கலாபவன்மணியின் மரணத்தில் மர்மம் இருப்பதாக புகார் எழுந்ததை அடுத்து சாலக்குடி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினார்கள். தற்போது 6 பேரிடம் உண்மை கண்டறியும் சோதனை நடத்தப்பட உள்ளது.
பிரபல மலையாள நடிகர் கலாபவன் மணி. இவர் தமிழ் படங்களிலும் நடித்துள்ளார். கடந்த மார்ச் மாதம் 4-ந்தேதி கேரளாவில் உள்ள பண்ணை வீட்டில் நடந்த மது விருந்தில் கலாபவன் மணியும் சிலரும் கலந்து கொண்டனர். மது விருந்தின்போது கலாபவன்மணி மயங்கி விழுந்தார். இதை தொடர்ந்து கொச்சியில் உள்ள ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்ட அவர், 6-ந்தேதி இறந்து விட்டார்.
கலாபவன்மணியின் மரணத்தில் மர்மம் இருப்பதாக புகார் எழுந்தது. பின்னர், பிரேத பரிசோதனை அறிக்கையில் அவரது உடலில் மெத்தனால் என்ற ரசாயனம் கலந்து இருந்தது தெரிய வந்தது. இதனால் கலாபவன் மணி கொலை செய்யப்பட்டாரா? தற்கொலை செய்து கொண்டாரா? என்ற கேள்வி எழுந்தது.
இதற்கான விடை அறிய கலாபவன் மணியின் மரணம் குறித்து மேலாளர் ஜோதி, கார் டிரைவர் பீட்டர், உதவியாளரும் கலாபவன்மணியின் மனைவியின் உறவினருமான பிஜுன், உதவியாளர்கள் அனீஷ், முருகன், அருண், ஆகிய 6 பேரிடம் , உண்மை கண்டறியும் சோதனை நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.
இதற்கு கோர்ட் அனுமதி அளித்த நிலையில், அவர்கள் 6 பேரையும் பெங்களூருக்கு அழைத்துச் சென்று போலீசார் உண்மை கண்டறியும் சோதனை நடத்த உள்ளனர்.