தேசிய விருது கிடைத்தால் சந்தோஷப்படுவேன் - அமலா பால் பேட்டி
தேசிய விருது கிடைத்தால் சந்தோஷப்படுவேன் - அமலா பால் பேட்டி
அம்மா கணக்கு படத்தில் 15 வயது சிறுமிக்கு அம்மாவாக நடித்துள்ளார், அமலா பால். படத்தில் அவர்தான் நாயகன், நாயகி எல்லாம்.
பிரசாத் ஸ்டுடியோவில் அம்மா கணக்கில் பாடல்கள் வெளியீட்டுவிழா முடிந்த பிறகு நிருபர்களுக்கு அமலா பால் பேட்டியளித்தார்.
அம்மா கணக்கு படத்தில் நடிக்க எப்படி சம்மதித்தீர்கள்?
முதலில் இது எனக்கு விசேஷமான படம். ஹீரோக்களுக்கு ஜோடியாக ஒரே மாதிரி நடித்துவந்த எனக்கு மாறுதலாக அமைந்த படம். இது ஒரு தாய், மகள் பற்றிய கதை என்று தனுஷ் சொன்னதும், என்னுடைய கதாபாத்திரம் எது என்றுதான் கேட்டேன். பத்தாம் வகுப்பு மாணவிக்கு அம்மாவாக நடிக்க வேண்டும் என்றார்.
உங்க உடனடி ரியாக்ஷன் என்னவாக இருந்தது?
என்னைப் பார்க்க அப்படியா இருக்கிறது என்று கேட்டேன். அவர் கதையை சொன்ன பிறகு நடிக்க ஒப்புக் கொண்டேன்.
இளம் நடிகையான நீங்கள் இப்படியொரு வேடத்தில் நடித்தது சங்கோஜமாக இல்லையா? படத்தில் உங்க கதாபாத்திரம் என்ன?
எனக்கு 24 வயதுதான் ஆகிறது. அம்மா கணக்கு படத்தில் 15 வயது பெண்ணுக்கு அம்மாவாக நான் நடித்ததை பெருமையாக கருதுகிறேன். என் கதாபாத்திரத்தின் பெயர், சாந்தி. மகளுக்கு உயர் கல்வி கொடுக்க வேண்டும் என்பதற்காக, கஷ்டப்பட்டு உழைக்கும் வேலைக்கார பெண்ணாக நடித்து இருக்கிறேன்.
இந்த நடிப்பு அனுபவம் எப்படி இருந்தது?
இது எனக்கு சவாலான வேடமாக இருந்தது. படப்பிடிப்புக்காக அதிகாலை 7 மணிக்கே மீன் மார்க்கெட்டுக்கு போய் விடுவேன். மாலை 6 மணி வரை அந்த சூழ்நிலைக்கு என்னை பழக்கிக் கொண்டு நடித்தேன்.
கதாபாத்திரத்துக்காக எதுவும் சிறப்புப் பயிற்சி எடுத்துக் கொண்டீர்களா?
நிஜவாழ்க்கையில் நான் மிகவும் உணர்ச்சிவசப்படுகிற பெண். அம்மா கணக்கு படத்தில் சாந்தி கதாபாத்திரம் மிக பொறுமையானவள். என்னை கதாபாத்திரமாக மாற்றிக் கொள்வதற்காக, தினமும் யோகா, தியானம் செய்தேன். என் கணவர் டைரக்டர் விஜய் ஒரே ஒருநாள் படப்பிடிப்புக்கு வந்தார். என்னைப் பார்த்து ஆச்சரியப்பட்டார். இப்படியே நீ இருந்து விடலாம் என்று கிண்டலாக பாராட்டினார்.
இந்தப் படத்துக்காக உங்களுக்கு தேசிய விருது கிடைக்கும் என்று தனுஷ் கூறி உள்ளாரே?
இந்த படம் எனக்கு கிடைத்ததே தேசிய விருது கிடைத்த மாதிரிதான். என் நடிப்புக்காக தேசிய விருது கிடைத்தால் சந்தோஷப்படுவேன்.