Publish Date: Fri, 30 Oct 2015 (15:14 IST)
Updated Date: Fri, 30 Oct 2015 (15:23 IST)
தாப்ஸி தமிழில் நடிக்கிறாரோ இல்லையோ. அவரைப் பற்றிய செய்திகளுக்கு மட்டும் பஞ்சமில்லை. தாப்ஸிக்கு மாப்பிள்ளை பார்க்கிறார்கள், விரைவில் திருமணம் செய்து செட்டிலாகிறார் என்பது தாப்ஸி குறித்த சமீபத்திய தகவல். அதற்கும், அதைப்போன்ற கான்ட்ரவர்ஸி கேள்விகளுக்கும் தாப்ஸியின் பதில் என்ன? நீங்களே படியுங்களேன்.
நடிகை ஆவோம் என்று நினைத்தீர்களா?
சினிமா நடிகையாவேன் என்று கனவிலும் நான் நினைக்கவில்லை. நடனத்தில் ஈடுபாடு இருந்ததால் அதை கற்றேன். பிறகு கைச்செலவுக்காக மாடலிங் செய்தேன். அதுவே எனக்கு சினிமா வாய்ப்பை பெற்று தந்தது.
இந்த சினிமா வாழ்க்கை எப்படியிருக்கிறது?
நன்றாகப் போய்க் கொண்டிருக்கிறது.
நீங்கள் விரைவில் திருமணம் செய்யப் போவதாக பேச்சிருக்கிறதே?
நான் என்னுடைய சகோதரியுடன் இணைந்து திருமணங்களை பொறுப்பேற்று நடத்திக் கொடுக்கும் தொழிலையும் செய்து வருகிறேன். இதை வைத்து சினிமாவை விட்டு நான் விலக போவதாகவும், திருமணம் செய்து கொள்ளப் போவதாகவும் செய்திகள் பரவி உள்ளன. சினிமாவை விட்டு ஒருபோதும் நான் விலக மாட்டேன்.
சினிமாவைவிட்டு விலக மாட்டீர்கள், சரி. திருமணம் எப்போது...?
நான் திருமணத்துக்கு இன்னும் தயாராகவில்லை.
மேலும் அடுத்த பக்கம் பார்க்கவும்.....
அப்படி ஒருவேளை தயாரானால் உங்களுக்கு வரவிருக்கும் மணமகன் எப்படி இருக்க வேண்டும் என்று முடிவு செய்திருக்கிறீர்கள்?
எனக்கு மாப்பிள்ளையாக எப்படிப்பட்டவர் வரவேண்டும் என்று சில ஆசைகளை வைத்துள்ளேன். என்னை கவுரவப்படுத்துபவராக அவர் இருக்க வேண்டும். என்னுடைய சுதந்திரத்துக்கு பங்கம் வரும்படி நடக்க கூடாது. எந்த விஷயத்துக்காகவும் என்னிடம் கேள்வி கேட்க கூடாது. நச்சரிக்கவும் கூடாது. நான் பிடித்தமாதிரி வாழ்வதற்கு முழு உரிமை அளிக்க வேண்டும். எதற்கும் தடை போடக்கூடாது.
இவ்வளவுதானா இன்னும் இருக்கிறதா?
எதிலும் நானே சுயமாக முடிவு எடுக்க அனுமதிக்க வேண்டும். திருமணத்துக்கு பிறகும் எனது குடும்பத்தில் ஒரு சினிமா நட்சத்திரம் தான் இருக்க வேண்டும். அது நானாகவே இருக்க வேண்டும்.
நடிகரை மணப்பீர்களா?
நடிகரை திருமணம் செய்து கொள்ளமாட்டேன். சினிமா தொழிலில் சம்பந்தப்பட்ட யாரையும் மணக்கமாட்டேன்.
தாப்ஸி நிஜத்தில் எப்படிப்பட்டவர்?
பள்ளி, கல்லூரிகளில் படித்தபோது துடுக்குத்தனமான பெண்ணாக இருந்தேன். அழகுக்கு முக்கியத்துவம் கொடுக்கமாட்டேன். காலை 7 மணிக்கு வீட்டை விட்டு வெளியே போனால் இரவு 10 மணிக்குத்தான் திரும்புவேன். கிராமங்களில் நடப்பதுபோன்ற தெரு விளையாட்டுகளில் நான் தான் கில்லி. நிறைய பரிசுகள் வாங்கி இருக்கிறேன். அப்போதெல்லாம் ஆண் பசங்களை அவர்களின் பெற்றோர் என்னிடம் நெருங்க விட மாட்டார்கள். என்னை பார்த்து ‘அதோ போறாளே அந்த பெண் ஒருமாதிரி பட்டவள். அவளிடத்தில் பேசக்கூடாது’ என்று வாலிப பசங்களை அவர்களின் பெற்றோர் கண்டிப்பார்கள். ஆனால் அந்த பெற்றோர் இப்போது என்னை அழைத்து எங்கள் பசங்களுக்கு கொஞ்சம் புத்திமதி சொல்லும்மா என்கிறார்கள்.
இந்த மாற்றத்தை எப்படிப் பார்க்கிறிர்கள்?
இதை எனக்குக் கிடைத்த வெற்றியாகப் பார்க்கிறேன்.