சிலர் பால் போளி மைதாவில் மட்டும் செய்வார்கள். மைதாவில் மட்டும் செய்தால் ஜவ்வென்று ரப்பர் மாதிரி வந்து விடும். சிறிதளவு சிரோடி ரவை என்று சொல்லப்படும் பம்பாய் ரவையையும் சேர்த்தால் ரபப்ர் மாதிரி வராது போளி மிருதுவாக இருக்கும்.
முதலில் பூரி தயாரிக்க மாவு பிசைந்து கொள்ள வேண்டும்.
தேவையான பொருட்கள்
மைதா 2 கப்
ரவா 1/2 கப் (வறுக்கத் தேவையில்லை)
நெய் 2 மேஜைக் கரண்டி. சூடாக உருக்கிக் கொள்ளவும்.
இவை மூன்றையும் சேர்த்து கெட்டியான மாவாகப் பிசைந்து கொள்ளவும். மெல்லிய வட்டங்களாக இட வேண்டும்.
பால் 2 லிட்டர்
சர்க்கரை 2 டம்ளர்
பச்சைக் கற்பூரம் 1 சிட்டிகை
குங்குமப்பூ 1 சிட்டிகை
பாலை நன்றாகக் கொதிக்க விட்டு நன்றாகச் சுண்டியவுடன் சர்க்கரை, குங்குமப்பூ சேர்த்துக் கீழே இறக்கி வைத்துக் கொள்ளவும்.
அடுப்பில் எண்ணெய் அல்லது நெய் விட்டு, மிதமான தீயில், மெல்லிய வட்டங்களாக இட்ட பூரியைப் பொறித்து, சூட்டுடனேயே பாலில் முக்கி, ஒரு தாம்பளத்தில் போட்டு, ஒவ்வொன்றாக மடித்து வைத்து விடவும்.
கடைசியில், பாலை அந்த போளியின் மேலேயே ஊற்றி வைத்தால் நன்றாக ஊறிவிடும்.
முந்திரி, பாதாம் பிஸ்தா தூவி அலங்கரித்துப் பரிமாறவும்.