ரஜினி சாரின் பாராட்டை வாழ்நாளில் மறக்க முடியாது - சிவ கார்த்திகேயன் பேட்டி
ரஜினி சாரின் பாராட்டை வாழ்நாளில் மறக்க முடியாது - சிவ கார்த்திகேயன் பேட்டி
தயாரான சூட்டோடு வெளியானால்தான் எந்தப் படமும் வெற்றி பெறும். அந்த இலக்கணத்தை மாற்றி எழுதியுள்ளது ரஜினி முருகன்.
பல மாதங்கள் பெட்டிக்குள் கிடந்த படம் வெளியாகி பட்டையை கிளப்புகிறது. ரசிகர்களுடன் அடிக்கடி உரையாடி தனது ரசிக பலத்தை தக்க வைத்து கொள்கிறார் சிவ கார்த்திகேயன். அப்படி தனது ட்விட்டர் பக்கத்தில் ரசிகர்கள் கேட்ட கேள்விகளுக்கு சிவ கார்த்திகேயன் அளித்த பதில்கள் இவை.
இரட்டை வேடத்தில் நடிப்பீர்களா?
இரட்டை வேடத்தில் நடிப்பதற்கு சரியான கதை அமைய வேண்டும். அவ்வாறு அமைந்தால் கண்டிப்பாக பண்ணுவேன்.
தனுஷ் ஹாலிவுட் படத்தில் நடிக்கிறாரே...?
தனுஷ் ஒரு மிகச்சிறந்த நடிகர். அதை அவர் ஹாலிவுட்டிலும் நிரூபிப்பார்.
மோகன் ராஜா இயக்கத்தில் நீங்கள் நடிக்கும் படம் எப்படிப்பட்டதாக இருக்கும்?
மோகன் ராஜா சார் படம் அவருடைய பாணியில் உருவாகும் படமாகும். எனக்கு புதுமையானதாக இருக்கும்.
ரஜினி முருகனுக்கு கிடைத்த மறக்க முடியாத பாராட்டு?
ரஜினி முருகன் வெற்றியடைந்ததால் நிறைய மாதங்கள் கழித்து சந்தோஷமாக இருக்கிறேன். ரஜினி முருகன் படம் பார்த்துவிட்டு ரஜினி சார் போனில் அழைத்து பேசும் போது நடுக்கமாக இருந்தது. முழுமையான நாயகனாக ஆகிவிட்டீர்கள் என்று குறிப்பிடத்தை எனது வாழ்நாளில் மறக்க முடியாது.
உங்களை நாயகனாக ஒத்துக் கொண்ட முதல் ஆள் யார்?
முதல் ஆளாக விக்ரம் சார் தான் நீ ஒரு நாயகன் என்று பல நிகழ்ச்சிகளிலும், பொது மேடைகளிலும் குறிப்பிட்டார்.
பிரேமம் ரீமேக்கில் நடிப்பீர்களா?
நிவின் பாலி நடிப்பை என்னால் கொண்டுவர முடியாது. அப்படத்தை பண்ண மாட்டேன்.
உங்கள் அடுத்தப் படத்தின் பெயர் நர்ஸ் அக்கா என்கிறார்களே?
எனது அடுத்த படத்தின் பெயர் நர்ஸ் அக்கா அல்ல. படத்தின் பெயர் அடுத்த மாதம் வெளியிடப்படும்.
விஜய், அஜித் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
விஜய் சார் கையால் விருது வாங்கியது எனது வாழ்வில் மிகச் சிறந்த தருணங்களில் ஒன்று. அப்போது அவர் பேசிய வார்த்தைகள் மறக்க முடியாத ஒன்று. அஜித் ஒரு சிறந்த மனிதர். அவருடைய வார்த்தைகள் மற்றும் ஆலோசனைகளை மறக்க மாட்டேன்.