வரும் 30ஆம் தேதி முதல் ஸ்டிரைக் அறிவித்த சங்கத் தலைவர், அது நடப்பதற்கான எந்த அறிகுறியும் இல்லாததால், வாபஸ் வாங்கிவிடலாம் என நினைக்கிறாராம்.
சினிமாவுக்கு சில கோரிக்கைகளை நிறைவேற்றித் தரக்கோரி மத்திய, மாநில அரசுகளிடம் மனு கொடுத்தார் தயாரிப்பாளர்கள் சங்கத் தலைவரான உயர நடிகர். அந்த கோரிக்கைகளை உடனே நிறைவேற்றாவிட்டால், வரும் 30ஆம் தேதி முதல் வேலை நிறுத்தம் என அறிவித்தார். ஆனால், அரசுகள் அவரைக் கண்டுகொள்ளவே இல்லை.
இந்நிலையில், வேலை நிறுத்தத்திற்கு சினிமா சங்கங்களிடம் இருந்து எதிர்ப்பு கிளம்பியுள்ளது. தியேட்டர் உரிமையாளர்கள் வெளிப்படையாகவே எதிர்க்க, மற்ற சங்கங்களும் போராட்டத்தில் ஈடுபடப் போவதில்லை என முடிவெடுத்துள்ளதாம். இந்தத் தகவல் தலைவர் காதுக்கு வர, ‘ஒரு கோரிக்கையையாவது உடனே நிறைவேற்றிக் கொடுங்க. இல்லேன்னா என் மானம் போயிடும்’ என்று நேற்று முதல்வரைச் சந்தித்தபோது கெஞ்சினாராம். அப்படி ஏதாவது ஒரு கோரிக்கை நிறைவேற்றினால் கூட, அதைச் சொல்லியே ஸ்டிரைக்கை வாபஸ் வாங்கிவிடலாம் என நினைக்கிறாராம்.