Publish Date: Wed, 23 Nov 2016 (15:06 IST)
Updated Date: Thu, 24 Nov 2016 (10:28 IST)
நடிகர்கள் கோலோச்சும் தென்னிந்திய சினிமாவில் நாயகி மையப் படங்களால் தனிக்கவனம் பெற்றவர் அனுஷ்கா. இன்று நயன்தாரா, த்ரிஷா போன்றவர்கள் நாயகி மையப் படங்களில் நடிக்க காரணமாக இருந்த முன்னோடி. தனது அழகு மற்றும் ஆரோக்கியம் குறித்து அனுஷ்கா வெளிப்படையாக பேசிய பேட்டியிலிருந்து...
உங்களை தமிழில் பார்க்க முடியவில்லையே?
பாகுபலி, ருத்தரமாதேவி போன்ற பெரிய பட்ஜெட் படங்களில் தொடர்ந்து நடித்ததால் இடைவெளி ஏற்பட்டுவிட்டது. ஆனாலும், இஞ்சி இடுப்பழகி போன்ற படங்கள் தமிழில் வரத்தான் செய்தன.
உங்களின் அடுத்த தமிழ்ப் படம்?
ஹரி இயக்கியிருக்கும் எஸ் 3 படம் டிசம்பரில் திரைக்கு வருகிறது. இதில் சூர்யாவுடன் நடித்திருக்கிறேன்.
உங்கள் அழகின் ரகசியம் என்ன?
நான் அழகாக இருப்பதற்கு உணவு கட்டுப்பாடும் உடற்பயிற்சிகளுமே காரணம். நல்ல பழக்கவழக்கங்களுடன் வாழ்ந்தால் வசீகரமாக இருக்கலாம்.
கொஞ்சம் விளக்கமாக சொல்ல முடியுமா?
தினமும் 6 லிட்டர் தண்ணீர் குடிக்க வேண்டும். இதன்மூலம் சருமத்தை பளபளப்பாக வைத்துக்கொள்ள முடியும். அழகு சாதன பொருட்களை பயன்படுத்த கூடாது. எலுமிச்சை சாற்றை சருமத்தில் பூசலாம். கூந்தல் நீளமாக வளர்வதற்கு தேங்காய் எண்ணெய், கடுகு எண்ணெய், விளக்கெண்ணெய் போன்றவற்றை தலையில் தேய்க்கலாம். நான் இவற்றை அடிக்கடி பயன்படுத்துகிறேன்.
உடற்பயிற்சிகள் தினமும் செய்கிறீர்களா?
உடம்பை கட்டுகோப்பாக வைத்துக்கொள்ள உடற்பயிற்சிகள் அவசியம். நான் தினமும் 30 நிமிடங்கள் யோகா பயிற்சி செய்கிறேன்.
எண்ணெயில் செய்த உணவு வகைகளை தொடுவது இல்லை. சாப்பாட்டில் நிறைய காய்கறிகள் சேர்த்துக்கொள்வேன். பழங்களும் சாப்பிடுவேன்.
ஆரோக்கிய கேடு என்று எதை சொல்வீர்கள்?
இதில் எதை செய்யாமல் இருந்தாலும் அது ஆரோக்கிய கேடுதான். முக்கியமாக, இரவு உணவை படுக்கைக்கு செல்வதற்கு இரண்டு மணி நேரத்துக்கு முன்பாக முடித்து விட வேண்டும். சாப்பிட்டு விட்டு உடனே படுக்கைக்கு செல்வது நல்லது அல்ல. ஆரோக்கியத்தை கெடுத்து விடும்.