நல்ல படைப்புகள் எப்போதும் பொதுமக்களை சென்றடையும் - சமுத்திரகனி பேட்டி
நல்ல படைப்புகள் எப்போதும் பொதுமக்களை சென்றடையும் - சமுத்திரகனி பேட்டி
அப்பா படம் திரையிட்டுள்ள திரையரங்குகளுக்கு நேரில் சென்று ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சி அளித்து வருகிறார்.
அப்படி ஈரோடு வந்த அவர், நிருபர்களுக்கு பேட்டியளித்தார்.
ரசிகர்களுடன் உட்கார்ந்து படம் பார்க்கும் போதுதான் அவர்களின் உணர்வுகளை உணர முடிகிறது. அதனால், அப்பா படம் திரையிட்டுள்ள அனைத்து தமிழக திரையரங்குகளுக்கும் சென்று வருகிறேன்.
இந்தப் படத்தை எதன் அடிப்படையில் உருவாக்கினீர்கள்?
என் மனதில் இருந்த, என்னை பாதித்த சம்பவங்களை வைத்து இந்தக் கதையை உருவாக்கினேன்.
இதுபோன்ற படங்கள் வெகுஜனங்களை அடைவதில்லை என்ற எண்ணம் உள்ளதே?
நல்ல படைப்புகள் எப்போதுமே பொது மக்களை போய் சேரும் என்பது அப்பா படம் மூலம் நிரூபிக்கப்பட்டு உள்ளது. நல்ல படைப்புகள் வராத போதுதான் ஏதோ படத்தை பார்த்து கைதட்ட வேண்டிய நிலைக்கு மக்கள் தள்ளப்படுகிறார்கள்.
படத்தை எடுத்த போது இது வெற்றி பெறுமா என்று பலர் நினைத்தார்கள். ஆனால் முழு நம்பிக்கை வைத்து நான் இந்த படத்தை எடுத்தேன். இந்த படம் பொது மக்களின் வரவேற்பை பெற்று உள்ளது.
இந்தப் படத்தின் வெற்றிக்கு என்ன காரணம் என்று நினைக்கிறீர்கள்?
ஒவ்வொரு வீட்டிலும் நடக்கும் சம்பவங்களை வைத்து இந்தப் படத்தை எடுத்தேன். அது மக்களின் உணர்வுகளோடு கலந்திருந்தது. மக்களின் ரசனைக்கேற்ற படங்களை படைப்பவர்தான் நல்ல கலைஞனாக கருதப்படுகிறார். இந்த படம் சக்சஸ் ஆகி இருப்பது சந்தோஷமாக உள்ளது.
திருட்டு டிவிடிக்கு என்னதான் தீர்வு...?
தமிழக அரசு நினைத்தால் திருட்டு வி.சி.டிக்களை கடுமையான நடவடிக்கைகள் மூலம் தடுக்கலாம்.