விசாரணை கடந்து வந்த பாதை ஒரு சிறப்புப் பார்வை
விசாரணை கடந்து வந்த பாதை ஒரு சிறப்புப் பார்வை
Publish Date: Fri, 23 Sep 2016 (10:58 IST)
Updated Date: Fri, 23 Sep 2016 (11:06 IST)
வெற்றிமாறனின் விசாரணை திரைப்படம் 2017 -ஆம் ஆண்டுக்கான ஆஸ்கர் விருதுப் போட்டிக்கு சிறந்த வெளிநாட்டு திரைப்பட பிரிவில் இந்தியா சார்பில் அனுப்ப தேர்வாகியுள்ளது.
லாக்கப் நாவலை படிகத்த வெற்றிமாறன் அந்த நாவலை படமாக்க முடிவு செய்கிறார். லாக்கப் நாவல் உண்மை சம்பவத்தின் அடிப்படையில் எழுதப்பட்டது. லாக்கப் நாவலை மட்டும் ஒருமணி நேரப் படமாக எடுப்பதாகத்தான் திட்டம். அந்தளவுக்கே அந்த நாவலை படமாக்க முடியும்.
ஒருமணி நேரப் படத்தை விற்க முடியாது என்ற நிலையில், அந்தக் கதையின் தொடர்ச்சியாக சில சம்பவங்களை எழுதுகிறார் வெற்றிமாறன். படத்தின் முதல் பகுதியில் வரும் ஆந்திரா காட்சிகள் லாக்கப் நாவலில் உள்ளவை. தமிழகத்தில் நடப்பதாக வரும் காட்சிகள் வெற்றிமாறனால் கற்பனையில் எழுதப்பட்டவை.
இந்தப் படத்தை வெற்றிமாறனின் கிராஸ்ரூட் நிறுவனமே தயாரித்தது. இரண்டு இரண்டரை கோடியில் படத்தை முடித்து சின்ன லாபத்துக்கு விற்றுவிடலாம் என்ற எண்ணத்தில் தொடங்கப்பட்ட படம் நான்கரை கோடிகளை தாண்டிச் செல்ல, பொருளாதார நெருக்கடி காரணமாக தனுஷ் இன்னொரு தயாரிப்பாளராக சேர்த்துக் கொள்ளப்பட்டார். விசாரணை ஆரம்பிக்கும் போது அவர் அதன் தயாரிப்பாளர் கிடையாது என்பது முக்கியமானது.
விசாரணையை சர்வதேச திரைப்பட விழாக்களுக்கு அனுப்ப வேண்டும் என்ற முடிவுடனே வெற்றிமாறன் இயக்கினார். சர்வதேச அளவில் படத்துக்கு கவனம் கிடைத்தால் உள்ளூரிலும் படத்தின் சந்தை மதிப்பு அதிகரிக்கும். படம் முதலில் வெனிஸ் திரைப்பட விழாவில் திரையிடப்பட்டு, அங்கு மனித உரிமைப் பிரிவில் ஒரு விருதையும் வென்றது. உடனே லைக்கா படத்தின் உலகளாவிய வெளியீட்டு உரிமையை வாங்கியது.
இந்த வருடம் பிப்ரவரி 5 -ஆம் தேதி தமிழகத்தில் வெளியானது. படத்தைப் பார்த்த இயக்குனர்கள் ஏ.எல்.விஜய், மிஷ்கின், சீனு ராமசாமி, ராம் போன்றவர்கள் படத்தை கொண்டாடினர். மிஷ்கின் வெற்றிமாறனுக்கு ஒரு பாராட்டுவிழாவை ஏற்பாடு செய்தார். மணிரத்னம், ஷங்கர் உள்ளிட்டவர்கள் அதில் கலந்து கொண்டனர். பிரபல இயக்குனர் அனுராக் காஷ்யப் இந்த வருடத்தின் டாப் 10 படங்களில் விசாரணைக்கு முதலிடம் தந்தார்.
அனைத்துத் தரப்பினரின் பாராட்டையும் பெற்ற விசாரணை 3 தேசிய விருதுகளையும் கைப்பற்றியது. சிறந்த தமிழ்ப் படம், சிறந்த எடிட்டிங், மற்றும் சிறந்த உறுதுணை நடிகர் ஆகிய பிரிவுகளில் இப்படம் தேசிய விருது வென்றது. தற்போது போட்டிக்கு வந்த 28 திரைப்படங்களை பின்னுக்கு தள்ளி இந்தியா சார்பில் ஆஸ்கர் போட்டிக்கு தேர்வாகியுள்ளது.
விசாரணை ஆஸ்கர் வெல்ல நம்முடைய வாழ்த்துகள்.
ஜெ.பி.ஆர்.
Publish Date: Fri, 23 Sep 2016 (10:58 IST)
Updated Date: Fri, 23 Sep 2016 (11:06 IST)