Publish Date: Wed, 09 May 2018 (22:25 IST)
Updated Date: Wed, 09 May 2018 (22:31 IST)
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த 'காலா' திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா இன்று சென்னையில் நடைபெற்றது. இந்த விழாவில் அரசியல் குறித்தும், தன்னை விமர்சனம் செய்தவர்களுக்கு பதிலடியும் ரஜினி தனது உரையில் தெரிவிப்பார் என்று ஆர்வத்துடன் வந்த ரசிகர்களை ரஜினி ஏமாற்றிவிட்டதாக கருதப்படுகிறது. உரையின் கடைசியில் இன்னும் நேரம் வரவில்லை என்றும் நேரம் வரும்போது கண்டிப்பாக முக்கிய அறிவிப்பை அறிவிப்பேன் என்றும் கூறினார்.
மேலும் ரஜினி இந்த விழாவில் பேசியதாவது: இமயமலைக்கு நான் செல்வதே கங்கையை பார்க்கத்தான். கங்கை ஒருசில இடத்தில் ஆக்ரோஷமாகவும், ஒருசில இடத்தில் அமைதியாகவும் இருக்கும்
என் வாழ்க்கையின் ஒரே கனவு தென்னிந்திய நதிகளை இணைத்துவிடுவதுதான். அதற்காக நான் முழு முயற்சியும் எடுப்பேன். அது என்னுடைய நீண்ட நாள் கனவும். அந்த கனவு முடிந்த பிறகு நான் கண்ணை மூடினாலும் பரவாயில்லை.
வாழ்க்கையில் ஒருவன் நல்லவனாக இருக்கலாம் . ஆனால் ரொம்ப நல்லவனாக இருக்ககூடாது என்பதை லிங்கா படம் மூலம் கற்றுக்கொண்டேன். மேலும் 65 வயதான நான் மகள் வயது நடிகையுடன் ஜோடி சேர்ந்து நடிக்க கூடாது என்பதையும் அந்த படத்தின் மூலம் கற்றுக் கொண்டேன்.
லிங்கா படம் கொஞ்சம் சரியாக போகாததால் லிங்காதான் எனது கடைசி படம் என்று சிலர் கூறினர். இதைத் தான் 40 ஆண்டுகளாக கூறி வருகின்றனர். என்னடா இந்த குதிரை ஓடிட்டே இருக்கே, 10 வருஷம், 20 வருஷம், 30 வருஷம், 40 வருஷம் பார்த்தாங்க இன்னும் நிக்காம ஓடுதேன்னு. நானா ஓடுறேன், ரசிகர்களாகிய நீங்கள் ஓட வைக்கிறீர்கள். ஆண்டவன் ஓட வைக்கிறான்.
யார் என்ன சொன்னாலும் சரி என் ரூட்ல நான் போய்கிட்டே இருப்பேன். ஊடகங்கள் எதிர்பார்ப்பு எனக்கு புரிகிறது. நான் என்ன செய்யறது கண்ணா இன்னும் நேரம் வரலை. நேரம் வந்துவிட்டால் மக்கள் ஆதரவுடன் தமிழகத்துக்கு நல்லது நடக்கும் இவ்வாறு ரஜினி பேசினார்.