தமிழில் ராஜா ராணி, தெறி, மெர்சல் மற்றும் பிகில் என அடுத்தடுத்து சூப்பர்ஹிட் படங்களைக் கொடுத்த இயக்குனர் அட்லி பாலிவுட் சென்று ஜவான் என்ற பிளாக்பஸ்டர் படத்தை ஷாருக் கானுக்குக் கொடுத்தார். இதன் மூலம் இந்தியா முழுவதும் கவனிக்கப்படும் இயக்குனர் ஆகியுள்ளார்.
இவர் தன்னுடைய படங்களுக்கான கதையை பிற படங்களில் இருந்து காப்பி அடிக்கிறார் என்ற குற்றச்சாட்டு இருந்தபோதும் தொடர்ந்து அவரது படங்கள் ஹிட்டாவதால் முன்னணி நடிகர்கள் அவர் படத்தில் நடிக்க விரும்புகின்றனர். தற்போது அல்லு அர்ஜுன் நடிப்பில் ஒரு மெகா பட்ஜெட் படத்தை இயக்கி வருகிறார்.
இந்நிலையில் இயக்குனர் அட்லிக்கு சென்னையில் உள்ள சத்யபாமா பல்கலைக்கழகம் கௌரவ டாக்டர் பட்டம் வழங்கி கௌரவித்துள்ளது. இந்த பட்டத்தை அவர் நேற்று பெற்றுக் கொண்டார். இந்நிலையில் மக்களவை உறுப்பினர் கார்த்தி ப சிதம்பரம் வெளியிட்டுள்ள பதிவு சர்ச்சையைக் கிளப்பியுள்ளது. அவரது பதிவில் “கௌரவ டாக்டர் பட்டமளிக்கும் வழக்கும் நிறுத்தப்பட வேண்டும். அப்படிப் பட்டம் பெற்றவர்கள் தங்கள் பெயருக்கு முன்னார் டாக்டர் என்று போட்டுக் கொள்வதையும் நிறுத்தவேண்டும்” எனக் கூறியுள்ளார். இதனால் அவர் அட்லியைதான் தாக்குகிறாரோ என்ற சந்தேகம் எழுந்துள்ளது.