நடிகை தீபிகா படுகோனே தனது தந்தை பிரகாஷ் படுகோனே அவர்களின் 70-வது பிறந்தநாளை முன்னிட்டு, அவருக்கான சிறப்பு வாழ்த்தையும் ஒரு அரிய அன்பளிப்பையும் வழங்கினார். படுகோனே பள்ளி ஆஃப் பேட்மிண்டன் (Padukone School of Badminton - PSB) என்ற பெயரில், அவரது தந்தையின் வழிகாட்டுதலுடன் புதிய பேட்மிண்டன் பயிற்சி மையத்தை தொடங்கி வைத்தார்.
இந்த பள்ளி, இந்தியாவிலுள்ள 18 நகரங்களில் அதாவது பெங்களூரு, சென்னை, மும்பை, ஜெய்ப்பூர், கோயம்புத்தூர் உள்ளிட்ட நகரங்களில் முதல் ஆண்டிலேயே பயிற்சி வழங்க திட்டமிட்டுள்ளது. PSB முழுவதுமாக தீபிகா படுகோனேவால் நிறுவப்பட்டு நிதியுதவி செய்யப்படுகிறது.
தந்தையுடன் இருக்கும் புகைப்படத்தை இன்ஸ்டாவில் பகிர்ந்த தீபிகா, "பேட்மிண்டன் எனது வாழ்க்கையை உடல், மனம், உணர்வுப் பரிமாணங்களில் வடிவமைத்தது. இவ்விளையாட்டின் ஒழுக்கமும் மகிழ்ச்சியும் அனைவருக்கும் கிடைக்க வேண்டும் என்பதே PSB-வின் நோக்கம்" என உருக்கமாகத் தெரிவித்தார்.
தீபிகா தந்தை பிரகாஷ் படுகோனே இதுகுறித்து கூறியபோது "விளையாட்டு ஒவ்வொரு மாணவரின் வளர்ச்சியிலும் முக்கிய பங்கு வகிக்கிறது. PSB வழியாக தரமான பயிற்சியை எளிமையாகவும், மலிவாகவும் அனைவருக்கும் கொண்டு செல்லவே நாங்கள் உறுதிபெற்றுள்ளோம்" என்றார்.
இந்த முயற்சி, இந்திய பேட்மிண்டனில் ஒரு புதிய அத்தியாயத்தை தொடக்கிறது.