தர்மதுரை படத்தில் வாட்ச்வுமனாக நடித்த, திருநங்கை ஜீவா, இந்தப் படம் காரணமாக தனது குடும்பத்துடன் இணைந்துள்ளார். அது குறித்து அவர் அளித்த பேட்டி...
உங்களைப் பற்றி சொல்லுங்க...?
என் சொந்த ஊர் சிவகாசி. நான் திருநங்கை என்று தெரிந்ததும் என்னுடைய 13-ம் வயதில் வீட்டை விட்டு வெளியேறி சென்னை வந்தேன். கோயம்பேட்டில் டீ கடையில் வேலை பார்த்தேன். சினிமாவில் நடிக்க ஆசைப்பட்டு நிறைய சினிமா கம்பெனிகளில் வாயப்புக்காக ஏறி இறங்கினேன். சில சினிமா கம்பெனிகளில் உள்ளே நுழைய கூட அனுமதிக்கவில்லை. சில கம்பெனிகளில் போட்டோ கேட்பார்கள். எப்படி போட்டோ கொடுப்பது என தெரியாமல் பாஸ்போர்ட் போட்டோக்களை கொடுத்து இருக்கிறேன்.
நடனம் எப்படி கற்றுக் கொண்டீர்கள்?
வடபழனியில் ஒரு ஸ்வீட் கடையில் வேலை பார்த்துக்கொண்டே நான் தங்கியிருந்த இடத்திற்கு அருகில் புதிய பூமி எனும் நடனப்பள்ளியில் நடனம் கற்றுகொண்டேன். நடனம் என் சிறுவயது கனவு. பின்பு நிறைய இடங்களில் மேடை நடன கலைஞராக என் வாழ்க்கை ஆரம்பமானது. அந்த சமயங்களில் நிறைய பேரின் கிண்டலுக்கும் கேலிக்கும் ஆளானேன்.
சினிமாவில் நுழைந்தது எப்படி?
நீண்ட போராட்டத்திற்கு பிறகு, ஒப்பனை கலைஞராக பிரபல நடிகைகள் அனுஷ்கா, ஸ்ரேயா, விசாலினி ஆகியோரிடம் பணிபுரிந்தேன். அப்பொழுது தர்மதுரை படத்திற்கு விசாலினி அவர்களுக்கு ஒப்பனை கலைஞராக பணியாற்ற சென்றிருந்தேன். நான் எதிர்பார்க்கவே இல்லை, இயக்குனர் சீனுராமசாமி அவர்கள் என்னை அழைத்து நடிக்க வைத்தார்.
விஜய் சேதுபதியுடன் நடித்த அனுபவம் எப்படி இருந்தது?
என் அண்ணணாகவே மாறி விஜய்சேதுபதி அவர்கள் என்னை ஊக்கப்படுத்தினார்.
இந்தப் படத்தால் விளைந்த நல்ல விஷயம் என்று எதை சொல்வீர்கள்?
இந்த தீபாவளி வந்தால் என் பெற்றோர்களை பிரிந்து 10 வருடங்கள் ஆகிறது. ஊரில் தர்மதுரை படம் பார்த்துவிட்டு என் பெற்றோர், அண்ணன் ஆகியோர் என்னை அழைத்து பேசினர். எனக்கு கண்ணீர் வந்து விட்டது. இந்த படத்தில் நடித்ததின் மூலம் பிரிந்து இருந்த என் குடும்பத்தினருடன் நான் சேர்ந்து விட்டேன்.
மலையாளம், தமிழ் ஆகிய மொழிகளில் தீவிரமாய் நடித்து வருகிறேன். இப்போதைக்கு
நடிப்பது ஒன்றுதான் என்னுடைய லட்சியம்.