உலகக் கோப்பை கிரிக்கெட்டில் நடுவர் பணியாற்றி வரும் இலங்கை நடுவர் அசோக டிசில்வாவின் நடுவர் பொறுப்பிற்கான திறமைகள் மீது கேப்டன்களுக்கு கடும் சந்தேகங்கள் எழுந்துள்ளது. அயர்லாந்து கேப்டன் போர்ட்டர்ஃபீல்ட் தற்போது டிசில்வாவின் தீர்ப்பின் மீது விமர்சனம் வைத்து எச்சரிக்கை செய்யப்பட்டுள்ளார்.மேற்கிந்திய தீவுகளுக்கு எதிரான அயர்லாந்து ஆட்டத்தின் போது அயர்லாந்து வீரர் கேரி வில்சனுக்கு நடுவர் அசோக டிஸில்வா அவுட் கொடுத்தது பற்றி விமர்சனம் செய்ததற்காக அயர்லாந்து கேப்டன் போர்ட்டர்ஃபீல்டிற்கு ஐ.சி.சி. எச்சரிக்கை விடுத்துள்ளது.அன்றைய தினம் கேரி வில்சன் 61 ரன்கள் எடுத்து விளையாடி வந்தபோது அசோக டிசில்வா அவருக்கு எல்.பி.டபிள்யூ. கொடுத்தார். பந்து ஆஃப் ஸ்டம்புக்கு வெளியே அவரது பேடைத் தாக்கியது. விதிகளின் படி இது நாட் அவுட். ஆனால் அசோக டிசில்வா பேட்ஸ்மென் பந்தை விளையாடாமல் பேடால் தடுத்தார் என்று நினைத்து அவுட் என்று தீர்மானித்தார்.மேல் முறையீடு செய்யப்பட்டபோது பந்து ஆஃப் ஸ்டம்புக்கு வெளியே பிட்ச் ஆனது தெரிந்தது. அப்போதே அது நாட் அவுட்தான் இதில் பந்தை விளையாட முயன்றாரா அல்லது இல்லையா என்பதெல்லாம் கேள்வியே அல்ல என்பது போர்ட்டர்ஃபீல்டின் வாத்ம்.மேலும் மேல்முறையீடு செய்தபோது பந்து பேடை முதலில் தாக்கியதா பேட்டை முதலில் தாக்கியதா என்றே டிசில்வா கேட்டார். அப்படியிருக்கையில் பந்தை அவர் விளையாட முயன்றாரா இல்லையா என்ற கேள்வி எங்கிருந்து வரும்? என்று அயர்லாந்து கேப்டன் கேட்பதில் நியாயம் இல்லாமலில்லை.நடுவர் அசோக டிசில்வாவின் நடுவர் திறமைகளின் மீது நிறைய சந்தேகங்கள் ஏற்கனவே உண்டு. சௌரவு கங்கூலிக்கு குறைந்தது 4 முறையாவது டெஸ்ட் போட்டிகளில் மட்டையின் விளிம்பில் பட்ட பந்திற்கு எல்.பி.டபிள்யூ. கொடுத்தவர்தான் இந்த அசோக டிசில்வா.இந்த உலகக் கோப்பை போட்டிகளிலும் அவரது திருவிளையாடல் இல்லாமல் இல்லை. தென் ஆப்பிரிக்காவுக்கும் ஹாலந்து அணிக்கும் இடையே நடைபெற்ற போட்டியில் இவர் இரண்டு மிகவும் எளிமையான தீர்ப்பை கொடுக்க முடியாமல் அணியினர் ரீ-வியூ செய்த பிறகு தனது தீர்ப்பை மாற்றிக் கொண்டார். பீட்டர் போரனுக்கு அவுட் கொடுக்க மறுத்தார். ஆனால் ரீ-பிளேயில் பந்து மிட்ல் ஸ்டம்பை தாக்குவது தெரிந்த பிறகு முடிவை மாற்றி அவுட் என்று தீர்மானித்தார்.
இதே போட்டியில் மற்றொரு ஹாலந்து வீரர் ஜுடெரென்டிற்கு எல்.பி.டபிள்யூ. என்று தீர்ப்பளித்தார். ஆனால் பந்து மட்டையின் உள்விளிம்பைத் தாக்கிய பிறகே பேடில் பட்டது. இந்த முடிவையும் அவர் மாற்ற வேண்டி நேரிட்டது.
அதேபோல் ஆஸ்ட்ரேலியாவுக்கும், ஜிம்பாப்வேயிற்கும் நடைபெற்ற போட்டியிலும் இரண்டு எளிமையான தீர்ப்புகளில் பின் வாங்கினார் அசோக டிசில்வா. பிராட் ஹேடின் பின்னால் சென்று நேராக பேடில் வாங்கிய பந்து மிடில் ஸ்டம்பை பதம் பார்த்திருக்கும் ஆனால் நாட் அவுட் என்று கூறி பிறகு ரீ-வியூவில் அவர் முடிவை மாற்றினார்.
அதே போட்டியில் ஜிம்பாப்வே வீரர் எர்வைன் நேராக பேடில் வாங்கினார். ஆனால் அந்த அவுட்டையும் நாட் அவுட் என்றார் அசோக டிசில்வா. அதனையும் பின்பு மேல்முறையீட்டில் மாற்ற வேன்டியதாயிற்று.
நடுவர் தீர்ப்பு மேல்முறையீட்டு விதிமுறைகளில் பல குழப்பங்கள் இருந்து வருகின்றன. அதனை சரி செய்ய வேண்டும். நடுவர் தீர்ப்பே இறுதி என்ற போது எக்டற்கு ரிவியூ முறை வைக்கப்பட்டுள்ளது?
ரிவியூ முறை அமலுக்கு வந்த பின்பே நடுவர்களின் திறமையையும் அது பரிசோதிக்கும் அளவுகோலாக செயல்படவேண்டும். ஆனால் அவ்வாறு நடப்பதில்லை.
யுவ்ராஜ் சிங் பந்தில் இயன் பெல் தீர்ப்பும் இவ்வாறுதான் குழப்பத்தில் முடிந்தது. அதற்கு 2.5 மீ தூரம்த்தைக் காரணம் காண்பித்து நாட் அவுட் என்றவர்கள் அடுத்த போட்டியில் அதே 2.5 மீ தூரத்தைக் கணக்கில் எடுத்துக் கொள்ளாமல் அவுட் கொடுக்கின்றனர்.
இந்த முரண்பாடுகளைக் களையவேண்டும். தோனி மிக அருமையாக, தத்துவார்த்தமாகக் கூறியது போல் ஒன்று தொழில் நுட்பத் தீர்ப்பை உறுதி செய்ய வேண்டும். இல்லையா, நடுவர் தீர்ப்பை உறுதி செய்யவேண்டும், மனித முடிவும், தொழில் நுட்ப முடிவும் கலப்படம் செய்யலாகாது என்று கூறினார் தோனி. இதைவிட யு.டீ.ஆர்.எஸ் முறை மீது கறாரான விமர்சனத்தை இதுவரை யாரும் வைத்ததில்லை.
மேல் முறையீடு செய்த பிறகே கள நடுவரிடம் ஏன் அவுட் என்று தீர்மானித்தீர்கள் என்றோ, ஏன் அவுட் இல்லை என்று தீர்மானித்தீர்கள் என்றோ கேட்பதில் எந்த வித நியாயமும் இருப்பதாகத் தெரியவில்லை.