Publish Date: Tue, 15 Dec 2015 (11:35 IST)
Updated Date: Thu, 07 Jan 2016 (13:47 IST)
பழசை மறக்காதவர் எஸ்.பி.பாலசுப்பிரமணியம். சின்ன வயதில்தான் படித்த நகரி அரசு உயர்நிலைப் பள்ளியின் ஆண்டுவிழாவில் அவர் கலந்து கொண்டார். அப்போது மலரும் நினைவுகளில் மூழ்கிய அவர் கூறியவை உங்களுக்காக.
எஸ்.பி.பி. சினிமாவில் பாட ஆரம்பித்து 50 வருடங்கள் ஆகிறது. இத்தனை வருடங்கள் அவரால் எப்படி முன்னணி பாடகராக தாக்குப் பிடிக்க முடிந்தது?
நான் சினிமா பின்னணி பாடகராக அறிமுகமாகி 50 வருடங்கள் ஆகிறது. இத்தனை ஆண்டுகள் சினிமாவில் இருப்பது கஷ்டம். கடவுளின் அனுக்கிரகம், ரசிகர்கள் ஆதரவு, அதிர்ஷ்டம் போன்றவற்றால் இன்னும் நான் பாடகராக நீடிக்கிறேன்.
பலரது சின்ன வயது ஆசை ஒன்றாக இருக்கும். ஆனால், கிடைத்தது வேறொன்றாக இருக்கும். எஸ்.பி.பி.க்கு எப்படி?
சிறு வயதிலேயே பாடுவதில் எனக்கு இஷ்டம். பள்ளிக்கூடத்தில் கடவுள் வாழ்த்து, ஜனகனமன பாடுவதற்கெல்லாம் என்னைத்தான் அழைப்பார்கள்.
முதல் சினிமா வாய்ப்பு...?
சினிமாவில் முதன்முதலாக எம்.ஜி.ஆர் படத்தில், ‘‘ஆயிரம் நிலவே வா ஓராயிரம் நிலவே வா’’ என்ற பாடலை பாட வாய்ப்பு கிடைத்தது.
டி.எம்.சவுந்தர்ராஜன் என்ற சிங்கத்தை கடந்து எம்.ஜி.ஆர். சிவாஜிக்கு பாடுவது என்பது சிம்மச் சொப்பனம். அதுவும் முதல் பாடலே எம்.ஜி.ஆருக்கு என்றால்...?
எம்.ஜி.ஆர். பெரிய நடிகர். அவர் படத்தில் பாடுவது எனக்கு பயமாக இருந்தது. அதோடு டி.எம்.சவுந்தரராஜன் பெயரை சொல்லி நண்பர்களும் என்னை பயமுறுத்தினார்கள். அப்போது எம்.ஜி.ஆரும் சிவாஜி கணேசனும் உச்சத்தில் இருந்தனர். இருவருக்கும் இடையே போட்டியும் நிலவியது. அவர்கள் படங்களில் எல்லா பாடல்களையும் டி.எம்.சவுந்தரராஜன்தான் பாடி வந்தார். இருவர் குரலுக்கேற்ற மாதிரி வித்தியாசமாக பாடுவதில் டி.எம்.சவுந்தரராஜன் வல்லவர். சிவாஜி கணேசன் குரல் மாதிரியே அவரது படங்களில் பாடுவார்.
எம்.ஜி.ஆர் படங்களில் அவர் பாடுவது மாதிரியே வேறு குரலில் பாடுவார். எனவே டி.எம்.சவுந்தரராஜனிடம் என்னால் தாக்குப்பிடிக்க முடியாது என்று பயமுறுத்தினர். ஆனால் ‘ஆயிரம் நிலவே’ பாட்டுக்கு நல்ல வரவேற்பு கிடைத்தது.
பிடித்த பாடல்...?
நான் பாடியதில் எனக்கு மிகவும் பிடித்தது ‘‘கம்பன் ஏமாந்தான் இளம் கன்னியரை ஒரு மலர் என்றானே கற்பனை செய்தானே கம்பன் ஏமாந்தான்’’ என்ற பாடல். ஒரு இளைஞன் பெண்ணை கேலி செய்வது போலவும் அழகை வர்ணிப்பது போலவும் அந்த பாடல் இருந்தது. கமல்ஹாசன் படத்தில் அது இடம்பெற்றது. இதற்காக கமல்ஹாசன் குரலில் பாடினேன்.
கமலின் ரியாக்ஷன் எப்படியிருந்தது?
பாடலை கமல்ஹாசன் கேட்டுவிட்டு பாடலிலேயே நடிப்பு உணர்ச்சிகளை வெளிப்படுத்தி விட்டீர்கள். இதனால் எனக்கு இந்த பாடலில் நடிப்பது சுலபமாக இருந்தது என்று பாராட்டினார்.
இப்போதும் குரல் இனிமையாக உள்ளதே?
அது கடவுளின் அருள். கடைசி மூச்சு உள்ளவரை பாடிக்கொண்டே இருப்பேன்.