மில்லியன் டாலர் ஸ்டுடியோஸ் நிறுவனத்தின் தயாரிப்பில் குட்னைட் மற்றுன் லவ்வர் ஆகிய படங்களுக்கு அடுத்தப் படமாக டூரிஸ்ட் பேமிலி படம் கடந்த மே 1 ஆம் தேதி ரிலீஸானது. இந்த படத்துக்கு ரிலீஸுக்கு முன்பே நல்ல எதிர்பார்ப்பு நிலவியது. படம் ரிலீஸாகி ரசிகர்களைப் பெருமளவில் கவர்ந்த நிலையில் விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் தொடர்ந்து கலக்கி வருகிறது.
இந்த படம் ரிலீஸாகி 20 நாட்கள் ஆகிவிட்ட நிலையிலும் இன்னமும் கணிசமான வசூலைத் தக்கவைத்துள்ளது. இதுவரை தமிழ்நாட்டில் மட்டும் 50 கோடி ரூபாய்க்கு மேல் வசூலித்துள்ளதாக சொல்லப்படுகிறது. ரஜினிகாந்த் உள்ளிட்ட பல தமிழ் திரைப்பட பிரபலங்களில் படத்தைப் பாராட்டியுள்ளனர்.
இந்நிலையில் இயக்குனர் ராஜமௌலி இந்த படத்தைப் பார்த்து தன்னுடைய சமூகவலைதளப்பக்கத்தில் பாராட்டியுள்ளார். அதில் “அற்புதம். அற்புதமான சினிமாவைப் பார்த்தேன். இதயத்தை நிறைய செய்யும், வயிறு வலிக்க சிரிக்கவைக்கும் படம். ஆரம்பத்தில் இருந்து என்னைக் கவர்ந்த சுவாரஸ்யமான படம். சிறந்த எழுத்து மற்றும் இயக்கத்தைக் கொடுத்துள்ளார் அபிஷன் ஜீவிந்த். சமீபகாலத்தில் மிகச்சிறந்த சினிமா அனுபவத்தைக் கொடுத்ததற்கு நன்றி. தவறவிடாதீர்கள்” எனக் கூறியுள்ளார்.