எந்த அணியை அனுப்பவேண்டும் என்பதை ஒலிம்பிக் குழு தீர்மானிக்க அதிகாரம் இல்லை
, வெள்ளி, 29 அக்டோபர் 2010 (13:29 IST)
ஆசியப்போட்டிகளில் முதன்முதலாக கிரிக்கெட் சேர்க்கப்பட்டுள்ள நிலையில், முன்னணி வீரர்கள் இல்லாத இரண்டாம் நிலை இந்திய கிரிக்கெட் அணியை அனுப்ப இந்திய ஒலிம்பிக் சங்கச் செயலர் ரந்தீர் சிங் மறுப்பு தெரிவித்துள்ளதாக செய்திகள் வெளியாயின. எந்த இந்திய கிரிக்கெட் அணியை அனுப்பவேண்டும் என்பதை தீர்மானிக்கும் அதிகாரம் இந்திய ஒலிம்பிக் சங்கத்திற்கு இல்லை.முதன் முறையாக ஆசியப்போட்டிகளில் கிரிக்கெட் போட்டிகள் சேர்க்கப்பட்டுள்ளது. இதற்காக சீனாவின் குவாங்சூவில் அருமையான கிரிக்கெட் மைதானம் தயார் செய்யப்பட்டுள்ளது. ஆனால் கிரிக்கெட் உலகின் தற்போதைய பிரபல அணியான இந்திய அணி இதில் கலந்து கொள்ளவில்லை. இதற்கு பல்வேறு தரப்பிலிருந்தும் விமர்சனங்கள் வந்துள்ளன.வங்கதேசத்திலிருந்து சென்றுள்ள மைதானத் தயாரிப்பாளர் ஜாஷிம் உத்தின் அங்கு ஜியார்ஜியா புற்களை இடுவதில் அதிக கவனத்துடன் செயல்பட்டு வருவதாகப் பத்திரிக்கை செய்திகள் தெரிவிக்கின்றன.ஒலிம்பிக் போட்டிகளிலும் கிரிக்கெட் போட்டிகளைச் சேர்க்கவேண்டும் என்ற கோரிக்கைகளுக்கு இடையில் ஆசியப் போட்டிகளில் கிரிக்கெட் சேர்க்கபப்ட்டுள்ளது.இதில் ஆசியாவின்... அல்ல... உலகின் நம்பர் 1 அணி பங்கேற்கவில்லை என்பது ஆசியப் போட்டிகளில் கிரிக்கெட் சேர்க்கப்பட்டதையே சர்ச்சைக்குள்ளாக்குகிறது என்று ஆசியப் போட்டிகள் அதிகாரிகள் பலரும் உணர்கின்றனர்.குறிப்பாக பாகிஸ்தான், இலங்கை, வங்கதேச அணிகள் பங்கு பெறும் போது இந்தியா அணியை அனுப்ப மறுத்திருப்பது தற்போது பலதரப்பிலிருந்தும் விமர்சனத்தைக் கிளப்பியுள்ளது.அதாவது நியூஸீலாந்து அணிக்கு எதிராக 3 டெஸ்ட் 5 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடர் ஏற்கனவே ஐ.சி.சி.யின் எதிர்கால கிரிக்கெட் போட்டிகளின் பட்டியலில் இடம்பெற்றுவிட்டது இப்போது ஒன்றும் செய்யவியலாது என்று இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் கைவிரித்துள்ளது.சரி முன்னணி வீரர்கள் இல்லாவிட்டாலும் ரெய்னா தலைமையில் ஒரு அணி ஜிம்பாப்வேயில் பயணம் மேற்கொண்டது போல், இன்னொரு அணியை அனுப்பலாம். ஆனால் அந்த முடிவும் கைகூடவில்லை.ஆனால் இந்திய ஒலிம்பிக் சங்கச்செயலர் ரந்தீர் சிங், இரண்டாம் தர அணியை அனுப்புவதை ஏற்றுக் கொள்ளமுடியாது என்று மறுத்து விட்டதாகச் செய்திகள் தெரிவிக்கின்றன.