Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

மேக்கப்போடாத அமலாபாலைப் பிடிக்கும்: ஒளிப்பதிவாளர் சுகுமார்

Advertiesment
ஒளிப்பதிவாளர்
முந்தைய 'லாடம்', 'மைனா' ,'கும்கி' முதல் அண்மைக்கால 'மான் கராத்தே' 'காக்கிசட்டை' வரை அழகான ஒளிப்பதிவில் கவனம் ஈர்த்து வருபவர் ஒளிப்பதிவாளர் சுகுமார். இவர் ஒளிப்பதிவாளர்- இயக்குநர் ஜீவனின் சகோதரர். மதுரை மண்ணின் மைந்தர்; ஒளிப்பதிவாளர் பாலசுப்ரமணியெம்மின் மாணவர்.

இப்போது 'கெத்து'-  உதய நிதி ஸ்டாலின் படம், அடுத்து விக்ரம் பிரபுவின் படம் என்று தொடர்ச்சியாக இயங்கி வருகிறார். போட்டோகிராஃபராக தனது பயணத்தை தொடங்கியவர் கடின உழைப்பின் மூலம் இன்று டாப்பில் நிற்கிறார்.

உயரம் ஏறிவிட்டாலும், நாம பேசணுமா பாஸ்?  நம்ம வேலை பேசினா போதாதா என அடக்கத்துடன் கேட்கிறார். அவருக்கு கொஞ்சம் மயக்க மருந்து தூவி வாயைக் கிளறிய பேட்டி இதோ...


* கும்கி படம் உங்களுக்கு நல்ல அடையாளம் தானே? அந்த அனுபவம் பற்றி..?

''என்னை 'லாடம்' படத்தின் மூலம் ஒளிப்பதிவாளராக்கியவர் பிரபுசாலமன் சார்தான்.​ ​அவருடன்  பிறகு 'மைனா' ,'கும்கி' செய்தேன். மைனாவில், கும்கியில் கால் தேய காடுமலை என்று சுற்றினேன். கடுமையான உழைப்பு அது. காமெராவை கல்லிலும் மலையிலும் மழையிலும் வெயிலிலும் தூக்கிக்கொண்டு வேலை செய்தோம். அதற்கான பலன்தான் இன்றைய சுகுமார் .

இப்போது காடுமலையை கொஞ்சம் தள்ளி வைத்துவிட்டு நகரம் சம்பந்தமான படங்களிலும், ஆக்சன் படங்களிலும் கவனம் செலுத்தி வருகிறேன். என்னைப் பார்ப்பவர்கள் என்னிடம் பேசுகிறவர்கள் கும்கி பற்றியே கேட்கிறார்கள். அந்தப்படம் அந்த அளவுக்குச் சென்றடைந்திருக்கிறது என்று ஒரு பக்கம் மகிழ்ச்சி. இன்னொரு பக்கம் இன்னும் அதைவிட்டு வேறு என் படத்தைப் பற்றிப் பேசுவதில்லையே என்று​ சின்ன ​வருத்த​மு​ம்​ உண்டு​

என் வாழ்க்கையை 'கு.மு 'மற்றும் 'கு.பி; என இரண்டாகப் பிரிக்கலாம். கும்கிக்கு முன், கும்கிக்குப் பின். அந்த அளவுக்கு எனக்கு திருப்தி தந்து திருப்புமுனை தந்த படம் கும்கி.  


* ஒருவரிடமே நீங்கள் அடுத்தடுத்த படங்களில் தொடர்ந்து ஒளிப்பதிவு செய்வது பற்றி..?

அது நல்ல விஷயம்தானே? முதலில் பிரபுசாலமன்சார் இயக்கத்தில் 3 படங்கள் தொடர்ந்து செய்தேன்​.​ சிவகார்த்திகேயன்  நடித்து முதலில் 'மான்கராத்தே'யில் பணிபுரிந்தேன்​.​
அடுத்த 'காக்கி சட்டை' க்கு அவரே சிபாரிசு ​செ​ய்தார். விக்ரம்​ ​பிரபுவுடன் மீண்டும் பணியாற்றப் போகிறேன். 'கெத்து' முடிந்ததும் அந்தப் படம் தொடங்கும்.​ ​இது நல்ல விஷயம்தானே?
என்​ ​வேலையை முழுமையாக, சரியாகச் செய்யவேண்டும் என கடினமாக உழைக்கிறேன்​.​அது அடுத்த வேலையை எனக்கு தானாக தேடிக் கொடுக்கும் என்பது என் நம்பிக்கை​. இப்படித்தான் தொடர்ச்சியாகப் போய்க் கொண்டு இருக்கிறது.

