மறைந்த நடிகர் விஜயகாந்தின் இளைய மகன் சண்முகபாண்டியன் மதுர வீரன் என்ற படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார். ஆனால் இன்னும் அவர் ஹிட் கொடுக்க முடியாமல் போராடி வருகிறார். இவர் நடித்த மதுர வீரன் திரைப்படம் பெரிய வெற்றியை பெறவில்லை என்றாலும் ஓரளவு அவருக்கான அடையாளத்தைப் பெற்று தந்தது.
இந்நிலையில் இப்போது சண்முகபாண்டியன் காட்டையும் யானைகளையும் பின்னணியாகக் கொண்ட படை தலைவன் என்ற படத்தில் நடித்து முடித்துள்ளார். இந்த படத்தை வால்டர் மற்றும் ரேக்ளா ஆகிய படங்களை இயக்கிய அன்பு இயக்கியுள்ளார். படத்துக்கு இளையராஜா இசையமைத்துள்ளார்.
சில மாதங்களுக்கு முன்னர் இந்த படத்தின் டீசர் வெளியாகிக் கவனம் பெற்றுள்ளது. அதற்கு முக்கியக் காரணம் டீசரின் இறுதிக் காட்சியில் ரமணா படத்தில் விஜயகாந்த் இடம்பெறும் காட்சி ஒன்று ரிக்ரியேட் செய்யப்பட்டுள்ளது. அதுமட்டுமில்லாமல் ரமணா திரைப்படத்தில் முக்கிய வேடத்தில் நடித்திருந்த யூகி சேது அதே வேடத்தில் நடித்துள்ளார். டீசரில் சமீபத்தைய சென்சேஷனல் ஹிட்டான நீ பொட்டுவச்ச தங்க கொடம் பாடலும் இணைக்கப்பட்டு இருந்தது.
இந்நிலையில் படம் நாளை (மே 23 ஆம் தேதி) ரிலீஸாக இருந்த நிலையில் திரையரங்க ஒதுக்கீட்டில் எழுந்த சிக்கல் காரணமாக தற்காலிகமாக தள்ளிவைக்கப்படுவதாக சண்முக பாண்டியன் தெரிவித்துள்ளார். புதிய வெளியீட்டு தேதி விரைவில் அறிவிக்கப்படும் என்றும் இடையூறுக்கு மன்னிப்புக் கேட்டும் அவர் பதிவிட்டுள்ளார்.