப்படும் என நடிகை வரலட்சுமி தெரிவித்துள்ளார்.
போடா போடி படம் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமான நடிகை வரலட்சுமி தாரை தப்படை படம் மூலம் மிகவும் பிரபலமடைந்தார். அதைத்தொடர்ந்து மலையாள சினிமாவிலும் வாய்ப்பு கிடைத்து நடித்து வருகிறார்.
நடிகை பாவனா பாலியல் தொல்லை சம்பவம் செய்தி வெளியான பிறகு, வரலட்சுமி தானும் பாலியல் தொல்லை பாதிப்பு அடைந்துள்ளேன் என தெரிவித்தார். பெண்களுக்கு நாட்டில் பாதுகாப்பு இல்லை. ஆண்கள் எப்படி நடந்து கொள்ள வேண்டும் என்று வீடுகளில் சொல்லித்தரவேண்டும் என வரலட்சுமி தனது டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்து இருந்தார்.
இதையடுத்து தற்போது சினிமா பிரபலங்கள் பாலியல் தொல்லையால் பாதிக்கப்படுவதை தடுத்து நிறுத்தும் விதமாக நடிகைகளுக்கு புதிய சங்கம் தொடங்கப்படும் என்று அறிவித்தார். வரும் 8 ஆம் தேதி சென்னையில் நடிகைகளுக்கு என்று புதிய அமைப்பு தொடங்கப்படும் என்று அறிவித்துள்ளார்.