ஆனால் இரண்டாம் நிலை அணியாக இருந்தாலும் சரி என்று சீன ஒலிம்பிக் கழகமும் இதற்கு ஒப்புதல் அளித்தது. ஆனால் பி.சி.சி.ஐ-யிற்கும் ரந்தீர் சிங்குக்கும் ஏற்பட்ட கருத்து வேற்றுமையால் இந்திய அணி பங்கேற்பு இல்லாமல் போய் விட்டது.மற்றொரு இந்திய அணியை அனுப்புவதற்கு இந்திய ஒலிம்பிக் கழகச் செயலர் மறுப்பு தெரிவித்துள்ளது ஆச்சரியமாக உள்ளது. இந்தியாவில் முன்னணி வீரர்கள் தவிர நிறைய மாநிலங்களில் திறமையான, இந்திய அணிக்குள் இப்போது நுழைய முடியாத ஆனால் சிறப்பாக விளையாடும் வீரர்கள் இருக்கவே செய்கின்றனர். இந்த நிலையில் ஆசியப் போட்டிகளில் கிரிக்கெட் சேர்க்கப்பட்டுள்ள இந்த முதன்முறையில் இந்தியா பங்கேற்காதது பலதரப்பிலிருந்தும் விமர்சனங்களை எழுப்பியுள்ளது.இதனால் ஆசியப் போட்டிகள் போன்ற ஒரு மிகப்பெரிய விளையாட்டு அரங்கில் கிரிக்கெட் முதன் முதலாகச் சேர்க்கப்பட்டிருக்கும் போது அதில் இந்தியா பங்கேற்காமல் போவது நாட்டின் விளையாட்டுத் துறைக்கு பெருமை சேர்க்கப்போவதாக அமையாது.குவாங்சூவில் பணியாற்றும் ஆசியப்போட்டிகளுக்கான அதிகாரி ஒருவர் இந்திய அணி பங்கேற்காதது குறித்து தனது ஏமாற்றத்தை வெளியிட்டுள்ளார். "சீனாவில் உள்ளவர்களுக்கு இந்தியாவும் கிரிக்கெட்டும் ஒன்றுதான், சீனாவில் கிரிக்கெட்டை வளர்க்க நடைபெறும் முயற்சிகளுக்கும் இந்திய அணியின் பங்கேற்பு தூண்டுகோலாக அமைந்திருக்கும், இந்திய கிரிக்கெட் வீரர்கள் பங்கேற்காமல் இருப்பது ஒரு பெருத்த ஏமாற்றமே." என்று கூறியுள்ளார்.இந்திய கிரிக்கெட் வாரியத்தின் இந்த முடிவால் ஒலிம்பிக் போட்டிகளில் கிரிக்கெட்டையும் சேர்க்கவேண்டும் என்ற கோரிக்கையும் வலுவிழ்ந்து விடும் சூழல் ஏற்பட்டுள்ளது.சீன மகளிர் கிரிக்கெட் அணி கடந்த ஆசிய கிரிக்கெட் பேரவையின் இருபது ஓவர் கிரிக்கெட் தொடரில் அரையிறுதிக்கு முன்னேறியதிலிருந்து சீனாவிலும் கிரிக்கெட் மெதுவே பிரபலமடைந்து வருகிறது.இந்திய ஹாக்கி அணி பின்னடைவுகளைச் சந்தித்து வரும் இந்த நிலையில் ஆசியப் போட்டிகளிலும், ஒலிம்பிக் போட்டிகளிலும் (கிரிக்கெட் சேர்க்கப்பட்டால்) இந்திய கிரிக்கெட் அணி விளையாடினால் அது இந்திய ரசிகர்களுக்கு பெரும் உற்சாகத்தை அளிக்கும் என்பதில் ஐயமில்லை.கிரிக்கெட் அணியை ஆசியப் போட்டிகளுக்கு அனுப்பாததால் இந்தியாவுக்குத்தான் பெருமை இழப்பே தவிர ஆசியப் போட்டிகளுக்கு அல்ல. இந்திய அணி இல்லாமலே அங்கு கிரிக்கெட் போட்டிகள் நடைபெறத்தான் போகின்றன.