Publish Date: Wed, 02 Mar 2016 (09:50 IST)
Updated Date: Wed, 02 Mar 2016 (11:53 IST)
தமிழக சட்டமன்றத்திற்கு விரைவில் தேர்தல் வரவுள்ள நிலையில், அரசியல் கட்சிகள் தேர்தல் பணிகளில் தீவரமாக ஈடுபட்டு வருகின்றனர்.
இந்நிலையில், தேர்தல் கூட்டணி தொடர்பான பேச்சுவார்த்தைகள் சூடுபிடிக்கத் தொடங்கியுள்ளன.
பொதுவாக விஜயகாந்த் எந்த கூட்டணிக்குச் செல்வார் என்பதே அனைவரின் பெரும் எதிர்பார்ப்பு.
இதற்கிடையே காஞ்சிபுரத்தில் நடைபெற்ற தேமுதிக மாநாட்டில் கூட்டணி குறித்து விஜயகாந்த் அறிவிப்பார் என்று எரிர்பார்க்கப்பட்டது. ஆனால், ஏமாற்றமே ஏற்பட்டது.
இதைத் தொடர்ந்து, திமுக, மக்கள் நல கூட்டணி, மற்றம் பாஜக ஆகியவை விஜயகாந்தை தங்கள் கூட்டணிக்கு இழுப்பதற்கான பேச்சு வார்த்தைகளை நடத்தி வந்தனர்.
அதன்படி, பாஜகவின் தமிழகப் பொறுப்பாளர் பிரகாஷ் ஜவடேகர் தமிழகம் வந்து விஜயகாந்துடன் பேச்சுவார்த்தை நடத்தினார்.
ஆனால், அந்த பேச்சுவார்த்தையில் உடன்பாடு எட்டவில்லை. எனவே, விஜயகாந்துடன் மீண்டும் பேச்சுவார்த்தை நடத்த பாஜக தலைவர் அமித்ஷா மற்றும் பிரகாஷ் ஜவடேகர் ஆகியோர் தமிழகம் வரவுள்ளதாக கூறப்படுகின்றது.
இந்நிலையில், விஜயகாந்துடன் பேச்சு வார்த்தை நடத்திய திமுக, தேமுதிகவிற்கு 60 இடங்களை ஒதுக்க ஒப்புக்கொண்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
திமுக கூட்டணிக்கு தேமுதிக வந்தால் உள்ளாட்சித் தேர்தலிலும் தங்கள் பலம் அதிகரிக்க வாய்ப்பிருப்பதாகவும், அதேசமயம் அதிமுகவிற்கு முடிவுகட்ட வாய்ப்பாக அமையும் என்று விஜயகாந்த் கருதுவதாகவும் சொல்லப்படுகின்றது.
இந்த கூட்டணி குறித்த முறையான அறிவிப்பு இன்னும் சில தினங்களில் வெளியாகும் என்று கூறப்படுவது குறிப்பிடத்தக்கது.