இன்னொரு லிங்காவாகும் சூர்யாவின் 24...?
இன்னொரு லிங்காவாகும் சூர்யாவின் 24...?
Publish Date: Thu, 28 Jan 2016 (14:53 IST)
Updated Date: Thu, 28 Jan 2016 (15:34 IST)
விக்ரம் கே.குமார் இயக்கத்தில் சூர்யா நடித்துள்ள 24 படம், ஏப்ரல் 14 வெளியாகும் என்று ஈராஸ் அறிவித்துள்ளது. அந்தப் படத்தை ஈராஸ்தான் வெளியிடுகிறது.
இன்று நேற்று நாளை படத்தைப் போன்று, 24 படமும் டைம் ட்ராவலை மையப்படுத்தியது என்றும், இன்று நேற்று நாளை வெளியான காரணத்தால் 24 படத்தின் கதை, திரைக்கதையில் மாற்றம் செய்தனர் எனவும் தகவல் உள்ளது.
படம் சம்பந்தப்பட்டவர்கள் இதனை உறுதி செய்யவில்லை என்றபோதும் மறுக்கவும் இல்லை.
சூர்யா 3 கெட்டப்புகளில் தோன்றும் இந்தப் படத்தின் வியாபாரம், லிங்காவுக்கு ஏற்பட்ட நெருக்கடியை இந்தப் படமும் எதிர்கொள்ளுமோ என்ற ஐயத்தை ஏற்படுத்தியுள்ளது.
லிங்காவை ராக்லைன் வெங்கடேஷ் தயாரித்தார். அவர் கணிசமான லாபம் வைத்து ஈராஸுக்கு அப்படத்தை விற்றார். ஈராஸ் நிறுவனம் கணிசமான லாபம் வைத்து படத்தின் தமிழக உரிமையை - கோவை நீங்கலாக - வேந்தர் மூவிஸுக்கு விற்றது. வேந்தர் மூவிஸ் ஏரியாவாரியாக விநியோகஸ்தர்களுக்கு படத்தை தந்தது. விநியோகஸ்தர்கள் லாபம் வைத்து திரையரங்குகளுக்கு தந்தனர்.
ராக்லைன் வெங்கடேஷ் படத்தை நேரடியாக விநியோகஸ்தர்களுக்கு தந்திருந்தால், படம் அனைத்துத் தரப்பினருக்கும் லாபம் பெற்றுத் தந்திருக்கும். ஈராஸ், வேந்தர் மூவிஸ் என்று கைமாறி, அவர்கள் கணிசமான லாபம் வைத்ததால் பட்ஜெட்டைவிட அதிகம் வசூலித்தும் லிங்கா பலருக்கு கடும் நஷ்டத்தை ஏற்படுத்தியது.
24 படமும் லிங்கா வழியில் வியாபாரமாகியிருக்கிறது. 24 படத்தை சூர்யாவின் 2டி என்டர்டெய்ன்மெண்ட் தயாரித்தது. அவர் படத்தை ஞானவேல்ராஜாவின் ஸ்டுடியோ கிரீனுக்கு லம்பாக ஒரு லாபம் வைத்து விற்றுள்ளார். ஞானவேல்ராஜா படத்தை ஈராஸுக்கு கணிசமான லாபம் வைத்து தள்ளிவிட்டுள்ளார். ஈராஸ் நேரடியாக படத்தை விநியோகஸ்தர்களுக்கு தரப்போவதில்லை. வேந்தர் மூவிஸ் போன்ற இடைத்தரகர்கள் யாரேனும் வருவார்கள். அவர்கள் லாபம் வைத்து விநியோகஸ்தர்களுக்கு தரும்போது, 24 படம் பட்ஜெட்டைவிட அதிகம் வசூலித்தாலும் கண்டிப்பாக பலருக்கு நஷ்டத்தை ஏற்படுத்தும்.
சூர்யாவின் கடைசி இரு படங்களான அஞ்சான், மாசு என்கிற மாசிலாமணி இரண்டும் தோல்விப் படங்கள். ஒரு வெற்றி கண்டிப்பாக தேவை என்றநிலையில், 24
படத்தின் தோளில் இப்படியொரு பெரும் சுமையை ஏற்றுவது சரியா...?