Publish Date: Sat, 12 Dec 2015 (18:38 IST)
Updated Date: Sun, 13 Dec 2015 (14:33 IST)
வேல்ராஜ் இயக்கத்தில் தனுஷ் நடித்துள்ள தங்கமகன் படம் முடிந்து சென்சாரில் யு சான்றிதழ் வாங்கியுள்ளது. படம் விரைவில் வெளிவரவிருக்கும் நிலையில் பத்திரிகையாளர்களை சந்தித்தார் தனுஷ். அப்போது அவரிடம் கேட்கப்பட்ட கேள்விகளும் அவரது பதில்களும்.
தங்கமகன் என்ன மாதிரியான படம்?
இதுவொரு குடும்பப் பொழுதுப்போக்கு படம்.
படத்தில் நடித்திருப்பவர்கள் பற்றி சொல்லுங்கள்...?
எனக்கு ஜோடியாக இரண்டு கதாநாயகிகள் நடித்திருக்கிறார்கள். எமி ஜாக்சன் காதலியாகவும், சமந்தா மனைவியாகவும் நடித்திருக்கிறார்கள். இரண்டு பேரும் சிறப்பாக நடித்திருக்கிறார்கள். எனக்கு அப்பாவாக கே.எஸ்.ரவிக்குமார் நடித்திருக்கிறார். ஒரு பெரிய இயக்குனர் என்று பார்க்காமல் அனுபவம் வாய்ந்த நடிகராக நடித்திருக்கிறார். அம்மாவாக ராதிகா நடித்திருக்கிறார்.
நடிப்பு நன்றாகப் போய்க்கொண்டிருக்கையில் தயாரிப்பாளரானது ஏன்?
திறமைசாலிகளை கண்டுபிடித்து வாய்ப்பு தரலாம் என்பதற்காகத்தான் வுண்டர்பார் தயாரிப்பு நிறுவனத்தை தொடங்கினேன். அந்த வகையில் பலருக்கு வாய்ப்பு கொடுத்து வருகிறோம். வாய்ப்பு கொடுத்தவர்களை பற்றி கூறினால், நான் சொல்லி காட்டுவதுபோல் ஆகும். இருந்தாலும் அனிருத் என்ற திறமைசாலிக்கு வாய்ப்பு கொடுத்திருக்கிறோம். அனிருத் என்னுடைய தம்பி. அதனால் நான் என்ன சொன்னாலும் தப்பாக எடுத்துக் கொள்ளமாட்டார்.
உங்களுக்கும் சிவ கார்த்திகேயனுக்கும் அப்படி என்னத்தான் பிரச்சனை?
சிவகாத்திகேயனுக்கும் எனக்கும் எந்த பிரச்சனையும் இல்லை. நாங்கள் நல்ல நண்பர்கள். வுண்டர்பார் நிறுவனத்தால் சிவகார்த்திகேயனுக்கு சம்பளம் கொடுக்க முடியவில்லை. அதனால்தான் அவரை வைத்து படம் தயாரிக்கவில்லை. சிவகார்த்திகேயன் சிறப்பாக வளர்ந்திருப்பது பெருமையாக கருதுகிறேன்.
அதென்ன... தொடர்ந்து ரஜினிபட டைட்டிலையே வைக்கிறீங்க?
கதைக்குப் பொருத்தமாக இருந்ததால் தேர்வு செய்கிறேnம்.
சிம்புவுடனான நட்பு எப்படி போகிறது?
அவருக்கும் எனக்கும் பிரச்சனையா என்று அடிக்கடி கேட்கிறார்கள். அப்படியெதுவும் இல்லை. நாங்கள் நல்ல நண்பர்கள்.
தயாரிப்பாளராக எந்த மாதிரியான படங்களை தயாரிக்க விரும்புறீங்க?
காக்கா முட்டை மாதிரியான படங்கள்.
விசாரணை படம் எப்போது வெளிவரும்?
விசாரணை படத்தை பல விருதுகளுக்கு அனுப்பி இருக்கிறோம். அதனால் இன்னும் வெளியிடவில்லை. விரைவில் வெளியாகும்.
இன்று ரஜினியின் பிறந்தநாள். மருமகனாக அவருக்கு வாழ்த்துக்கள் கூறினீர்களா?
நான் முதலில் ரஜினியின் தீவிர ரசிகன். மருமகன் அப்பாற்பட்டது. ஒரு ரசிகனாக என்னுடைய வாழ்த்துக்களை கூறி விட்டேன்.
உங்கள் வாழ்க்கையின் முக்கியமான மூன்று பேர்கள் யார்...?
முதல் அம்மாதான். எந்த நேரத்திலும் என்னை பற்றி நினைத்துக் கொண்டிருப்பவர். இரண்டாவது என் மனைவி ஐஸ்வர்யா. என் வாழ்க்கையில் மிகவும் முக்கியமானவர். மூன்றாவது கடவுள். இவர்கள் மூன்று பேரும் என் வாழ்க்கையில் முக்கியமானவர்கள்.