பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர்கள் சூதாட்டத்தில் ஈடுபட்டுள்ளதாக அடுத்தடுத்து செய்திகள் வந்த வண்ணம் உள்ள நிலையில் இந்த விவகாரத்தில் இது வரை வெளியானது பனிப் பாறையின் முகடு மட்டுமே என்று கருதப்படுகிறது.
ஐ.சி.சி., பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் ஆகியவை கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்று எச்சரித்திருந்தாலும், பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத்திற்கே கராச்சியிலிருந்து செயல்படும் ஒரு சூதாட்டக் கும்பலிடமிருந்து நெருக்கடி அதிகரித்திருக்கலாம் என்ற செய்திகள் வந்திருப்பது தற்போது புதிய திருப்பத்தை ஏற்படுத்தியுள்ளது.
இதுகுறித்து ஏகப்பட்ட செய்திகள் 1999ஆம் ஆண்டிலிருந்தே கிரிக்கெட் உலகை ஆட்டிப்படைத்து வருகிறது. ஹேன்சி குரோனியே, மொகமட் அசாருதீன், அஜய் ஜடேஜா, சலீம் மாலிக் ஆகியோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்பட்ட பிறகும் கூட இந்த சூதாட்டக் கும்பல்களின் வலைப்பின்னலை ஒன்றும் செய்ய முடியாதது பெரும் வெட்கக்கேடு. குற்றத்திற்கு தூண்டுபவர்களை முதலில் பிடித்துத் தண்டித்தால் குற்றம் எப்படி நிகழும்?
பிறகு ஒரு தொடர் முடியும் வரை இந்த செய்திகள் ஏன் மறைக்கப்படுகின்றன? பிரிட்டன் பத்திரிக்கை இந்த விசாரணையை அண்டர் கவர் ஆபரேஷன் என்று செய்திருக்கும்போது இந்த உண்மைகள் என்ன டெஸ்ட் தொடர் முடிந்த பிறகுதான் தெரியவருமா?
முன்கூட்டியே தெரிந்திருக்குமானால் தொடர் பாதிக்கக்கூடாது என்பதற்காக உண்மைகள் வெளியாவது ஒத்திப் போடப்படுகின்றனவா? அப்படியென்றால் அந்த முடிவுகளை எடுப்பது யார்? குற்றம் நடக்கும் போதே தடுக்காமல் அதன் பிறகு விசாரணை, என்றெல்லாம் இழுத்தடித்து அதிலும் உண்மை ஒன்றும் வெளிவராமல் இருக்கச் செய்வதுதான் இந்த ஒட்டு மொத்த நடவடைக்கைகளின் உள் நோக்கமா? இதெல்லாம் புரியவில்லை.
ஆட்ட நிர்ணய சூதாட்டம் பொறுத்தமட்டில் இன்னும் எந்தவித பருமையான உண்மைகளையும் இன்னும் ஒருவரும் கண்டுபிடித்துவிடவில்லை அல்லது கண்டுபிடித்திருந்தாலும் உண்மைகளை வெளியிடவில்லை என்ற சந்தேகம் வலுத்து வருகிறது.
இதில் வெறும் பணம் மட்டுமல்லாது வீரர்களை பெண்களை வைத்து ஆசை காட்டுவதும் நடந்து வருவதாக செய்திகள் வெளியாகியுள்ளன. பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியமே சூதாட்டக்காரர்களால் நெருக்கடிக்கு உள்ளாகியுள்ளது என்ற செய்தி இந்த விவகாரம் குறித்து எந்த ஒரு உண்மையும் வெளிவர வாய்ப்பேயில்லை என்பதைத்தான் உறுதி செய்கிறது.
பிரிட்டன் காவல்துறையின் விசாரணை முடிந்த பிறகுதான் உண்மை விவரம் தெரியவரும். மீண்டும் மீண்டும் ஏன் பாகிஸ்தான் வீfரர்கள் மட்டும் இந்த விவகாரத்தில் அடிபடுகின்றனர்? இந்திய சூதாட்டக்காரர்களின் பங்கு இதில் என்ன? போன்ற கேள்விகளுக்கெல்லாம் விடை காணுவது பிரச்சனையின் அடியாழத்திற்குச் சென்றால்தான் விளங்கும்.
இப்போதைக்கு மீண்டும் ஒரு குழப்பம், உண்மை வெளிவருமா வராதா என்ற சந்தேகம். இவை தவிர வேறு எதுவும் கிரிக்கெட் ஆர்வர்லர்களுக்கு இல்லை என்றே தோன்றுகிறது.