* பிரபு சாலமனுடன் அடுத்த 'கயல்' இப்போதைய தனுஷ்​ ​படம் இதில் எல்லாம் ஏன் நீங்கள் பணியாற்றவில்லை?

கயல் சமயத்தில் 'நிமிர்ந்துநில்' பணியில் இருந்தேன்​.​தனுஷ்​ ​படத்தின் போது 'கெத்து' வில் இருந்தேன். ஒரே நேரத்தில் இரண்டு படங்களில் பணிபுரிவதில் எனக்கு விருப்பமில்லை. எனவே அவரது படங்களில் வேலை பார்க்க முடியவில்லை. அவர் என் நண்பர் மட்டுமல்ல​.நலம் விரும்பியும் கூட​!  வாய்ப்பு வரும்போது மீண்டும்  அழைப்பார்​.​இணைவோம்.

* சிவகார்த்திகேயன் உங்களுக்கு சிபாரிசு செய்கிறாரா?  

ஒரு படத்தில் பணியாற்றிவிட்டு நட்பும் புரிதலும் ஏற்பட்டுவிட்டால் அடுத்த படத்திலும் பணிபுரிவது எளிதானது, மகிழ்ச்சியானது. அப்படி எங்களுக்குள் நல்ல நட்பு வரவே, என்  உழைப்பு பிடித்துப் போகவே அவரே 'காக்கிசட்டை'க்கு பரிந்துரை செய்தார். அது நட்பை விட உழைப்புக்கு கிடைத்த வாய்ப்பு என்பேன். அதேசமயம் நட்பு இருக்குன்னு வேலையில கோட்டை விட்டா அடுத்த முறை கூப்பிடமாட்டாங்க பாஸ். இங்கே நட்போடு சேர்ந்த திறமை ரொம்ப முக்கியம்.

* கெத்து எப்படி?

இதுவரை பார்த்த உதயநிதி என்கிற நடிகரை இதில் பார்க்க முடியாது​.​வித்தியாசமான உருவில் வருவார். அவரது தோற்றம், நடை, உடை, பாவணையே வேறுமாதிரி இருக்கும்.
ஓர் ஒளிப்பதிவாளருக்கு எது தேவை? யதார்த்தமா? அழகுணர்ச்சியா? இரண்டுமே தேவைதான். ஆனால் எது தேவை என்பதை தீர்மானிப்பது கதையும், சூழலும், எண்ண​ ​
​ஓட்டம் என்கிற அடிப்படையும்தான். கதை அனுமதிப்பதை, ஏற்பதை இயக்குநர் பேசுகிற மொழியில் காட்சிப் படுத்துவதே ஒளிப்பதிவாளரின் வேலை.

* அப்போது உங்களின் தனிப்பட்ட படைப்புத் திறன் எது?

அந்த எல்லைக்குள்தான் நாம் விளையாட வேண்டும்​.​அதை மீறி வெளிப்பட நினைக்க​க்கூடாது. அப்படிஅந்த எல்லைக்குள் செய்துதான்  எல்லா பெரிய ஒளிப்பதிவாளர்களும் பெயர் பெற்று இருக்கிறார்கள்.

* இயற்கை ஒளி, வடிவமைக்கப்பட்ட ஒளி எது சவால்.?

இயற்கை ஒளியில் ஒளிப்பதிவு செய்வது சுலபம்.  நாமாக ஒளியமைப்பு செய்வது சிரமம். சவாலானதும் கூட! நான் காடு​, மலை​ ​சம்பந்த்ப்பட்ட  காட்சிகளுக்கு​ நிறைய ஒளிப்பதிவு
செய்திருக்கிறேன்., காதல் சார்ந்த காட்சிகளுக்கு ஒளிப்பதிவு செய்திருக்கிறேன்., அதீத கற்பனை சார்ந்த காட்சிகளுக்கும் ஒளிப்பதிவு செய்திருக்கிறேன்..​ ​
ஒவ்வொன்றும் ஒவ்வொரு ரகம்,​ ​ஒவ்வொன்றும் ஒவ்வொரு அனுபவம்.

* எந்தமாதிரி காட்சிகளில் ஒளிப்பதிவாளரின் கொடி உயரே​ ​பறக்கும்?

படத்தில் கதையை விட்டு ஒளிப்பதிவு தடம் மாறக் கூடாது​.​பாடல் காட்சிகளில் சண்டைக் காட்சிகளில் நாங்கள் கொஞ்சம் வெளியே தெரிய வாய்ப்பு உண்டு. எங்கள் சுதந்திர எல்லை இதில் சற்று அதிகம்.​ ​படங்களில் பாடல் காட்சிகளில் சண்டைக் காட்சிகளில்தான் எனக்கு நல்ல பெயர் கிடைத்தது​.​ எல்லோருடனும் புரிதலோடு இயங்கினால் எல்லா காட்சிகளிலும் மனம் கவரலாம்.


