விஜய் டிவில் ஒளிபரப்பான கலக்கப்போவது யாரு, குக் வித் கோமாளி நிகழ்ச்சிகள் மூலமாக பிரபலமானவர் பாலா. தற்போது திரைப்படங்களிலும் நடித்து வரும் பாலா, ஏழை எளிய மக்களுக்காக பல உதவிகளையும் செய்து வருகிறார்.குக்கிராமங்களுக்கு ஆம்புலன்ஸ், வெள்ளத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவித்தொகை, பெட்ரோல் பங்க் ஊழியருக்கு பைக் என பாலா செய்து வரும் உதவிகள் தினம் தோறும் ட்ரெண்டாகி வருகின்றன.
இப்போது பாலா கதாநாயகனாக காந்தி கண்ணாடி என்ற படத்தில் நடிக்க அந்த படம் நேற்று ரிலீஸானது. இந்த படத்தில் பாலாஜி சக்திவேல் முக்கிய வேடத்தில் நடித்துள்ளார். இந்த படத்தை ஷெரிஃப் என்பவர் இயக்க, விவேக் மெர்வின் இசையமைக்கின்றனர். இந்த படம் ரிலீஸாகி பெரும்பாலும் பாசிட்டிவ்வான விமர்சனங்களைப் பெற்றுள்ளது. தமிழக அளவில் முதல் நாளில் சுமார் 17 லட்சம் ரூபாய் அளவுக்கு வசூலித்துள்ளது.
இந்நிலையில் செய்தியாளர்களை சந்தித்த பாலாவிடம் “நீங்கள் வேறொருவரின் பணத்தில்தான் நற்காரியங்கள் செய்வதாக ஒரு செய்தி உலாவுகிறதே” எனக் கேட்கப்பட்டது. அதற்கு பதிலளித்த பாலா “இதுவரை நான் கஷ்டப்பட்டு சம்பாதித்த பணத்தில்தான் நல்ல காரியங்கள் செய்துகொண்டிருக்கிறேன். யாரிடம் ஒரு ரூபாய் வாங்கியதில்லை. நான் இந்த இடத்தில் இருப்பதற்குக் காரணம் தமிழக மக்கள் போட்ட பிச்சைதான். அதை என்றைக்கும் நான் மறக்க மாட்டேன்” எனக் கூறியுள்ளார்.