Publish Date: Wed, 23 Mar 2016 (12:50 IST)
Updated Date: Wed, 23 Mar 2016 (13:01 IST)
தோழா படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பில் நடிகர் நாகார்ஜுனாவும் கலந்து கொண்டார்.
பல வருடங்களுக்குப் பிறகு அவர் நடித்துள்ள நேரடிப் படம் இது. பேச்சில் தமிழ் ரசிகர்கள் மீதான அவரது பாசம் வழிந்தோடியது. பத்திரிகையாளர்கள் சந்திப்பில் அவர் அளித்த பேட்டியின் விவரம்.
உங்கள் முதல் தமிழ்ப் படம் இதயத்தை திருடாதே பற்றி...?
அந்தப் படத்துக்கு முன்னால் பல விஷயங்கள் செய்திகிட்டிருந்தேன். யாராவது லிப்ஸ்டிக் போடுங்கன்னு சொல்வாங்க. ஜீன்ஸ் போடாதீங்கன்னு சொல்வாங்க. அதை அப்படியே செய்திட்டிருந்தேன்.
ஆனா, மணிரத்னம் தாடி வளர்க்கச் சொன்னார். ஜீன்ஸ் போட்டு நைக் ஷு போடச் சொன்னார். அதை போட்டு நடித்த பிறகு அந்தக் கால இளைஞர்கள் மத்தியில் நல்ல பேர் கிடைத்தது.
இப்போதும் விமான நிலையத்தில் தமிழ் ரசிகர்கள் பார்த்தால் அந்தப் படத்தில் வர்ற ஓடிப்போலாமா வசனத்தைதான் பேசிக் காட்டுவாங்க.
கடைசியாக நடித்த ரட்சகன்...?
அந்தப் படத்தை ரஹ்மானின் இசைக்காகவே ஒப்புக் கொண்டேன். இப்போதும் அப்படத்தில் வரும் நரம்பு புடைக்கும் காட்சி இங்கு பிரபலம்.
ஏன் அதிகமாக தமிழில் நடிப்பதில்லை?
என்னை நல்ல படங்களில் மட்டுமே பார்க்க தமிழ் ரசிகர்கள் ஆசைப்படுறாங்க. அதனால்தான் இங்க அதிகமா நடிக்கிறதில்லை.
தோழாவில் நடித்தது பற்றி...?
நானும் அமலாவும் இன் டச்சபிள்ஸ் படத்தை சேர்ந்து பார்த்தோம். இதேபோல ஒரு கதை வந்தா நிச்சயம் நடிப்பேன்னு அமலாவிடம் சொன்னேன்.
இரண்டு நாள் கழிச்சி வம்சி இதே கதையோட தயங்கியபடி வந்தார். அவர் இன்டச்சபிள்ஸ் டிவிடியை தந்ததும், அந்த வீல்சேர் கதாபாத்திரம்தானேன்னு கேட்டேன். ஏன்னா, அது எனக்கு ரொம்பப் பிடிச்சிருந்தது.
அமலாவுக்கும் என்னுடைய மகன்களுக்கும் நான் வீல்சேர் கதாபாத்திரத்தில் நடித்தது பிடிக்கலை. படத்தை பார்த்தாங்கன்னா கட்டிப் பிடிச்சி பாராட்டுவாங்கன்னு நினைக்கிறேன்.
படத்தில் என்னை கவனித்துக் கொள்ளும் கதாபாத்திரத்தில் கார்த்தியை நடிக்க வைக்கலாமா என்று கேட்டதும் சரின்னு சொன்னேன். பருத்திவீரன் படத்தை பார்த்து பிரமித்து யார் இவர்னு கேட்டேன். அப்போது தான் எனக்கு அவர் சூர்யாவின் தம்பி கார்த்தின்னு தெரியும்.
இதில் நான் தமிழ் பேசி நடிப்பதற்கும், டப்பிங் பேசுவதற்கும் கார்த்தி எனக்கு நிறைய உதவி புரிந்திருக்கிறார்.