Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

'பொன்மகள் வந்தாள்' படத்திற்கு தடை வேண்டாம்: தயாரிப்பாளர் தாணு வேண்டுகோள்

'பொன்மகள் வந்தாள்' படத்திற்கு தடை வேண்டாம்: தயாரிப்பாளர் தாணு வேண்டுகோள்
, செவ்வாய், 28 ஏப்ரல் 2020 (17:23 IST)
சூர்யா தயாரிப்பில் ஜோதிகா நடிப்பில் உருவான ‘பொன்மகள் வந்தாள்’ திரைப்படம் கடந்த மார்ச் மாதமே வெளியாகவிருக்க வேண்டிய படம். ஆனால் கொரோனா காரணமாக ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டதால் ரிலீஸ் செய்ய முடியவில்லை. இந்த நிலையில் இந்த படத்தை நேரடியாக அமேசான் பிரைமில் திரையிட சூர்யா முடிவு செய்துள்ளார். இதற்கான ஒப்பந்தமும் கையெழுத்தாக் மே முதல் வாரத்தில் இந்த படம் வெளியாகவுள்ளது. இந்த நிலையில் சூர்யாவுக்கு திரையரங்கு உரிமையாளர்கள் தரப்பினர் கடும் கண்டனம் தெரிவித்து வரும் நிலையில் கலைப்புலி எஸ்.தாணு அவர்கள் ஒரு வேண்டுகோள் விடுத்துள்ளார். திரையரங்க உரிமையாளர்களுக்கு அவர் விடுத்துள்ள வேண்டுகோள் இதுதான்:
 
இன்றைய சூழ்நிலையில் 'பொன்மகள் வந்தாள்' திரைப்படம் அமேசான் ப்ரைமில் வெளியிட முடிவெடுத்துள்ளதால், மிகப்பெரிய பிரச்சினையை தமிழ்த் திரையுலகம் சந்தித்துக் கொண்டிருக்கிறது. உங்களுடைய கணிப்பு அப்படிக் கொடுத்தது தவறு என்று இருக்கலாம். ஆனால், தயாரிப்பாளர்களின் இன்றைய காலகட்ட சூழ்நிலையில், அந்தப் படத்தைக் கொடுத்தது தவறில்லை என்றுதான் சொல்ல வேண்டும். காரணம் என்னவென்றால், இந்தப் படம் மார்ச் மாத இறுதியில் வெளியாகியிருந்தால் ஏப்ரல் மாதம் ஓடி, மே மாதம் ஓடிடி ப்ளாட்பார்மில் வெளியிடப்பட்டு இருக்கும்.
 
ஆனால், ஏப்ரல் மாதம் முழுக்கவே கரோனா பாதிப்பினால் திரையரங்குகள் முழுக்க மூடியாச்சு. ஏற்கெனவே அந்தத் தயாரிப்பாளருக்குத் திரையரங்கில் வெளியிடாததினால் எத்தனை கோடி இழப்போ, அதைச் சொல்ல முடியாது. ஆனால் இந்த ஓடிடி பணத்தையும் இழந்துவிட்டால் என்ன செய்வது?
 
ராஜசேகர் பாண்டியன் ஒரு சிறு தயாரிப்பாளர். சின்ன படத்தை எடுத்துப் பண்ணிக்கொண்டிருக்கிறார். அந்தப் படமொன்றும் பெரிய படமல்ல. குறைவாகத்தான் கொடுத்திருப்பார்கள். இணையத்தில் கற்பனைக்கு அளவில்லாமல் எழுதுவார்கள். ஓடிடி-யில் விற்ற பணத்தின் மூலம் இன்னொரு சின்ன படம்தான் எடுப்பார்கள்.
 
நண்பர்களே, திரையரங்குகளுக்கு எந்தக் காலத்திலுமே அழிவில்லை. தொலைக்காட்சி வரும்போது நாம் என்ன சொன்னோம். சினிமா அழிந்தது என்றோம். வீட்டுக்கு வீடு சிடி ப்ளேயர் வந்தவுடன் சினிமா அழிந்தது என்றோம். 50 கோடி ரூபாய், 100 கோடி ரூபாய் போட்டு படம் எடுத்து வெளியிட்டால், அன்றைக்கு இரவே இணையத்தில் வந்துவிடும். எதை நம்மால் தடை செய்ய முடிந்தது. சினிமா அழிந்துவிட்டதா?
 