* உங்களுக்கு யாருக்கும் நல்ல  புரிதல் இருக்கவேண்டும்?

முதலில் இயக்குநருக்கும் ஒளிப்பதிவாளருக்கும் நல்ல புரிதல் இருக்கவேண்டும். அடுத்து கலை இயக்குநருக்கும் நல்ல  புரிதல்வேண்டும்.பிறகு மற்றதெல்லாம்.

* உங்களுக்கான ஹோம் ஒர்க் எது?

ஒளிப்பதிவாளர் ஒவ்வொரு நாளும், ஒவ்வொரு  நகர்விலும் கற்றுக் கொண்டே இருக்க வேண்டும். பார்ப்பதில், சந்திப்பதில், கண்ணில் படுவதில் எல்லாம் விஷூவலாக காட்சிகளைப்  பார்க்க வேண்டும்; தொழில் ​ நுட்ப ரீதியாகவும் தினமும்​ ​கற்றுக் கொள்ள வேண்டும். பாலுமகேந்திரா சார் மாதிரி மாணவனாகவே இருக்கவேண்டும். அவர்  தனது நிறைவு காலம் வரை எல்லாம் தெரியும் என்று சொல்லாமல் கற்றுக்கொண்டே இருந்தார். ஒளிப்பதிவின் ஜீனியஸ் அவர். அவரே எல்லா காலகட்டத்திலும் மாணவனாக பயணிக்க தயாராக இருந்தார். அவர்போல்  நானும் மாணவனாகவே இறுதிவரை பயணிக்க வேண்டும் என நினைக்கிறேன்.

* டிஜிட்டல்​ ​யுகத்தில் ஒளிப்பதிவு இன்று சுலபமாகிவிட்டதே?

ஆனால் அதை இயக்க திறமையுள்ள ஒளிப்பதிவாளர் வேண்டுமல்லவா? அன்று ​ஃ​பிலிமில் எடுத்த போது இருந்த அர்ப்பணிப்பு , கவனம், டிஜிட்டலில் போய்விட்டது​. டிஜிட்டல்​ ​யுகத்தில் கொஞ்சம் அலட்சியம் வந்துவிட்டது வேதனைக்குறியதுதான்.

* மறக்க முடியாத பாராட்டு ?

முதலில் நான் 'லாடம் 'செய்தபோது கேவி ஆனந்த்சார் , ரத்னவேலுசார் , என்​ ​குரு பாலசுப்ரமணியெம்சார்  ஆகியோர் பாராட்டியது மறக்க முடியாதது.'காக்கிசட்டை' யில் டான்ஸ் மாஸ்டர் ராஜுசுந்தரம் என் ஒரு ​ஷா​ட்டைப் பார்த்து எங்கே ஜீவாவைக் காணோம் என்றார். நான் மானசீக குருவாக கருதும் ஜீவாவுடன் என்னை ஒப்பிட்டது மறக்கவே முடியாதது.

* நட்சத்திரங்களுடன் நீங்கள்  எப்படி நட்பாக இருக்கிறீர்கள்?

பலரும் நட்பாக இருக்கிறார்கள். பெரிய நட்சத்திரக் குடும்பத்திலிருந்து வந்த விக்ரம்பிரபு எப்படி பழகுவாரோ என்று முதலில் தயங்கினேன். அவரோ ஒரு சகோதரர் போல சுலபமாக  பழகி,  அவ்வப்போது வீட்டுக்கு அழைத்து சாப்பாடு போடுமளவுக்கு சகஜமாகிவிட்டார். உதயநிதி ஸ்டாலின் ​அரசியல் வாரிசு என்கிற எந்த எண்ணமும் இல்லாமல் எளிமையாகப் பழகினார். இன்றும் பழகுகிறார். இப்படி நிறைய பேர் சொல்லலாம்.

மேக்கப் போடாத அமலாபாலைத்தான் பிடிக்கும்​. மைனாவுக்குப் பிறகு எவ்வளவோ உயரத்துக்கு போனாலும் எப்போதும் அதே குணத்துடன் பழகும், மனதுக்கு மேக்கப் போட்டுக்கொள்ளாத அமலாபாலையும் பிடிக்கும். எமிஜாக்சன்​ கூட வெள்ளந்தியாகத்தான் பழகுகிறார். அவர் அழகு என்றால் அவர் பேச முயல்கிற தமிழ் மிக அழகு.
 

Share this Story:

Follow Webdunia tamil