மிருதன், சேதுபதி இரண்டும் ஏன் முக்கியமான படங்கள்?
மிருதன், சேதுபதி இரண்டும் ஏன் முக்கியமான படங்கள்?
Publish Date: Fri, 19 Feb 2016 (12:16 IST)
Updated Date: Sat, 20 Feb 2016 (12:09 IST)
மிருதன், சேதுபதி இரண்டும் இன்று வெளியாகியுள்ளன. இரண்டு படங்களும் பலவிதங்களில் முக்கியமானவை.
முதலில் மிருதன். ஜெயம் ரவி, லட்சுமி மேனன் நடித்துள்ள இந்தப் படத்தை சக்தி சௌந்தர்ராஜன் இயக்கியுள்ளார். இந்தப் படத்தை தயாரிக்க ஒருவர் முன்வருவதும், முன்னணி நடிகர் ஒருவர் நடித்திருப்பதும் அபூர்வமான நிகழ்வு.
மிருதன் தமிழ் சினிமா இதுவரை அறிந்திராத சோம்பிகளை மையமாக வைத்து தயாராகியுள்ளது. ஹாலிவுட்டில் எக்கச்சக்கமாக சோம்பி திரைப்படங்கள் வந்துள்ளன. பிராட் பிட் நடிப்பில் வெளிவந்த வேர்ல்ட் வார் ஸீ என்ற சோம்பி திரைப்படம் மிகப்பெரிய வெற்றியை பெற்றது.
சோம்பிகள் என்பவர்கள் வைரஸால் பாதிக்கப்பட்டவர்கள். கிட்டத்தட்ட பிணங்களைப் போல. வலியை அவர்களால் உணர முடியாது. அவர்கள் வைரஸ் பாதிக்காதவர்களைக் கடித்தால் காயம்பட்டவர்களும் சோம்பிக்களாகிவிடுவார்கள்.
இதனை மையமாக வைத்து ஹாலிவுட் விளையாடியிருக்கிறது. இந்தியாவில் தயாரான ஒரேயொரு சோம்பி திரைப்படம், சைப் அலிகான் நடித்த கோ கோவா கான். இந்தப் படம் தோல்வியடைந்தது. இந்தியாவின் இரண்டாவது சோம்பித் திரைப்படம் என்றால், அது மிருதன். இப்போது மிருதனின் முக்கியத்துவம் புரிந்திருக்கும்.
மிருதன் வெற்றி பெற்றால் தமிழில் புதியதொரு வகைமையை இப்படம் அறிமுகப்படுத்தியதாக அமையும். இந்தத் தடத்தில் மேலும் பல படங்கள் எடுக்க அது உறுதுணையாக அமையும். சோம்பி திரைப்படங்கள் மொழியை கடந்தவை என்பதால் படத்தின் தரத்தைப் பொறுத்து எத்தனை மொழிகளில் வேண்டுமென்றாலும் படத்தை வெளியிட முடியும். எல்லாமே மிருதனின் வெற்றியில் இருக்கிறது.
அடுத்தது சேதுபதி. தமிழில் அறிமுகமாகும் எந்த நடிகரும் ஆக்ஷன் ஹீரோவாகவே விரும்புகிறார்கள். அவர்களுக்கே பணம், புகழ், ரசிகர்கள் என அனைத்தும் அதிகம். இரண்டாவது படத்திலேயே இரண்டு லாரி ஆள்களை அடிப்பவர்களுக்கு மத்தியில் கடந்த படத்தில்கூட வில்லனிடம் அடிவாங்கிக் கொண்டிருந்தவர் விஜய் சேதுபதி. கதை, கதாபாத்திரம் இரண்டும்தான் முக்கியம் என்று அவர் நடக்கும் வித்தியாசமான பாதை, தமிழ் சினிமாவை ஆரோக்கியப்படுத்தும் முயற்சிகளில் ஒன்று. அப்படிப்பட்டவர் நடித்திருக்கும் முதல் ஆக்ஷன் படம் இது.
விஜய் சேதுபதி நடித்திருப்பதாலும், பண்ணையாரும் பத்மினியும் படத்தை இயக்கிய அருண் குமார் இயக்கியிருப்பதாலும் வழக்கமான ஆக்ஷன் படமாக இது இருக்காது என்ற நம்பிக்கை உள்ளது. இந்தப் படம் வெற்றி பெற்றால் விஜய் சேதுபதி தனது வழக்கமான படங்களுடன் இதுபோன்ற ஆக்ஷன் களத்திலும் அடிக்கடி படங்கள் செய்ய வாய்ப்புள்ளது. விஜய் சேதுபதியைப் போல் கதைக்கும், கதாபாத்திரங்களுக்கும் மட்டுமே முக்கியத்துவம்
தரவேண்டும் என்ற நினைப்பில் இருப்பவர்களை இப்படம் ஆக்ஷனில் திசையில் செலுத்தவும் வாய்ப்பு உள்ளது.
எல்லா மாற்றங்களுமே இவ்விரு படங்களின் வெற்றியில்தான் அடங்கியுள்ளன.