Publish Date: Thu, 03 Jul 2014 (19:04 IST)
Updated Date: Thu, 03 Jul 2014 (19:09 IST)
மு.களஞ்சியத்தின் ஊர் சுற்றி புராணம் படத்தை முடித்த பிறகே அஞ்சலி வேறு படங்களில் நடிக்க வேண்டும் என தயாரிப்பாளர்கள் சங்க கில்டும், இயக்குனர்கள் சங்கமும் தடை விதித்திருந்தன. இந்நிலையில் இன்று காலை ஜெயம் ரவி நடிப்பில் சுராஜ் இயக்கும் புதிய படத்தில் படத்தின் படப்பிடிப்பில் அஞ்சலி கலந்து கொள்வார் எனவும் கூறப்பட்டது.
அஞ்சலி படப்பிடிப்பில் கலந்து கொள்வாரா அவரை நடிக்க அனுமதிப்பார்களா என்ற பரபரப்புடன் இன்றைய காலை விடிந்தது. சென்னை சாலிகிராமத்தில் உள்ள மோகன் ஸ்டுடியோவில் படப்பிடிப்புக்குழு தயாராக, அஞ்சலி படப்பிடிப்பு தளத்துக்கு வந்து சுராஜ் சொன்னபடி நடிக்கவும் செய்தார்.
ஷாட் இடைவேளையில் அவர் பத்திரிகையாளர்களை சந்தித்து அவர்களின் கேள்விகளுக்கு பதிலளித்தார்.
உங்களுக்கு திருமணம் நடந்ததாகவும், ஹைதராபாத்தில் தெலுங்கு நடிகர் ஒருவரின் கட்டுப்பாட்டில் இருப்பதாகவும் கூறப்பட்டதே?
என்னைப் பற்றி நிறைய வதந்திகள் வெளிவருகின்றன. எனக்கு திருமணம் நடந்துவிட்டது, யாருடைய கட்டுப்பாட்டிலோ இருக்கிறேன் என்றும் செய்திகள் வெளியானது. ஆனால் நான் யாருடைய கட்டுப்பாட்டிலும் இல்லை, எனக்கு திருமணமும் நடக்கவில்லை.
அப்படியானால் உங்கள் பிரச்சனைகள் அனைத்தும் தீர்ந்து விட்டதா?
தீர்ந்து விட்டது.
மு.களஞ்சியம் படத்தில் நடிப்பீர்களா?
அவர் படத்தில் நடிக்க மாட்டேன் என்றதனால்தானே பிரச்சனையே வந்தது.
அப்படியானால் அவரது படத்தில் ஒருபோதும் நடிக்கப் போவதில்லையா?
டைரக்டர் களஞ்சியம் பிரச்சனை கோர்ட்டில் இருப்பதால் அவர் சம்பந்தமான கேள்விகளுக்கு பதிலளிக்க முடியாது.
உங்களுக்கு யாராவது மிரட்டல் விடுத்தார்களா?
எனக்கு மிரட்டல்கள் எதுவும் வரவில்லை.
உங்களுக்கு யாராவது பாதுகாப்பாக இருக்கிறார்களா?
சினிமா உலகம்தான் எனக்கு பாதுகாப்பு. கஷ்டகாலத்தில் எனக்கு பாதுகாப்பு அளித்தது சினிமா உலகம்தான். இப்போதும் எனக்கு ஆதரவாக இருப்பது சினிமா உலகம்தான். அதனால்தான் என்னால் திரும்பி வந்து நடிக்க முடிகிறது.
கலகலப்பு படத்துக்குப் பிறகு சிங்கம் 2 படத்தில் ஒரு பாடலுக்கு ஆடினீர்கள். அதன் பிறகு ஏன் இந்த இடைவெளி?
தமிழில் 2 வருடங்களுக்குப் பிறகு நடிக்கிறேன். நல்ல படங்களில் நடிக்க வேண்டும் என்று காத்திருந்தேன். டைரக்டர் சுராஜ் சொன்ன கதை பிடித்திருந்தது. என்னுடைய கேரக்டர் சிறப்பாக இருந்தது. காமெடி கேரக்டர். நல்ல படத்தில் நடிக்க வேண்டுமென்ற என்னுடைய விருப்பம் இப்போது நிறைவேறியிருக்கிறது. தமிழ் படங்களில் தொடர்ந்து நடிப்பேன்.
நீங்கள் படங்களில் நடிப்பதற்கு தடை விதித்திருப்பதாக சில சங்கங்கள் அறிவித்திருந்ததே?
நான் நடித்ததை நீங்கள் பார்த்துக் கொண்டுதானே இருந்தீர்கள். ஒரு ஷாட்டில் நடித்துவிட்டுதானே உங்களுடன் பேசிக் கொண்டிருக்கிறேன்.
உங்களுக்கு தீராத வியாதி இருப்பதாக உங்கள் சித்தி சொன்னது...?
நான் வீட்டைவிட்டு வெளியேறிய கடுப்பில் அப்படி சொல்லியிருப்பார். நான் நல்ல ஆரோக்கியத்துடன்தான் இருக்கிறேன்.