தமிழ் சினிமாவின் உச்ச நட்சத்திரங்களில் ஒருவராக இருப்பவர் நடிகர் அஜித். அவர் நடிப்பில் கடைசியாக வெளியான குட் பேட் அக்லி திரைப்படம் மிகப்பெரிய வெற்றி பெற்று வசூலை வாரிக் குவித்துள்ளது. தற்போது சினிமாவுக்கு வெளியே கார் பந்தயங்களிலும் ஆர்வமாக ஈடுபட்டு வருகிறார் அஜித்.
கலைத்துறையில் அவர் செய்த பங்களிப்புக்காக இந்தியாவின் உயரிய விருதுகளில் ஒன்றான பத்ம பூஷன் சமீபத்தில் அளிக்கப்பட்டது. அதைப் பெற்றுக் கொண்டு சென்னைத் திரும்பினார். இந்நிலையில் பல ஆண்டுகளுக்குப் பிறகு ஆங்கில ஊடகம் ஒன்றுக்கு அவர் நேர்காணல் அளித்துள்ளார். அதில் பல விஷயங்களை அவர் மனம் திறந்து பேசியுள்ளார்.
அந்த நேர்காணலில் நடிகர்களுக்கு சமூகப் பொறுப்பு இருக்க வேண்டுமா?” என்ற கேள்விக்குப் பதிலளித்த அவர் “நான் பிங்க் படத்தின் ரீமேக்கில் நடிக்கக் காரணமே அதற்கு முந்தைய என்னுடைய சில படங்கள் எனக்கு அளித்தக் குற்றவுணர்வுதான். பெண்களை ஸ்டாக்கிங் (Stalking) செய்வதைப் போல உணர்ந்தேன். சில நேரங்களில் மக்கள் திரையில் பார்ப்பதை அப்படியேப் பின்பற்ற நினைக்கிறார்கள். அதனால் என்னுடைய முந்தையப் படங்களுக்குப் பிராயச்சித்தமாக நேர்கொண்ட பார்வை படத்தில் நடித்தேன்” எனக் கூறியுள்ளார்.