தென் ஆப்பிரிக்காவில் டெஸ்ட் தொடரை வெல்வதற்காக முன்னால் அங்கு சென்றுள்ள இந்திய வீரர்கள் கேரி கர்ஸ்டன் தலைமையில் தீவிர பயிற்சியில் ஈடுபட்டுள்ளனர். "எழும்பும் ஆட்டக்களம்", "ஷாட் பிட்ச் பந்துகள்" என்பது இந்திய வீரர்களுக்கு எட்டிக்காய் என்ற பிரச்சாரத்தை முறியடிக்க கர்ஸ்டன் தயாராகிவருகிறார்.பொதுவாக இந்திய பேட்ஸ்மென்கள் பந்துகள் எழும்பும் கடினமான ஆட்டக்களங்களில் தடுமாறுவார்கள் என்பது தெரிந்ததே. இந்திய பேட்ஸ்மென்கள் மட்டும்தான் தடுமாறுகிறார்கள் என்று கூறமுடியாது.. பந்துகள் எழும்பும் ஆட்டக்களங்களில், அனைத்து பேட்ஸ்மென்களுமே தடுமாறத்தான் செய்கின்றனர்.ஆனால் அந்த அணிகளில் ஓரிரு சிறந்த பேட்ஸ்மென்களின் இன்னிங்ஸைச் சுற்றி பலரும் குறிப்பிடத்தகுந்த பங்களிப்பைச் செய்து ஒரு நல்ல திடமான ரன் எண்ணிக்கையை எட்டுவர்.அந்த ஓரிரு வீரர்கள் என்பது முன்பெல்லாம் இந்தியாவில் சுனில் கவாஸ்கர், அமர்நாத் ஆகிய வீரர்களாகவே இருந்தனர். ஆனால் இப்போது அப்படியல்ல, சேவாக், கம்பீர், திராவிட், சச்சின், லஷ்மண், தோனி என்று வரிசை பலமாக உள்ளது.அதனால் பௌன்ஸ் விக்கெட்டுகள் மட்டுமே இவர்களை அச்சுறுத்தி விடமுடியாது. எந்த பிட்ச் ஆனாலும் நல்ல அளவிலும், திசையிலும் துல்லியமாக வீசுவதுதான் விக்கெட்டுகளை வீழ்த்தும். பௌன்ஸ் ஆட்டக்களங்களில் இதனை ஒரு வேகப்பந்து வீச்சாளர் கடைபிடித்து வெற்றி கண்டால் மற்ற ஆட்டக்களங்களைக் காட்டிலும் பௌன்ஸ் ஆட்டக்களங்களில் விளைவுகள் அபாயகரமானதாக இருக்கும் அவ்வளவே.ஆனால் இன்றுள்ள ஆட்டக்களங்கள் பெரிய பௌன்ஸ் ஆகும் ஆட்டக்களங்களாக இல்லை. வேகப்பந்து வீச்சாளர்கள் கடினமாக உழைத்தே விக்கெட்டுகளை வீழ்த்த வேண்டியிருக்கிறது.தென் ஆப்பிரிக்க முதன்மை வேகப்பந்து வீச்சாளர் டேல் ஸ்டெய்னும் இதைத்தான் கூறியுள்ளார்.மேலும் அவர் இந்திய பேட்ஸ்மென்கள் குறித்து எச்சரிக்கையில், இப்போதெல்லாம் இந்திய அணி அயல்நாட்டு மைதானங்களில் சிறப்பாக விளையாடி வருகின்றனர். இந்திய அணியின் அனுபவம் தென் ஆப்பிரிக்காவுக்கு பெரிய அச்சுறுத்தல் என்றும் தெரிவித்துள்ளார்.மேலும் இப்போது இந்திய வரிசையில் உள்ள சேவாக், சச்சின், திராவிட், லஷ்மண் ஆகியோர் இந்திய
ஆட்டக்களங்கள் மற்றும் அயல்நாட்டு ஆட்டக்களங்கள் இரண்டிலும் சரிசமமான சராசரியை வைத்திருப்பவர்களே.இதனால் அஞ்ச வேண்டியது தென் ஆப்பிரிக்க அணியே. மேலும் இந்திய வேகப்பந்து வீச்சாளர்கள் பந்துகளை இந்திய ஆட்டக்களங்களிலேயே ஸ்விங் மற்றும் ரிவர்ஸ் ஸ்விங் செய்யத் தொடங்கி விட்டனர். உதவிகரமான தென் ஆப்பிரிக்க ஆட்டக்களங்களில் இந்திய பந்து வீச்சு தென் ஆப்பிரிக்க பேட்ஸ்மென்களுக்கும் அச்சுறுத்தல்தான் என்பதை நாம் மறுக்க முடியாது.
