ஒரு சின்ன இடைவெளிக்குப் பிறகு காஜல் அகர்வாலுக்கு படங்கள் குவிகின்றன. விஜய்யுடன் மீண்டும் சேர்ந்து நடிக்கப் போவதாகவும் செய்திகள் வருகின்றன. இந்நிலையில் நிருபர்களுக்கு காஜல் அளித்த பேட்டியின் விவரம் வருமாறு...
சினிமா கரியரை திரும்பிப் பார்க்கும் போது என்ன தோன்றுகிறது?
என் சினிமா வாழ்க்கையை திரும்பி பார்க்கும்போது மகிழ்ச்சியாக இருக்கிறது. ரசிகர்கள் மத்தியில் சிறந்த நடிகை என்ற பெயரும் வாங்கி விட்டேன்.
ஆரம்பகாலத்தில் சினிமாவில் நடிக்கையில் உங்கள் மனதில் இருந்தது என்ன?
திரையுலகில் முன்னணி கதாநாயாகியாக வளருவேன் என்றோ சினிமாதான் இனிமேல் என் உலகம் என்றோ அப்போது நினைத்து பார்க்கவில்லை. ஒவ்வொரு படத்திலும் முதல் நாள் நடிக்க செல்லும்போது இதுதான் எனது கடைசி படம் என்றுதான் நினைத்துக்கொள்வேன். ஆனால் காலம் என்னை சினிமாவில் நிரந்தர நடிகையாக்கி விட்டது. தமிழ், தெலுங்கு படங்களில் ஓய்வு இல்லாமல் நடித்துக்கொண்டு இருக்கிறேன்.
உங்களுடன் திரையுலகில் நுழைந்த நடிகைகள் பரிசோதனை முயற்சியாக வித்தியாசமான வேடங்களில் நடிக்க ஆரம்பித்துவிட்டார்களே...?
என்னையும் இப்போது மூத்த நடிகை என்று அழைக்க ஆரம்பித்திருக்கிறார்கள். இதனால் எனக்குள் மாற்றங்கள் ஏற்பட்டு இருக்கிறது. இனி புதிய முயற்சிகளில் ஈடுபடுவேன்.
என்ன மாதிரியான முயற்சிகள்...?
இப்போது பட வாய்ப்புகள் குவிகின்றன. வருகிற படங்களில் எல்லாம் நடிக்க மாட்டேன். நல்ல கதையம்சம் உள்ள படங்களை மட்டுமே தேர்வு செய்து நடிப்பேன். கதாபாத்திரங்கள் எனக்கு ஆத்ம திருப்தியை கொடுக்க வேண்டும். அப்படிப்பட்ட படங்களில் மட்டுமே நடிப்பதென முடிவு செய்திருக்கிறேன்.
இந்த திடீர் மாற்றத்துக்கு என்ன காரணம்...?
வாழ்க்கை மிகவும் சிறியது. ஒவ்வொரு வினாடியையும் அனுபவிக்க முடிவு செய்து இருக்கிறேன். அதனால், முன்புபோல் ஓடிக்கொண்டே இருக்க மாட்டேன். நிதானமாக கதைகளை தேர்வு செய்து நடிப்பேன்.