கொரோனா பொதுமுடக்க நாட்களில் நேரடியாக ஓடிடியில் வெளியான க பெ ரணசிங்கம் திரைப்படம் வெற்றியைப் பெற்றது. இந்த படத்தில் வெளிநாட்டில் விபத்து ஒன்றில் இறந்து போன தனது கணவனின் உடலை போராடி இந்தியா கொண்டுவரும் மனைவியாக ஐஸ்வர்யா ராஜேஷ் நடித்திருந்தார். இதில் ஆங்காங்கே அரசியல் கருத்துகளை தெளித்திருந்தார் இயக்குனர் விருமாண்டி.
இந்த படத்தின் வெற்றியை அடுத்து அவரது அடுத்த படத்துக்கான கதையை எழுதி வந்தார் விருமாண்டி. அந்த கதையில் நடிக்க சசிகுமார் ஒப்பந்தம் ஆனார். ஆனாலும் அந்த படம் தொடங்கப்படவே இல்லை. இதற்குக் காரணம் சசிகுமாருக்கு தற்போது மார்க்கெட் இல்லை என்பதால் தயாரிப்பு நிறுவனம் தயங்குவதாக சொல்லப்படுகிறது. இதனால் இந்த படம் ட்ராப் செய்யப்பட்டு விட்டதாக சொல்லப்படுகிறது.
இந்நிலையில் தற்போது அவர் தன்னுடைய அடுத்த படத்துக்குத் தயாராகியுள்ளார். அவரின் அடுத்த படத்தில் அருண் விஜய் கதாநாயகனாக நடிக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த படத்தை BTG எண்டர்டெயின்மெண்ட் நிறுவனம் தயாரிக்கவுள்ளதாக சொல்லப்படுகிறது. இந்நிறுவனம் ஏற்கனவே அருண் விஜய்யின் ரெட்ட தல படத்தைத் தயாரித்து வருகிறது.