Publish Date: Thu, 29 Oct 2015 (09:38 IST)
Updated Date: Thu, 29 Oct 2015 (13:11 IST)
நடிகர் சங்கத் தேர்தலின் போது, சரத்குமார் அணியை ஆதரித்துப் பேசிய இயக்குனர் சேரன், நடிகர்கள் ஜே.கே.ரித்திஷ், விஷால், கார்த்தி ஆகியோரை கடுமையாக தாக்கிப் பேசினார்.
ராதாரவியை ஜே.கே.ரித்திஷ் தரக்குறைவாக பேசினார் என்பதற்காக அவரை கடுமையாக சாடினார். அதில் நியாயம் இருக்கிறது. விஷால், கார்த்தியை சேரன் ஏன் தாக்கிப் பேச வேண்டும்? முதல்ல ஒழுங்கா நடிக்க கத்துக்குங்க என்று அவர்களின் தொழிலை குறி வைத்து சேரன் தாக்கினார்.
அந்த சம்பவத்துக்கு வருத்தம் தெரிவித்து சேரன் ஒரு கடிதத்தை எழுதியுள்ளார். அது நமது தளத்தில் உள்ளது. விஷால், கார்த்தி இருவரும் சேரனுக்கு கால்ஷீட் தராத கோபத்தை அவர் தனது பேச்சில் வெளிப்படுத்தியதை சேரனே கடிதத்தில் உட்படுத்தி இருக்கிறார்.
நல்ல படங்களில் நடிக்காமல், கமர்ஷியல் படங்களில் திறமையை வீணடிக்கிறார்களே என்று அவர்களுக்காக வருத்தப்படுவதாக சேரன் தனது பேச்சுக்கு முட்டு கொடுக்கப் பார்க்கிறார். அது அப்பட்டமாக தெரிகிறது.
நடந்து முடிந்த நடிகர் சங்கத் தேர்தலில் சீனியர் இயக்குனர்கள் விஷால் அணியை பகிரங்கமாக எதிர்த்ததற்கு பின்னணி ஒன்றே ஒன்றுதான். விஷால் அணியில் இருக்கும் இளம் நடிகர்கள் யாரும் இவர்களை மதிப்பதில்லை.
மதிப்பது என்றால், அவர்களின் படத்தில் நடிக்க கால்ஷீட் தருவதில்லை. இந்த ஒரு விஷயம்தான் சீனியர் இயக்குனர்களை விஷால் அணிக்கு எதிராக பேச வைத்தது. அதனை சேரனே ஒப்புதல் வாக்குமூலமாக தந்திருக்கிறார்.
விக்ரமன், ஆர்.கே.செல்வமணி, சீமான் என பலரும் இளம் நடிகர்களிடம் கால்ஷீட் கேட்டு, ஏமாற்றத்தை சந்தித்தவர்கள். விஷால் மற்றும் கார்த்தியிடம் கதை சொல்லி கால்ஷீட் கிடைக்காமல் போனதை சேரனே தனது கடிதத்தில் விரிவாக குறிப்பிட்டுள்ளார்.
சேரனின் படத்தில் நடிக்காமல் பாலா படத்தில் நடிக்க விஷால் சென்றதில் சேரனுக்கு வருத்தம். சேரனின் படத்தில் நடித்தவர்களைவிட, பாலாவின் படத்தில் நடிப்பவர்களுக்கே அதிக பேரும் புகழும் கிடைத்திருக்கிறது.
ஒரு நடிகனின் கடைசிச்சொட்டு திறமைவரை வெளிக்கொணர்கிறவர் பாலா. விஷால் சேரனை தவிர்த்து பாலாவை தேர்வு செய்தது சரியான முடிவு. அதில் சேரன் வருத்தப்பட எதுவுமில்லை.
அதேபோல் ஒரு நடிகர் யாருடைய இயக்கத்தில் நடிப்பது என்பது...
மேலும் அடுத்தப் பக்கம் பார்க்க..
