சச்சின் டெண்டுல்கர் தனது இளமையான ஆட்டத்திறனுக்குத் திரும்பவேண்டும்-இயன் சாப்பல்
, செவ்வாய், 22 நவம்பர் 2011 (12:32 IST)
தனது 100வது சதத்தை எடுக்கும் முனைப்புடன் ஆடி வரும் சச்சின் தனது வழக்கமான, அவருக்கு எளிதில் கைகூடிவரும் ஆக்ரோஷ ஆட்டத்தைக் கைவிட்டது அவரது பேட்டிங்கை மிகவும் பாரம்பரியத் தன்மைக்குக் கொண்டு செல்கிறது என்று ஆஸ்ட்ரேலிய கிரிக்கெட் நிபுணர் இயன் சாப்பல் கருத்து தெரிவித்துள்ளார்.கிரிக்கெட் இணையதளம் ஒன்றிற்கு அவர் எழுதியுள்ள பத்தியில் கூறியிருப்பதாவது:"
சச்சின் டெண்டுல்கர் எதிரணி பந்து வீச்சாளர்களை தனது விரைவு கால் நகர்த்தல்களால் தாக்குதல் ஆட்டம் ஆடி அயரவைப்பதைப் பார்ப்பது கிரிக்கெட்டில் மிகவும் மகிழ்ச்சியான தருணங்களாகும், ஆனால் தற்போது அவர் தனது 100வது சதத்திற்காக தடுமாறுவதைப் பார்க்கும்போது கஷ்டமாக உள்ளது.1998
ஆம் ஆண்டு ஷேன் வார்னின் பந்துகளை அவர் துவம்சம் செய்த அதே நினைவுடன் அன்று ஈடன் கார்டன்சில் சுமார் பந்து வீச்சாளர்களாகிய மர்லன் சாமுயேல்ஸ் மற்றும் தேவேந்திர பிஷூவிடம் தடுமாறியது சங்கடமாக உள்ளது, மாறாக திராவிட் அவரது இயல்பான ஆட்டத்தை எதிர்முனையில் ஆடினார்.சச்சின் டெண்டுல்கர் அவரது உச்சகட்ட பார்மில் இருக்கும்போது இந்த ஸ்பின்னர்கள் டெண்டுல்கரை கட்டுப்படுத்தியிருக்க முடியுமா? தனது விரைவு கால் நகர்த்தல்களால் அவர் பந்து வீச்சாளர்களுக்கு ஒரு நிமிடம் கூட நிம்மதியைக் கொடுத்திருக்க மாட்டார்.அவரது உச்சகட்ட ஆட்டத்தின் போது வார்ன் மட்டுமல்ல கிளென் மெக்ராவையும் வெறுப்பேற்றி மெக்ராவை ஆக்ரோஷமாக வீசச் செய்து அவரை ஒழுங்காக பந்து வீச விடாமல் பல சமயங்களில் டெண்டுல்கர் ஆட்கொண்டுள்ளார்.ஆஅனால் இப்போது ஒரு சாதாரணப் பந்து வீச்சைக் கூட அவர் நிதானமாக ஆடுவது வேதனை தருவதாக இருக்கிறது.
அவர் மீண்டும் மீண்டும் வலைப்பயிற்சியில் அர்த்தமற்ற வகையில் பல பந்துகளை எதிர்கொள்ள வேண்டிய அவசியம் என்ன? இவரைப் போன்ற பெரிய வீரர்கள் வலையில் அதிக நேரம் பேட் செய்து நான் பார்த்ததில்லை. அன்றுதான் டெண்டுல்கர் மீது இந்திய ரசிகர்களின் எதிர்பார்ப்பு அவருக்க் ஏற்படுத்தும் நெருக்கடியைப் பற்றி படித்தேன். ஆனால் லாரா போன்ற பெரிய வீரர்கள் தங்கள் ஆட்டத்தின் போக்கை ஒருநாளும் மாற்றிக் கொண்டதில்லை.எது எப்படியிருந்தாலும் இந்த 100வது சதம் என்ற கனவு அவரது ஆட்டத்தை அவரது பழைய பாணியிலிருந்து ஒதுக்கி பாரம்பரிய ஆட்ட முறையைக் கைகொள்ளச் செய்கிறது என்பது உண்மைதான். இது அவருக்கு வராத ஒன்று இதனால்தான் ஆடும்போது அவரது உடல்மொழி எதிரணியினருக்கு அவரது அசௌகரியத்தை உணர்த்துவதாய் அமைந்து விடுகிறது.ஆஸ்ட்ரேலியாவுக்கு எதிராக 175 ரன்களை ஒருநாள் போட்டியில் எடுத்ததும், அதைவிட விரைவாக விளையாடி தென் ஆப்பிரிக்காவுக்கு எதிராக ஒருநாள் போட்டியில் இரட்டை சதம் எடுத்த டெண்டுல்கரையும் நான் மீண்டும் பார்க்க விழைகிறேன்.சச்சின் டெண்டுல்கர் தனது ரசிகர்களின் எதிர்பார்ப்பை சற்றே ஒதுக்கி வைத்து தனது இளமைக்கால ஆக்ரோஷ மனப்பான்மையை மீண்டும் கொண்டு வரவேண்டும். 100வது சதம் அதன் பிறகு தானாகவே நிகழும்".இவ்வாறு அந்தப் பத்தியில் இயன் சாப்பல் கூறியுள்ளார்.