எனக்கு காதல் வந்து இருக்கிறது - சமந்தாவின் ரொமான்டிக் பேட்டி
எனக்கு காதல் வந்து இருக்கிறது - சமந்தாவின் ரொமான்டிக் பேட்டி
Publish Date: Wed, 25 May 2016 (10:08 IST)
Updated Date: Wed, 25 May 2016 (10:15 IST)
சமந்தா யாரை காதலிக்கிறார்? ராணாவையா? இல்லை வேறு நடிகரையா? ஒருவேளை முன்னாள் காதலர் சித்தார்த்தையா? இவர்கள் யாருமின்றி இப்போதும் சிங்கிளாகவே இருக்கிறாரா?
தமிழ், ஆந்திர திரையுலகையும், இருமாநில ரசிகர்களையும் பிடித்தாட்டிய குழப்ப கேள்விகளுக்கு ஹைதராபாத்தில் சமந்தா விளக்கமளித்தார். எஸ், சமந்தாவே தான் இப்போது சிங்கிள் இல்லை, இளம் நடிகரை காதலிக்கிறேன் என்றார்.
யாராவது ஐ லவ் யூ என்றால் என்ன செய்வீர்கள்?
காதல் மனநிலையில் இருந்து மாறி திருமணம், குழந்தை என்ற நிலைக்கு வந்துவிட்டேன். இப்போது என் முழு கவனமும் நடிப்பில்தான். சினிமாவிலேயே மூழ்கி விட்டேன்.
திருமணம், குழந்தை சிந்தனை என்றால்... தேதி குறித்துவிட்டீர்களா?
அது இன்னும் இல்லை. ஆனால் திருமணத்துக்கு தயாராகி விட்டேன்.
நீங்கள் ஒருவரை காதலிப்பதாக கிளம்பிய வதந்தி உண்மைதானா?
உண்மைதான். எனக்கு காதல் வந்து இருக்கிறது. அவரை திருமணம் செய்து குடும்பம், குழந்தை என்று வாழ விரும்புகிறேன்.
உங்கள் மனம் கவர்ந்த அந்த அதிர்ஷ்டசாலி யார்?
அவர் யார் என்பதை இப்போது சொல்லமாட்டேன். திருமண தேதியை அறிவிக்கும்போது சொல்வேன்.
அவரை பிடித்துப்போக என்ன காரணம்?
நான் விளையாட்டுப் பிள்ளைமாதிரி இருப்பேன். எதற்கெடுத்தாலும் உணர்ச்சி வசப்படுவேன். கோபம் வந்தாலும், சந்தோஷப்பட்டாலும் அதன் எல்லைக்கே போவேன். எப்படி பேச வேண்டும். யாரிடம் எப்படி நடந்து கொள்ள வேண்டும் என்பதெல்லாம் தெரியாது. ஆனால் நான் காதலிப்பவர் அதற்கு நேர்மாறானவர். அவர் எதையும் யோசித்தே பேசுவார். தீர்க்கமான முடிவுகளை எடுப்பார். மிகவும் பொறுமைசாலி. எனக்கு தேவையான விஷயங்கள் இவைதான்.
திருமணத்துக்கு பிறகு சினிமாவை விட்டு விலகி விடுவீர்களா?
சினிமாவை விட்டு விலக மாட்டேன். என் வயதுக்கு ஏற்ற மாதிரி கதாபாத்திரங்களில் நடிப்பேன். எனது குடும்ப கவுரவத்தை காப்பாற்றுகிற மாதிரியான வேடங்களை மட்டுமே செய்வேன். நான் திருமணம் செய்து கொள்ளப்போகிறவர் கூட திருமணத்துக்கு பிறகும் தொடர்ந்து நடிக்கலாம் என்று அனுமதி அளித்து இருக்கிறார்.
பெற்றோர் சம்மதம் கிடைத்து விட்டதா?
எங்கள் திருமணத்தில் எந்த பிரச்சினையும் இல்லை. சுமுகமாக நடக்கும். பெற்றோர்கள் சம்மதம் சொல்லி விட்டனர்.
நீங்கள் சமூக சேவை பணிகளுக்காக நிறைய பணத்தை செலவிடுகிறீர்களே, அவர் எப்படி?
அவருக்கும் சமூக சேவைகளில் ஈடுபாடு உண்டு. என்னைப்போல் உதவி செய்யும் மனப்பான்மை இருக்கிறது. எனது சமூக சேவை பணிகளை அவர் உற்சாகப்படுத்துகிறார். இல்லாதவர்களுக்கு உதவும் சேவை குணம் அவருக்கு இல்லாமல் இருந்து இருந்தால், நான் காதலித்து இருக்கமாட்டேன். எனக்கு சமைக்க தெரியாது. ஆனால் அவர் நன்றாக சமைப்பார். அசைவ உணவுகளையும் ருசியாக சமைப்பார். எனவே நான் விரைவில் சமையல் கற்றுக்கொள்ள இருக்கிறேன்.