சர்வதேச கிரிக்கெட் பேரவை முதன் முதலாக நடத்திய இருபதுக்கு20 உலகக் கோப்பபையை மகேந்திர சிங் தோனி தலைமையிலான இளம் இந்திய அணி வென்றுள்ளது மதிப்பு வாய்ந்த, பெருமைக்குரிய வெற்றியாகும்!
இந்த ஆண்டு மார்ச்-ஏப்ரலில் நடந்த உலகக் கோப்பை போட்டியில் பெரிதும் பேசப்பட்ட இந்திய அணி, முதல் சுற்றிலேயே தோற்று வெளியேறியதால் ஏமாற்றத்திற்குள்ளான நமது நாட்டு கிரிக்கெட் ரசிகர்களுக்கு இந்த வெற்றி மட்டற்ற மகிழ்ச்சியைத் தந்தது மட்டுமின்றி, இந்திய கிரிக்கெட் அதன் தரத்தில் குறைந்துவிடவில்லை என்பதையும் நிரூபித்துள்ளது.
உலகத்தின் மிகச் சிறந்த வீரர்களில் ஒருவர் என்று கூறப்பட்ட கிரெக் சாப்பலை பயிற்சியாளராகவும், உலக அளவில் தலைசிறந்த வீரர்கள் சிலரை கொண்டதாகவும் கருதப்பட்ட இந்திய அணி அன்று தோற்றது. பந்து வீச்சிற்கும், ஃபீல்டிங்கிற்கும் இந்திய முன்னாள் வீரர்களை பயிற்சியாளர்களாகக் கொண்ட இந்த அணி கோப்பையை வென்றுள்ளதுதான் குறிப்பிடத்தக்கதாகும்.
இறுதியில் மட்டுமல்ல, அதற்கு முந்தைய 3 போட்டிகளிலும் இந்த இளம் அணி மிகச் சிறப்பாக ஆடியதே அதன் திறனிற்கு அத்தாட்சியாகும். அபாரமாக ஆடி இங்கிலாந்து அணிக்கு எதிராக 218 ரன்கள் குவித்ததும், தென் ஆப்ரிக்க அணியை 35 ரன்கள் வித்தியாசத்தில் தோற்கடித்ததும், உலகின் தலைசிறந்த அணியான ஆஸ்ட்ரேலியாவை அரையிறுதியில் சிறப்பாக விளையாடி தோற்கடித்ததும், இருபதுக்கு20 உலகக் கோப்பையை வெல்வதற்குரிய தகுதியனைத்தும் தங்களுக்கு உள்ளது என்பதனை நன்கு நிரூபித்த பின்னரே இறுதியில் களமிறங்கியது இந்திய அணி.
அதனால்தான், ஆட்டத்தின் இறுதிகட்டத்தில் ஏற்பட்ட இழுபறி சூழ்நிலையிலும், விக்கெட்டுகளைக் கைப்பற்றி, சிறப்பாக விளையாடிய பாகிஸ்தானை மிகக் குறைந்த ரன்கள் வித்தியாசத்தில் தோற்கடித்து கோப்பையை வென்றது இந்திய அணி.
கெளதம் கம்பீர், வீரேந்தர் சேவாக், யுவராஜ் சிங், உத்தப்பா, மகேந்திர சிங் தோனி, ரோஹித் சர்மா என்று எல்லா வீரர்களும் தங்களது மட்டைத் திறனை சிறப்பாக நிரூபித்தனர். இப்படிப்பட்ட அதிரடி ஆட்ட முறையில், பிரட் லீ, பிராக்கன், போலாக் போன்ற தலைசிறந்த வீரர்களின் பந்து மைதானத்தின் கரைகளையெல்லாம் முத்தமிட்டபோதும், ருத்ர பிரதாப் சிங், ஸ்ரீசாந்த், இர்ஃபான் பத்தான் ஆகியோர் மிகச் சிறப்பாக பந்து வீசி ரன்களைக் கட்டுப்படுத்தியது மட்டுமின்றி, விக்கெட்டுகளையும் வீழ்த்தினர். அவர்களுடைய விக்கெட் கைப்பற்றும் திறனே நேற்றைய போட்டியில் திருப்புமுனையாக அமைந்தது. ஃபீல்டிங்கும் மிக அருமையாக இருந்தது. பெளண்டரி கோடு வரை பந்து சென்றாலும் ஒரு ரன்னிற்கு மேல் எடுக்கவிடாமல் தடுத்தது இந்திய அணியின் சிறப்பான ஃபீல்டிங்காகும். எல்லாவற்றிற்கும் மேலாக எந்த அழுத்தமோ, நிர்பந்தமோ இன்றி ஒவ்வொரு வீரரும் தங்களுடைய திறனை தங்களுக்கு உரிய வகையில் வெளிப்படுத்த அனுமதிக்கப்பட்டதே இந்திய அணியினர் ஒட்டுமொத்தமாக சிறப்பாக ஆடியதற்கு காரணமாகும். தலைசிறந்த பயிற்சியாளர், மெத்தப் பயிற்சி பெற்ற அயல்நாட்டு உடல் நலக் காப்பாளர், உடற்பயிற்சியாளர் போன்றவர்கள் இல்லாமலேயே இந்திய அணியால் சிறப்பாக விளையாட முடியும் என்பதும் இப்போட்டிகளில் நிரூபணமாகியுள்ளதை கவனிக்க வேண்டும். எனவே, பயிற்சியாளர் என்ற ஒருவர்தான் கிரிக்கெட் அணிக்கே கடவுள் என்பது போல ஒரு உருவகத்தை ஏற்படுத்தி அவரைத் தேடி காடு மேடென்று அலையாமல் நமது நாட்டு அனுபவமிக்க முன்னாள் ஆட்டக்காரர்களைக் கொண்டு அணியை வழி நடத்தச் செய்து இளம் வீரர்களுக்கு வாய்ப்பு அளித்து இதைப்போல மேலும் பல வெற்றிகள் பெற கிரிக்கெட் வாரியம் உதவிட வேண்டும்.
இந்த வெற்றி இந்திய அணியின் ஒட்டுமொத்த திறனிற்கு கிடைத்த வெற்றிதான் என்றாலும், யுவராஜ் சிங்கின் அதிரடியான ஆட்டத்தை தனித்துப் பாராட்டாமல் இருக்க முடியவில்லை. அபாரமானது அவருடைய ஆட்டம். இங்கிலாந்து அணிக்கு எதிராக 12 பந்துகளில் அவர் அடித்த அரை சதம் இந்திய அணிக்கு எந்த அணியையும் எதிர்கொண்டு அடித்தாடும் துணிச்சலைத் தந்தது.
யுவராஜ் சிங்கிற்கு தனியாக ரொக்கப் பரிசு அளித்து ஊக்குவித்த வாரியமும் பாராட்டிற்குரியதே.