இறுதிச்சுற்று - வெளிவராத தகவல்கள்
இறுதிச்சுற்று - வெளிவராத தகவல்கள்
Publish Date: Fri, 29 Jan 2016 (12:12 IST)
Updated Date: Fri, 29 Jan 2016 (12:23 IST)
மாதவன் நடித்துள்ள இறுதிச்சுற்று இன்று வெளியாகியுள்ளது. மாதவன் அலைபாயுதே படத்தில் அறிமுகமானதிலிருந்து இன்றுவரை நடித்தப் படங்களில், இறுதிச்சுற்று படத்துக்கே அதிகம் மெனக்கெட்டிருக்கிறார்.
படம் எப்படி? வெற்றி பெறுமா? என்பதையெல்லாம் தாண்டி, இறுதிச்சுற்று படத்திலிருந்து நாம் கற்றுக் கொள்ள வேண்டியது நிறைய இருக்கிறது.
மாதவன் இறுதிச்சுற்று நடிக்கையில் வெளியான இந்திப் படம், தனு வெட்ஸ் மனு ரிட்டர்ன். தனு வெட்ஸ் மனு படத்தின் இரண்டாம் பாகமான இப்படம் 150 கோடிகளை தாண்டி வசூலித்தது. இதுபோன்ற படங்களில் மாதவன் நோகாமல் கோடிகள் சம்பாதித்திருக்கலாம். ஆனால், சாக்லெட் பாய் இமேஜ் உள்ள நடிகரின் சினிமா ஆயுட்காலம் குறைவு என்ற சிந்தனை காரணமாக தனது சாக்லெட் பாய் இமேஜை மாற்ற அவர் மேற்கொண்ட பெரும் போராட்டம்தான் இறுதிச்சுற்று.
இந்தப் படம் இந்தியிலும் வெளியாகியுள்ளது. இந்தி தயாரிப்பில் பிரபல இயக்குனர் ராஜ்குமார் ஹிரானியும் பங்கெடுத்துள்ளார். இந்தப் படம் முடிந்த பிறகு படத்தைப் பார்த்த ராஜ்குமார் ஹிரானியின் ஆலோசனைப்படி, பல காட்சிகள் மீண்டும் எடுக்கப்பட்டன. போஸ்ட் புரொடக்ஷன் வேலைகள் மட்டும் எட்டு மாதங்கள் நடந்தன.
ஏன் இந்த ரீ ஷுட்...?
படத்தின் ரன்னிங் டைம் அதிகமாக இருந்ததால், அதனை 20 நிமிடங்கள் குறைப்பதற்காகவே இந்த ரீ ஷுட் மேற்கொள்ளப்பட்டது. வெறுமனே காட்சிகளை எடிட் செய்தால், காட்சிகள் ஜம்ப் ஆனது போல் பார்வையாளர்களுக்கு அதிருப்தியை தரும். அது ஏற்படாமல் இருப்பதற்காக, காட்சிகளை எடிட்டிங்குக்கு ஏற்ப மாற்றி எடுத்திருக்கிறார்கள்.
ரீ ஷுட் என்பது, காட்சிகளை சேர்ப்பதற்காக மட்டுமில்லை, குறைப்பதற்காகவும்தான்.
தமிழில் படத்தின் நீளத்தை குறைக்க ரீ ஷுட் செய்யப்பட்டது இறுதிச்சுற்றாகத்தான் இருக்கும்.
படத்தை 20 நிமிடங்கள் எடிட் செய்த பின் எப்படி உள்ளது?
படம் இன்னும் வேகமாகவும், விறுவிறுப்பாகவும் இருப்பதாக தயாரிப்பாளர் தனஞ்செயன் கூறியுள்ளார். முக்கியமாக கடைசி 20 நிமிடங்கள் அடுத்து என்ன நடக்கும் என்று பார்வையாளர்களை ஆவல் கொள்ள வைக்கும் என கூறியுள்ளார்.
இறுதிச்சுற்று படத்தில் நிஜ பாக்சரான ரித்திகா சிங் நடித்துள்ளார்.
ஆனால், இது விளையாட்டைப் பற்றிய படம் கிடையாது. விளையாட்டு வீரர்களைப் பற்றியும் கிடையாது. அனைத்தையும் உள்ளடக்கிய புதுமாதிரியான படம் என்கிறார் தனஞ்செயன்.
பார்ப்போம்... இந்த புதுமாதிரி படம் ரசிகர்களை எவ்வளவு தூரம் ஈர்க்கிறது என்று.