தமிழ் சினிமாவில் இயக்குனராகவும் நடிகராகவும் அறியப்பட்ட எஸ் எஸ் ஸ்டான்லி உடல்நலக் குறைவு காரணமாக காலமாகியுள்ளார். அவருக்கு வயது 58. ஸ்டான்லி தமிழ் சினிமாவில் ஏப்ரல் மாதத்தில் என்ற கல்லூரி கால இளைஞர்களைப் பற்றிய படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானார்.
இந்த படம் வெற்றியடைந்ததை அடுத்து தனுஷ் நடித்த புதுக்கோட்டையில் இருந்து சரவணன் என்ற படத்தை இயக்கினார். இந்த படம் பெரிய வெற்றிப் படமாக அமையவில்லை. அதன் பின்னர் அவர் இயக்கிய மெர்க்குரிப் பூக்கள் மற்றும் கிழக்குக் கடற்கரை சாலை ஆகிய படங்களும் தோல்விப் படங்களாக அமைய அதன் பின்னர் அவர் படங்கள் இயக்கவில்லை.
ஒருகட்டத்தில் நடிகராக தன்னுடைய திரைப் பயணத்தைத் தொடங்கினார். பெரியார் படத்தில் அண்ணாவின் வேடத்தில் ஸ்டான்லி நடித்திருந்தது அவரது நடிப்பு வாழ்க்கையில் குறிப்பிடத்தக்கதாக அமைந்தது. சமீபத்தில் விஜய் சேதுபதியின் மகாராஜா படத்தில் நடித்திருந்தார்.