கேரி கர்ஸ்டனின் பயிற்சி முறை
தற்போது முன்கூட்டியே சில வீரர்களை தென் ஆப்பிரிக்கா அழைத்துச் சென்றுள்ள கேரி கர்ஸ்டன், அங்கு ஒவ்வொரு பேட்ஸ்மெனுக்கும் முதல் டெஸ்ட் போட்டிக்கு முன்பாக 2000-3000 பந்துகளை அடித்துப்பழக பயிற்சி அளித்து வருகிறார்.
அவரது சொந்த கிரிக்கெட் அகாடமியைப் பயன்படுத்தி தன் சொந்த நாட்டுக்கு எதிராக திட்டம் தீட்டுகிறார் கேரி கர்ஸ்டன், ஏனெனில் தென் ஆப்பிரிக்காவில் இந்திய அணி படுதோல்வி அவமானத்தைச் சந்தித்து விடக்கூடாது என்பதில் அவர் தெளிவாக இருக்கிறார்.
நெருக்கடிநிலையை எதிரணியினருக்கு ஏற்படுத்தவேண்டும் அதற்கு இது போன்ற பயிற்சி அவசியம் என்று டைம்ஸ் இதழில் கூறியுள்ள கேரி கர்ஸ்டன், இப்போதைக்கு உலகில் இந்திய பேட்ஸ்மென்கள் அத்தகைய நெருக்கடிகளை எதிரணியினருக்கு கொடுத்து வருகின்றனர். எனவே நெருக்கடி ஒருதலைப்பட்சமாக இருக்காது என்று கூறியுள்ளார்.
களம் 20 விக்கெட்டுகளை வீழ்த்த உதவிகரமாக இருக்கிறதா என்பதல்ல முக்கியம் என்று கூறும் கர்ஸ்டன் தொடர்ந்து எந்த அணி மற்றொரு அணியை நெருக்கடி கொடுத்து அழுத்துகிறதோ அந்த அணி வெற்றி பெறும் வாய்ப்பு அதிகம் என்று நம்புகிறார். முதல் பந்திலிருந்தே நெருக்கடியை எதிரணி பக்கம் திருப்ப இப்போது தயாராகி வருவதாக கேரி கர்ஸ்டன் தெரிவித்துள்ளார்.
டெஸ்ட் போட்டிகள் ஓன்று அல்லது இரண்டு செஷன்களில் திசை மாறக்கூடியது. அதுவும் உலகின் நம்பர் 1 அணியும் 2ஆம் நிலை அணியும் மோதுவதால் இது ஒரு டெஸ்ட் சாம்பியன்ஷிப் போட்டியாகவே பார்க்கப்படுகிறது.
தென் ஆப்பிரிக்க மண்னில் இந்தியா ஒரேயொரு டெஸ்ட் போட்டியில் மட்டுமே வெற்றி பெற்றுள்ளது.
மாறாக கேரி கர்ஸ்டன் பொறுப்பேற்ற பிறகு இந்தியா 25 டெஸ்ட் போட்டிகளில் 2 டெஸ்ட் போட்டிகளில் மட்டுமே தோல்வி தழுவியுள்ளது.
செய்வதை ஒழுங்காகச் செய்தால் பலன்கள் தானாக விளையும் என்பது கேரி கர்ஸ்டனின் கொள்கை, அதனை அவர் சீரிய முறையில் இது வரை செய்து வந்துள்ளார். தென் ஆப்பிரிக்காவிலும் இந்திய அணி வரலாறு படைக்கச் செய்வார் என்று எதிர்பார்க்கலாம்.