Publish Date: Tue, 22 Dec 2015 (13:34 IST)
Updated Date: Tue, 22 Dec 2015 (13:41 IST)
பசங்க 2 படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு. வித்தியாசமான படம் அதிக எதிர்பார்ப்பாலும், தவறான எதிர்பார்ப்பாலும் கவனிக்கப்படாமல் போகக் கூடாது என்ற எச்சரிக்கையுடன் பேசினார் சூர்யா. தயாரிப்பாளருக்கான முதிர்ச்சி தெரிகிறது அவரது பேச்சில்.
பசங்க 2 படத்தை தயாரிக்க என்ன காரணம்?
நல்ல கதை ஒன்றை படமாக தயாரிக்க முடிவு செய்து காத்திருந்தேன். அப்போது பாண்டிராஜ் இந்த படத்தின் கதையை சொன்னார். ரொம்ப பிடித்தது. உடனே தயாரிக்க முடிவு செய்தேன்.
பசங்க 2 படம் எப்படிப்பட்டது?
என் குழந்தைப் பருவம் அப்பாவுடனும் அம்மாவுடனும் விளையாட்டிலும் மகிழ்ச்சியாக கழிந்தது. ஆனால் இப்போதைய குழந்தைகளை அறைக்குள்ளேயே அடைத்து வைக்கிறோம். வெளியே விடுவதில்லை. இதனால் அவர்கள் மனநிலை மாறுகிறது. அந்த விஷயங்கள் இந்த படத்தில் இருக்கிறது. குழந்தைகளும், பெற்றோரும் பார்க்கும் படமாக தயாராகி உள்ளது.
இந்தப் படத்துக்கும் உங்களின் மற்ற படங்களுக்கும் என்ன வித்தியாசம்?
பெற்றோர்கள், ஆசிரியர்கள், டாக்டர்கள் என பலரிடம் கலந்தாய்வு செய்து இந்த படம் உருவாக்கப்பட்டுள்ளது. நான் நடிக்கும் படங்களில் எப்போதும் 250 பேர் சூட்டிங்கில் இருப்பார்கள். ஆனால் ‘பசங்க-2’ படப்பிடிப்பில் 15 பேர் தான் இருந்தார்கள். அவ்வளவு எளிமையாக படப்பிடிப்பு நடத்தப்பட்டது.
மேலும் அடுத்த பக்கம் பார்க்கவும்....
இது குழந்தைகளுக்கான படமா?
பெற்றோர்களுக்கும் குழந்தைகளுக்கும் பாடமாக இந்த படம் இருக்கும். பொதுவாக இளைஞர்களுக்கான படங்களே அதிகம் வருகின்றன. குழந்தைகள், வீட்டில் இருக்கும் பெண்களுக்கான படங்கள் குறைவாக வருகிறது. அந்தக் குறையை இது போக்கும்.
இந்தப் படத்தைப் பற்றி தயாரிப்பாளராக உங்க கருத்து என்ன?
வித்தியாசமான படங்கள் தமிழில் வர வேண்டும். ‘தங்கமீன்கள்’, ‘காக்கா முட்டை’ படங்கள் அதுபோல் வந்திருந்தன. குழந்தைகள் படம் பார்க்க ஆசைப்பட்டால், ‘கார்ட்டூன்’ படங்களுக்கு தான் அழைத்து போக வேண்டிய நிலைமை உள்ளது. அவர்களுக்கான ஒரு நல்ல படமாக ‘பசங்க-2’ இருக்கும்.
உங்க ரசிகர்களுக்கு என்ன சொல்ல விரும்புகிறீர்கள்?
என் ரசிகர்கள் வழக்கமான என்னுடைய படம் என்ற எதிர்பார்ப்புடன் வர வேண்டாம். இது குழந்தைகள் படம். ஆனால் ரசிகர்களும் இந்த படம் மூலம் நிறைய கற்றுக்கொள்ளலாம்.