சினி பாப்கார்ன் - பாலாபிஷேகமும், வெறுப்பாபிஷேகமும்
சினி பாப்கார்ன் - பாலாபிஷேகமும், வெறுப்பாபிஷேகமும்
Publish Date: Thu, 31 Mar 2016 (13:17 IST)
Updated Date: Thu, 31 Mar 2016 (13:32 IST)
ரஜினிகாந்தின் படங்கள் வெளியாகும் போது அவரது கட்அவுட்களுக்கும், பேனர்களுக்கும் பாலாபிஷேகம் செய்கிறார்கள்.
அதனால், பால் வீணாக்கப்படுகிறது. அதனை தடுக்க வேண்டும் என்று பெங்களூரு நீதிமன்றத்தில் தாக்கல் செய்த பொதுநல மனுவை விசாரித்த நீதிபதி, ரஜினிகாந்துக்கு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டுள்ளார்.
பாலாபிஷேகம் என்பது தனிமனித துதியை வெளிக்காட்டும் ஒரு நடவடிக்கை. இதில் முதலில் கண்டிக்கப்பட வேண்டியது ரசிகர்கள் காட்டும் தனிமனித துதி. அதற்கு அடுத்துதான் பால் வீணாகும் சமாச்சாரம்.
ரஜினியின் கட்அவுட்டுக்கு பாலாபிஷேகம் செய்வதால் எப்படி பால் வீணாகிறதோ அதேபோல் விக்கிரகங்களுக்கு பால், தேன், பழ அபிஷேகங்கள் செய்வதாலும் உணவுப் பொருள்கள் வீணாகின்றன. ரஜினியின் கட்அவுட் பாலாபிஷேகத்தைவிட இது பல்லாயிரம் மடங்கு அதிகம்.
விக்கிரகங்களுக்கு பாலாபிஷேகம் செய்வது, பாலை வீணாக்குதல் என்று பொதுநல மனு தாக்கல் செய்ய இந்தியாவில் முடியுமா? முடிந்தால் நீதிபதி யாருக்கு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிடுவார்?
விக்கரகங்களுக்கு பாலாபிஷேகம் செய்வது பக்தர்களின் நம்பிக்கை என்றால், அதேபோன்ற ஒருவகை பக்தியினால்தான் ரசிகர்களும் கட்அவுட்களுக்கு பாலாபிஷேகம் செய்கிறார்கள்.
பாலாபிஷேகம் என்பதே தவறு. அதில், ரஜினி கட்அவுட்டுக்கு செய்தால் தவறு, விக்கிரகங்களுக்கு செய்தால் சரி என்பது அதைவிட மாபெரும் தவறு.
மேலும் அடுத்த பக்கம் பார்க்க...........
சமீபத்தில் நடந்த சினிமா விழா ஒன்றில், முன்னாள் இயக்குனர் ஆர்.கே.செல்வமணி, "யாரோ நடிகர்கள் செலிபிரிட்டி கிரிக்கெட் ஆடுகிறார்கள். ஆனால் வெளியில் இருப்பவர்கள் தமிழ்நாடே ஆடுவதாக நினைக்கிறார்கள், தமிழர்களே ஆடுவதாக நினைக்கிறார்கள். நம் மானம் போகிறது. நடிகர் சங்கத்துக்கு நான் வேண்டுகோள் வைக்கிறேன். இதுமாதிரி செலிபிரிட்டி கிரிக்கெட்டுக்கு ஆடத்தெரிந்த நடிகர்களை அனுப்புங்கள். ஆடத்தெரியவில்லை என்றால் சில மாதம் பயிற்சி கொடுத்து அனுப்புங்கள். இப்படி மானத்தை வாங்காதீர்கள்" என்று பேசினார்.
ஆர்.கே.செல்வமணி முன்னாள் நடிகர் சங்க நிர்வாகிகள் சரத்குமாரையும், ராதாரவியையும் வெளிப்படையாக ஆதரித்தவர்.
