சினி பாப்கார்ன் - ரஜினியால் கெட்டோம்
சினி பாப்கார்ன் - ரஜினியால் கெட்டோம்
Publish Date: Tue, 22 Mar 2016 (16:18 IST)
Updated Date: Tue, 22 Mar 2016 (16:25 IST)
இது பாண்டிராஜ் குசும்பு
கடந்தவாரம் சிம்பு நடிப்பில் விஜய் சந்தர் இயக்கும் படத்தின் பூஜை நடந்தது. மைக்கேல் ராயப்பன் தயாரிப்பு. இது தெலுங்கு டெம்பர் படத்தின் ரீமேக் என்றனர். படத்துக்கு வாழ்த்து தெரிவித்த பாண்டிராஜ், வாழ்த்துகள். மிக விரைவான படமாகவும், மிகப் பெரிய வெற்றிப் படமாகவும் அமையட்டும் என்று ட்விட்டரில் கூறியிருந்தார். சிம்பு, விஜய் சந்தர் கூட்டணியின் வாலு 3 வருடங்கள் கழித்து வெளியானது. பாண்டிராஜ் சிம்புவை வைத்து இயக்கிய இது நம்ம ஆளு இன்னும் வெளியாகவில்லை. அதன் பிறகு பாண்டிராஜ் இயக்கிய பசங்க 2, கதகளி இரண்டும் வெளியாகிவிட்டன.
இதையெல்லாம் மனதில் வைத்தே, விரைவான படமாகவும் என்ற வார்த்தையை தனது வாழ்த்து செய்தியில் சேர்த்திருந்தார். அவர் வாழ்த்து சொன்ன நேரம், சிம்பு நடிப்பதாக சொல்லப்பட்ட டெம்பரை நாங்கதான் தமிழில் ரீமேக் செய்கிறோம், அதுவும் விஷாலை வைத்து என்று பூஜை போட்ட அன்றே கட்டையை போட்டார்கள் டெம்பர் படத்தின் தயாரிப்பாளர்கள்.
சிம்புன்னாலே சோதனைதானோ?
அவரா... இவரா... தொரியாது...
அஜித்தின் அடுத்தப் படத்தை இயக்குவது சிவா என்பது உறுதியாகிவிட்டது. தயாரிப்பு சத்யஜோதி ஃபிலிம்ஸ். முடிவாகாதது, யார் ஹீரோயின்?
சந்தை மதிப்பு மிக்க அனுஷ்காவை ஜோடியாக்கலாம் என்பது தயாரிப்பு தரப்பின் விருப்பம். வீரம் படத்தில் நடித்த தமன்னாவுக்கு பாகுபலிக்குப் பிறகு நட்சத்திர அந்தஸ்து கூடியுள்ளது. அவரையே நாயகியாக்கலாம் என்பது சிவாவின் விருப்பம்.
இதனிடையில், தயாரிப்பு தரப்பின் விருப்பமே இல்லாமல் சசிகலா, இளவரசியை பங்குதாரர்களாகக் கொண்ட ஜாஸ் சினிமாஸ் படத்தயாரிப்பில் இணைய விருப்பம் தெரிவித்திருப்பதாகவும் ஒரு வதந்தி ஊடுருவியிருக்கிறது.
ஊசி நுழைய இடம் கொடுத்தா உலக்கையை நுழைக்கிறவர்கள்... கலக்கத்தில் இருக்கிறாராம் தயாரிப்பாளர்.
படப்பிடிப்பில் இருந்தாலும் பனிமலையில் இருந்தாலும் ரஜினியை வைத்து அவருக்கே தெரியாமல் ஒரு அரசியல் அவரைச் சுற்றி ஓடிக் கொண்டிருக்கும். எந்த செய்தியிலும் ரஜினி என்ற பெயரை தூக்கிப் போட்டால் சென்சேஷனாகும் என்பது தெரியாதவர்களா பத்திரிகையாளர்கள்.
ரஜினியால் கெட்டோம் என்று ரஜினி ரசிகர்கள் சொல்வது போன்று கவர் ஸ்டோரி வெளியிட்டுள்ளது ஒரு வாரப் பத்திரிகை. அந்த பத்திரிகையின் போஸ்டரை ஒட்டச் சென்றவர்களை வாணியம்பாடி ரஜினி ரசிகர்கள் சிலர் தாக்கியிருக்கிறார்கள். உணர்ச்சிவேகம்... தாக்கிவிட்டார்கள் என்று எடுத்துக் கொள்ள முடியாதபடி, தாக்கியதுடன் அவர்களை கடத்திப் போய் பணமும் கேட்டிருக்கிறார்கள்.
இப்போது போலீஸ்வரை விஷயம் சென்றுள்ள நிலையில், வாரப் பத்திரிகையின் டைட்டிலுக்கு உதாரணமாக ஆகிவிட்டார்கள் சம்பந்தப்பட்ட ரசிகர்கள் என்பதுதான் ஐரணி.