தமிழ் சினிமாவில் விக்ரம் வேதா மற்றும் கைதி ஆகிய படங்களுக்கு இசையமைத்ததன் மூலம் கவனம் பெற்றவர் சாம் சிஎஸ். கைதி படத்தின் பாடல்களே இல்லை என்றாலும் இவர் அமைத்த பின்னணி இசை ரசிகர்களை வெகுவாகக் கவர்ந்தது.
அதன் காரணமாக பல முன்னணி நடிகர்களின் படங்களுக்கு இப்போது சாம் சி எஸ் பின்னணி இசை மட்டும் அமைக்க அழைக்கப்படுகிறார். சமீபத்தில் பாலாவின் வணங்கான் மற்றும் அல்லு அர்ஜுனின் புஷ்பா 2 ஆகிய படங்களுக்கு இவர் பின்னணி இசையமைத்தார். விரைவில் உருவாகவுள்ள கைதி 2 படத்தில் அனிருத்துடன் இணைந்து பணியாற்றவுள்ளார்.
இந்நிலையில் சாம் மீது தயாரிப்பாளர் சமீர் அலிகான் என்பவர் மோசடிப் புகாரை அளித்துள்ளார். அதில் “தமிழ்ப் பையன் இந்தி பொண்ணு” என்ற படத்துக்காக இசையமைக்க 25 லட்ச ரூபாய் பெற்றுக்கொண்டு ஏமாற்றியதாக குற்றச்சாட்டை வைத்துள்ளார்.
அதில் “2021 ஆம் ஆண்டு இந்த படத்துக்கு இசையமைக்க அவருக்கு 25 லட்ச ரூபாய் முன்பணம் கொடுத்தேன். ஆனால் அப்போது பணிகள் சில காரணங்களால் நின்றன. இப்போது படத்தை மீண்டும் தொடங்கியுள்ள நிலையில் படத்துக்கு இசையமைக்க மறுக்கிறார். அதே நேரம் வாங்கிய பணத்தையும் திரும்பக் கொடுக்க மறுக்கிறார்” எனக் கூறியுள்ளார்.