Publish Date: Mon, 11 Jan 2016 (12:00 IST)
Updated Date: Mon, 11 Jan 2016 (12:04 IST)
வரலட்சுமியின் சினிமா கரியர் அவ்வளவு பிரகாசமாக இல்லை. முதல்படம் போடா போடி பலவருட போராட்டங்களுக்குப் பிறகு வெளியாகி சொற்ப தினங்களே ஓடியது. இரண்டாவது படம், மத கஜ ராஜா இன்னும் வெளியாகவில்லை, வெளியாகும் என்று தோன்றவும் இல்லை. அவர் மூன்றாவதாக நடித்திருக்கும் தாரை தப்பட்டை எந்த சிக்கலும் இல்லாமல் பொங்கலுக்கு வெளியாகிறது. இதுவே ஆனந்தம்தான்.
தாரை தப்பட்டையில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது எப்படி?
திடீரென்று ஒருநாள் பாலா சாரிடமிருந்து போன் வந்தது. உடனே அவரோட ஆபிசுக்கு வரச்சொன்னார். போனேன். என்னுடைய அடுத்தப் படத்தில் தாரை தப்பட்டையில் நீ கரகாட்டக்காரி வேடத்தில் நடிக்கிற, ஓகேயா என்று கேட்டார். கரும்பு தின்ன கூலியா? உடனே ஒத்துகிட்டேன்.
இந்தப் படத்துக்காக கரகாட்டம் கத்துகிட்டீர்களா?
ஆமாம். எனக்கு ஏற்கனவே நடனம் தெரியும் என்பதால் கரகாட்டம் கற்றுக் கொள்வது எளிதாகத்தான் இருந்தது. படப்பிடிப்பில் கரகாட்டம் ஆடும் பெண்களை வரவழைத்து அவர்களின் உடல்மொழி, பேச்சு வழக்கை கற்றுக் கொண்டேன்.
படத்தில் உங்க கதாபாத்திரம் பற்றி சொல்லுங்க?
படத்தில் என்னுடைய கதாபாத்திரப் பெயர் சூறாவளி. சசிகுமார் குரூப்பில் ஆடுற பெண். படம் முழுக்க துறுதுறுன்னு வர்ற கதாபாத்திரம்.
செம ஆட்டம் போட்டிருக்கிறீர்களாமே?
ஆமா, செம குத்தாட்டம் போட்டிருக்கேன். பிருந்தா மாஸ்டர், ராதிகா மாஸ்டர், பாபா மாஸ்டர் மூணு பேரும் சேர்ந்து என்னை கசக்கி பிழிஞ்சிட்டாங்க.
பாலா படத்தில் நடிப்பது எப்படியிருந்தது?
பாலா சார் சீன் சொல்லும் போதே அந்த கதாபாத்திரமா நம்மை மாத்திடுவார். நாமும் கதாபாத்திரமாகவே மாறிடுவோம். அப்புறம் நடிக்க வேண்டியதே இல்லை.
பாலாவிடம் தங்க சங்கிலி பரிசு வாங்கியது எதற்கு?
ஒருமுறை கண்ணாடியை உடைக்கிற சீன். கையில் காயம் படும்னு எல்லாம் யோசிக்காம உடைச்சேன். கண்ணாடி தோள்ல கீறிடுச்சி. ஆனா, சீன் பிரமாதமாக வந்தது. அந்த இடத்திலேயே தங்க சங்கிலி போட்டு பாராட்டினார் பாலா சார்.
அவர் படத்தில் நடித்ததை எப்படி ஃபீல் பண்றீங்க?
பாலா சார் ஒரு பல்கலைக்கழகம். அங்க படிச்சு பட்டம் வாங்கிட்டா எங்க வேணும்னாலும் வேலை பார்க்கலாம்.