Publish Date: Tue, 29 Mar 2016 (19:25 IST)
Updated Date: Tue, 29 Mar 2016 (19:29 IST)
குற்றப்பரம்பரை கதையை யார் இயக்குவது என்பதில் பாரதிராஜா, பாலாவுக்கு இடையேயான பனிப்போர் பகைப்போராக வடிவெடுத்துள்ளது. பாரதிராஜாவுக்கு ஆதரவாக ரத்னகுமாரும், பாலாவுக்கு ஆதரவாக வேல ராமமூர்த்தியும் களம் இறங்கியுள்ளனர். இந்நிலையில் இந்தப் பிரச்சனை குறித்து தனது கருத்தை காட்டமாக முன்வைத்துள்ளார் ரத்னகுமார்.
குற்றப்பரம்பரை உங்க கதையா...?
நான் கிழக்கு சீமையிலே, கருத்தம்மா, கடல்பூக்கள், தமிழ் செல்வன், மணிகண்டா ஆகிய படங்களுக்கு கதை-வசனம் எழுதி உள்ளேன். எஸ்.ஜே.சூர்யா நடித்த திருமகன் மற்றும் சேனாதிபதி, செங்காத்து பூமியிலே படங்களை டைரக்டும் செய்து இருக்கிறேன். 1997-ல் ‘குற்றப்பரம்பரை’ படத்தின் கதையை எழுதி அதனை எழுத்தாளர் சங்கத்தில் பதிவு செய்தேன்.
இந்த கதையை யாரிடம் தந்தீர்கள்?
இந்த கதையை படமாக்கும்படி பாரதிராஜாவிடம் சொன்னேன். அவருக்கு கதை பிடித்ததால் சிவாஜி கணேசனை தந்தை வேடத்திலும் சரத்குமாரை மகன் வேடத்திலும் நடிக்க ஒப்பந்தம் செய்து படத்தை இயக்க தயாரானார். இளையராஜா இசையில் இந்த படத்துக்காக ஒரு பாடலும் தயாரானது.
பிறகு ஏன் படம் டேக் ஆஃப் ஆகவில்லை?
சிவாஜிகணேசனுக்கு திடீர் உடல் நலக்குறைவு ஏற்பட்டு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டதால் பட வேலைகள் நிறுத்தப்பட்டன.
இப்போது இந்த கதையை இயக்குவதில் என்ன பிரச்சனை?
பாரதிராஜா மீண்டும் அந்த படத்தை எடுக்க தயாராகி வந்த நிலையில், குற்றப்பரம்பரை படத்தை பாலா இயக்கப்போவதாக அறிவிப்பு வந்துள்ளது. அந்த படத்தின் கதையை வேல ராமமூர்த்தி எழுதி இருப்பதாகவும் கூறப்பட்டு உள்ளது. இது தொடர்பாக பாலாவை பாரதிராஜா தொடர்புகொண்டு தடுக்க முயற்சித்தும் நடக்கவில்லை என்று கூறப்படுகிறது. பாரதிராஜாவுக்கு பாலா துரோகம் செய்கிறார்.
எப்படி இத்தனை உறுதியாக கூறுகிறீர்கள்?
குற்றப்பரம்பரை கதை என்னுடையது. நான் எழுதிய கதையை திருடி உள்ளனர். இதற்கான ஆதாரங்கள் என்னிடம் இருக்கிறது. குற்றப்பரம்பரை படத்தை பாலா இயக்க கூடாது.
அவர் மீது கோர்ட்டில் வழக்கு தொடர்வேன்.