நடிகர் அல்லு அர்ஜுன் நடிப்பில் சுகுமார் இயக்கத்தில் வெளியான புஷ்பா இரண்டு பாகங்களும் மிகப்பெரிய வெற்றியைப் பெற்றன. இந்த படம் தமிழ், தெலுங்கு, இந்தி மற்றும் கன்னடம் ஆகிய மொழிகளில் பேன் இந்தியா படமாக வெளியானது. இரு பாகங்களும் சேர்த்து 2200 கோடி ரூபாய்க்கு மேல் வசூலித்துள்ளன.
இதையடுத்து இந்தியாவின் அதிக சம்பளம் வாங்கும் நடிகர்களில் ஒருவராகியுள்ளார் அல்லு அர்ஜுன். அடுத்து அவர் அட்லி இயக்கத்தில், தீபிகா படுகோனுடன் இணைந்து ஒரு படத்தில் நடிக்கிறார். இந்த படத்தை முடித்ததும் அவர் த்ரி விக்ரம் இயக்கத்தில் ஒரு படத்தில் நடிக்கவுள்ளார்.
இதற்கிடையில் அவர் இப்போது மலையாள நடிகரும் இயக்குனருமான பாசில் ஜோசப் இயக்கத்தில் ஒரு படத்தில் நடிக்கப் பேச்சுவார்த்தை நடத்துவதாக சொல்லப்படுகிறது. இந்த படத்தை அல்லு அர்ஜுனின் தந்தையின் தயாரிப்பு நிறுவனமான கீதா ஆர்ட்ஸ் நிறுவனம் தயாரிக்க உள்ளதாக சொல்லப்படுகிறது.
மேலும் இந்த படத்தில் அல்லு அர்ஜுன் சக்திமான் வேடத்தில் நடிக்கவுள்ளதாக சொல்லப்படுகிறது. சக்திமான் சீரியலின் தயாரிப்பாளரும் நடிகருமான முகேஷ் கன்னா அதைப் படமாக்க முயற்சித்து வருகிறார். அதற்காக சில பாலிவுட் நடிகர்கள் ஒப்பந்தம் ஆகி பின்னர் விலகினர் என்பது குறிப்பிடத்தக்கது.