Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

குளிர்சாதனப் பெட்டி

குளிர்சாதனப் பெட்டி

Webdunia

அட்சரம் (இதழ் - 4)
டிசம்பர் 2002-பிப்ரவரி 2003
ஆசிரியர் - எஸ். ராமகிருஷ்ணன்

தமிழ் புனைவியலின் வரைபடம் என்ற முழக்கத்தை முகப்பில் தாங்கிவரும் `அட்சரம்' என்ற சிற்றிதழ் எழுத்தாளர் எஸ். ராமகிருஷ்ணனின் முயற்சியில் வெளிவருகிறது. புனைக்கதைகளுள் புதிய வடிவங்களை புகுத்தும் பல கதைகளை இச்சிற்றிதழ் இந்த இதழில் வழங்கியுள்ளது. பின் நவீனத்தில் அல்லது கற்பனாதீத தொர்த்த வகையைச் சேர்ந்த எழுத்துக்கள் லத்தீன் அமெரிக்காவிற்கு வெளியே எப்படி வளர்ந்து வருகிறது என்பதை இந்த இதழின் "சிறப்புப்பகுதி" என்ற மொழிபெயர்ப்பு கதைகள் உணர்த்தும். இந்தப் பகுதியிலிருந்து இசபல் ஸாஜ்ஃபெர் எழுதிய "குளிர்சாதனப் பெட்டி" என்ற பிரஞ்சுக் கதையை வெப் வாசகர்களுக்குத் தருகிறோம்)

குளிர்சாதனப் பெட்டி
-இசபெல் ஸாஜ்ஃபெர் ஃப்ரான்ஸ

என்னுடைய பாட்டி இறந்துவிட்ட பிறகு, அவள் ஒரு இடுகாட்டிற்குப் போக மறுத்தாள். நாங்கள் என்ன சொல்ல இயலும்?

குளிர்சாதனப் பெட்டியிலிருந்த கீழ்தள அடுக்குகளை அகற்றிவிட்டு, அங்கே அவளை இடுப்புப் பகுதியிலிருந்து நேராய் நிமிர்த்தி காய்கறி வைக்கும் ட்ரேயில் பொருத்தி வைத்தோம். நாங்கள் கைப்பிடியை இழுத்துத் திறக்கும் போதெல்லாம் அவள் புன்சிரிப்பாய்க் கேட்பாள் - ஹாய், எப்படியிருக்கிறாய் இன்று? நாங்கள் குளிர்சாதனப் பெட்டியின் கதவைத் திறந்து வைத்தபடி, அவளோடு அளவளாவியபடியே காலை உணவை உட்கொள்வோம்.

அவளால் பெரிய பிரச்சனை எதுவுமில்லை. ஒரே ஒரு கஷ்டம் அவள் ஆக்கிரமித்துக் கொண்ட இடம்தான். அவளுடைய உணர்வுகளைப் புண்படுத்த விருப்பமில்லை என்றாலும் எங்களுக்கு உணவுப் பொருட்களையும், பானங்களையும் பாதுகாப்பாக வைத்துக் கொள்ள வேண்டிய தேவையிருந்தது. அவளுக்குத் தெரியாமல் இரண்டாவது குளிர்சாதனப் பெட்டியொன்றை வாங்கி வந்தோம். அதை உபயோகப்படுத்தத் தொடங்கினோம். ஆனால் அது குறித்து அவளுக்கு சந்தேகம் உண்டாக அதிக நாளாகவில்லை. எங்கே போயிருந்தீர்கள்? என்று கேட்டாள் அவள். எனக்கு உங்களை உளவு பார்க்க விருப்பமொன்றுமில்லை.

ஆனால் ஒரு முழு நாள் உங்களைக் காணவில்லையென்றால் எனக்குக் கவலையாகி விடுகிறது என்று அழுதாள். நாங்கள் அவளை அணைத்துக் கொண்டோம். அவள் கழுவப்படாத கீரையாய் வாடையடித்தாள்.

என்னுடைய பெற்றோர்கள் பிரிந்துவிட முடிவு செய்தார்கள். அம்மா, மெஜோரடாவில் உள்ள ஆசிரமம் ஒன்றுக்குச் சென்றாள். அப்பா நியூயார்க் நகருக்குக் குடி பெயர்ந்தார். என்னுடைய சகோதரன் கல்லூரிக்குச் செல்ல, நான் தனியாகப் பாட்டியுடன் வீட்டில் தங்கியிருந்தேன். ஒரு நாள் இரவு என்னுடைய ஆண் நண்பன் அவள் இருக்கும் குளிர்சாதனப் பெட்டியைத் தவறுதலாகத் திறந்துவிட பயந்து போய் வீறிட்டு அலறினாள் அவள்.

அவனும் பயத்தில் அலறினான். அவனிடம் அவளைப் பற்றி நான் கட்டாயம் கூறியிருந்திருக்க வேண்டும் என்று எனக்குத் தோன்றியது. அதற்குப் பிறகு அவன் என்னைத் தேடி என் இடத்திற்கு ஒரு போதும் வரவேயில்லை. அம்மா ஆண்களை வீட்டில் அங்குமிங்கும் அலைய அனுமதிப்பது தொடர்பாக பாட்டி எனக்கு ஒரு நீண்ட உரையாற்றினாள். ஆனால் நான் அதை காது கொடுத்துக் கேட்கவில்லை. அவள் முகத்திலறைவதாய் குளிர்சாதனப் பெட்டியின் கதவை படீரெனச் சாத்தினேன். இது என்னைக் கொடூர மனுஷியாய்ப் புரிய வைத்தாலும் சரி, அதைப் பற்றி எனக்குக் கவலையில்லை. நான் அந்த வீட்டைவிட்டு வெளியேறிவிட்டேன். அக்கம்பக்கத்தார் உள்ளே வந்து மெஜோராடோவிலிருந்து அம்மா திரும்பி வரும்வரை பாட்டியைப் பார்த்துக் கொண்டார்கள்.

Share this Story:

Follow Webdunia tamil