அந்த மாதிரி தான் இந்த ஓடிடி ப்ளாட்பார்ம். வருடத்துக்கு 12 - 15 படங்கள்தான் வாங்குவார்கள். அதிலும் பெரிய படங்களாக வாங்கிவிட்டார்கள் என்றால், சின்ன படங்களை வாங்கவே மாட்டார்கள். அத்தி பூத்தாற்போல் ஒரு சின்ன படம் வாங்கியிருக்கும்போது இதை வரவேற்க வேண்டும். இதற்குத் தடைபோட்டு விடாதீர்கள்.
 
பல தயாரிப்பாளர்களின் படங்கள் முடிவடையும் நிலையில் உள்ளன. அவர்கள் படத்தை இனி முடிக்க எவ்வளவு கஷ்டப்படுவார்கள் என்பதைக் கொஞ்சம் நினைத்துப் பாருங்கள். எங்களுக்குக் கொள்கை அளவில் படங்களைக் கொடுக்க வேண்டும் என்ற எண்ணமே கிடையாது. கொடுக்கப் போவதும் கிடையாது. ஈகை குணம் கொண்ட ஒரு பட நிறுவனம், கல்விக்காக நிறைய பணிகளைச் செய்து கொண்டிருக்கிறது. அவர்களுக்கு இந்தப் பணம் உதவியாக இருக்குமே தவிர, தடையாக இருக்காது. தயவுசெய்து இந்தப் பிரச்சினைக்கு முற்றுப்புள்ளி வைத்து, அந்தப் படம் ஓடிடியில் திரையிடப்படட்டும். எதிர்காலத்தில் நாம் கூடி உட்கார்ந்து பேசி, எப்படிப் பண்ணலாம் என்று முடிவெடுப்போம்.
 
அனைவருமே என்னுடைய நண்பர்கள்தானே. சினிமாவை அழிக்கவே முடியாது. ஒரு வழி அடைத்தால் கடவுள் இன்னொரு வழி கொடுப்பார். அதனால் நமக்கு நல்லதொரு தீர்வைக் கடவுள் தருவார். ஒட்டுமொத்தத் திரையுலகமும் ஒன்றுசேர்ந்து பேசக்கூடிய சூழலை நாம் உருவாக்குவோம். எதிர்காலத்தில் நல்ல முறையில் வியாபாரம் செய்வோம். 'பொன்மகள் வந்தாள்' ஓடிடியில் வெளியாவதற்குத் தடை செய்ய வேண்டாம். அவர்களைத் தண்டிக்கவோ, கண்டிக்கவோ வேண்டாம். காலத்தின் கட்டாயம் கொடுக்க வேண்டிய சூழல். அவர்களும் மனுதர்மம் பிரகாரம்தான் நடந்திருக்கிறார்கள். ஆகவே, எனது அன்பு நண்பர்களே உங்களிடம் பணிவோடு கேட்டுக் கொள்கிறேன். தயவுசெய்து இதற்கு முற்றுப்புள்ளி வைத்து, நல்லதொரு வாகை சூடி வலம் வருவதற்கு வழிவிடுங்கள். நல்லமுறையில் திரையுலகை வழிநடத்திச் செல்வோம்.
 
சிறுபடத் தயாரிப்பாளர்களுக்கு ஒன்று சொல்லிக் கொள்கிறேன். உங்களை இந்தத் திரையுலகம் கைவிடாது. இன்றைய காலகட்டத்தில் அனைவருமே உணர்ந்திருக்கிறார்கள். இந்த சிறுபடத் தயாரிப்பாளர்களுக்கு எந்த வகையில் உதவி செய்ய வேண்டும் என்பதை நாமெல்லாம் கூடிப்பேசி முடிவெடுப்போம். நமக்குள் ஒற்றுமை வேண்டும். இந்த ஒற்றுமையில்லாததால் வரும் பிரச்சினைதான் இது. இந்த ஒற்றுமைக்கு யார் தடையாக இருப்பார்கள் என்பது உங்களுக்குத் தெரியும்".
 
இவ்வாறு தயாரிப்பாளர் தாணு தெரிவித்துள்ளார்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

பாகுபலி 2 பிரமாண்ட வெற்றி… நடிகர் பிரபாஷ் நன்றி தெரிவித்து அறிக்கை !