இப்போதைய நிர்வாகிகள் பதவிக்கு வந்துவிடக் கூடாது என்பதற்காக அத்தனை அழிச்சாட்டிய வழிகளிலும் முயற்சி செய்தவர்.
புதிய நிர்வாகிகள் மீதான அவரது வெறுப்புதான் இப்படி கிரிக்கெட் வாந்தியாக வெளிப்பட்டிருக்கிறது.
செலிபிரிட்டி கிரிக்கெட் போட்டியில் தமிழக நடிகர்கள் தோற்றதால் இவரது மானம் எப்படி போனதாம்?
செல்வமணியின் மனைவி ரோஜாவின் அண்ணன் மகள் இவரிடம் வந்து, "என்ன மாமா உங்க ஆளுங்க. ஊத்திக்கிட்டு வந்துட்டாங்க போல.." என்று சொன்னாராம். அதைகேட்டுதான் செல்வமணியின் மானம் போயிருக்கிறது.
புதிய நிர்வாகிகள் பதவியேற்று இவ்வளவு நாளான பிறகும் இவர் ஆதரித்த பழைய நிர்வாகிகள் ஒழுங்காக கணக்கை ஒப்படைக்கவில்லை. பல கோடி ஊழல் நடந்திருக்கிறது என அவர்கள் மீது புகார் தரப்பட்டுள்ளது. அதற்காக இவரது மானம் போகவில்லை....
திமுக, அதிமுக யார் வந்தாலும் அவர்களுக்கு முதுகை வளைத்துக் கொடுக்கிறதே தயாரிப்பாளர்கள் சங்கம்... அதற்கெல்லாம் இவரது மானம் போகவில்லை....
ஊழல் செய்து வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்த ஜெயலலிதா சிறைக்கு போனதும், அவரை ஆதரித்து திரையுலகம் உண்ணாவிரதம் இருந்த போது இவரது மானம் போகவில்லை...
இதேபோல் பல்வேறு அசிங்கங்களுக்காக போகாத செல்வமணியின் மானம் கிரிக்கெட் விளையாட்டில் நடிகர்கள் தோற்றதற்காக போகிறது. ஏன் அப்படி...?
செல்வமணியின் நண்பர் நடிகர் பாபு கணேஷின் மகன் ரிஷிகாந்தை செலிபிரிட்டி கிரிக்கெட்டில் சேர்த்துக் கொள்ளவில்லையாம். அதற்காகத்தான் இந்த புளித்த ஏப்பம்.
ரிஷிகாந்த் செலிபிரிட்டி கிரிக்கெட்டில் ஆட கேட்டபோது அவர் ஒரு படத்தில்கூட நடித்திருக்கவில்லை. அப்படிப்பட்டவரை எப்படி சேர்த்துக் கொள்வார்கள்? யாரோ நடிகர்கள் கிரிக்கெட் விளையாடுகிறார்களாம். விக்ராந்த், ரமணா, பாண்டிராஜின் மகன் பிருத்வி, பாக்யராஜின் மகன் சாந்தனு, விஷால், ஜீவா, இவர்கள்தான் ஆடுகிறார்கள். இவர்கள் எல்லாம் யாரோவா? ஒரு படத்தில் கூட நடிக்காத பாபு கணேஷின் மகன் ரிஷிகாந்த் மட்டும் தமிழ் நடிகரா?
ஆர்.கே.செல்வமணி சார்... விட்டுப்போன இயக்கத்தை தொடர முயற்சி செய்யுங்கள். அதைவிட்டு இப்படி மேடைக்கு மேடை வெறுப்பாபிஷேகம் செய்து கொண்டிருக்காதீர்கள். கேட்பவர்கள் உங்கள் அளவுக்கு புத்திசாலிகள் இல்லையென்றாலும் கேனையர்கள் அல்ல.