அவரது தனிப்பட்ட தேர்வு. அமுதமே என்றாலும் வலுக்கட்டாயமாக ஒருவருக்கு புகட்ட முயல்வது வன்முறை. சேரனின் படங்கள் தேசிய விருதுகளை குவித்தவையாக இருக்கலாம். அதற்காக ஒரு நடிகர் அவர் கேட்டால் உடனே கால்ஷீட் தர வேண்டும் என்பதில்லையே.
தவமாய் தவமிருந்து படத்தில் ராஜ்கிரண் வேடத்தில் நடிக்க அவரைத் தவிர வேறு யாரேனும் நடிக்க முன்வந்திருந்தால் சேரன் அதனை ஏற்றுக் கொண்டிருப்பாரா? தனது படத்தில் யாரை எந்த வேடத்தில் நடிக்க வைக்க வேண்டும் என்பது எப்படி சேரனின் முடிவோ, அதேபோல் யாருடைய படத்தில் நடிக்க வேண்டும் என்பதும் தனிப்பட்ட நடிகர்களின் முடிவு.
எதை முன்னிட்டும் அதனை கேள்வி கேட்க யாருக்கும் விருப்பமில்லை. அவர்கள் எவ்வளவு மோசமான படங்களில் நடித்தாலும், அதை புறந்தள்ள நமக்கு உரிமை உள்ளதே தவிர, கேள்வி கேட்க உரிமையில்லை.
சீமானும் சரத்குமாருக்கு மறைமுகமாக ஆதரவு தெரிவித்தே அறிக்கை வெளியிட்டார். சீமான் தனது பகலவன் படத்தில் விஷாலை நடிக்க வைக்க முயற்சி செய்தார். விஷால் அவரிடம் கதைகேட்கக்கூட தயாராக இல்லை. காரணம் அனைவரும் அறிந்ததுதான்.
அரசியல்சார்பான முத்திரை விழும் என்ற எண்ணம். சீமான் கடைசியில் சக்சேனா - பழைய சன் பிக்சர்ஸ் நிர்வாகி - வழியாக முயற்சி மேற்கொண்டார். ஆனால், கடைசிவரை விஷாலிடம் கதை சொல்ல முடியவில்லை.
பிறகு நடிகர் ஜீவாவிடம் கதை சொன்னார். அவரும் நடிக்கவில்லை. ஜெயம் ரவி கதையை கேட்டுவிட்டு, அற்புதம் நடிச்சிடுவோம் என்று சொல்லிவிட்டு, இந்தப் படம் முடியட்டும் அந்தப் படம் முடியட்டும் என்று இன்றுவரை தட்டிக்கழித்துக் கொண்டேயிருக்கிறார்.
சீமான் நாயகனாக நடித்த, கண்டுபிடி கண்டுபிடி படம் தயாராகி இரண்டு வருடங்கள் ஆகப்போகிறது. இரண்டு கோடி கொடுத்து அந்தப் படத்தை வாங்க இன்னும் ஒருவரும் தயாரில்லை. இதுதான் சீமானின் மார்க்கெட். அவரது இயக்கத்தில் நடித்து, அரசியல் முத்திரை குத்திக்கொள்ள யார்தான் ஆசைப்படுவார்கள்?
விஷால் அணியை எதிர்த்த இயக்குனர்களுக்கு சேரனைப் போல, சீமானைப் போல பல அனுபவங்கள் நேர்ந்திருக்கிறது. அதனை அவர்கள் நடிகர் சங்கத் தேர்தலில் அவதூறாக வெளிப்படுத்தினர்.
சேரனின் மனசாட்சி உறுத்தியதால் அவர் பகிரங்கமாக மன்னிப்பு கேட்டிருக்கிறார். விருமாண்டி சொன்ன மாதிரி, மன்னிக்கிறவன் வீரன், மன்னிப்பு கேட்கிறவன் மாவீரன். சேரன் மாவீரன்.
சேரனின் திறந்த மடலை மனதார வரவேற்கிறோம்.