Publish Date: Thu, 07 Apr 2022 (10:50 IST)
Updated Date: Thu, 07 Apr 2022 (10:55 IST)
முருகன் அருள் வேண்டி பக்தர்கள் இருக்கும் விரதங்களுள் மிகச்சிறப்புடையது சஷ்டி விரதம். இந்த விரதத்தை மனதில் கொண்டே சஷ்டியிலிருந்தால் அகப்பையில் வரும் என்ற பழமொழி எழுந்தது.
திருமணம் இல்லாமல் ஒருவருக்கு வாழ்க்கை முழுமையடையாது என்பது போல, குழந்தை இல்லாமல் திருமண வாழ்க்கை நிறைவு பெறாது. சஷ்டி விரதம் இருந்தால் நல்ல குழந்தைப்பேறு கிடைக்கும் என்பது பொருள்.
சஷ்டி விரதம் இருந்தால் நம் உள்ளத்தில் இறைவன் குடிகொள்வான் என்ற பொருளும் உண்டு. சஷ்டி விரதத்திற்கு அத்தகைய வலிமை உண்டு. சஷ்டி விரதம் என்பது மிகப்பெரிய விரதம்.
திதிகளின் வரிசையில் சஷ்டி ஆறாவதாக வருவதால் அதற்கு மிகப்பெரிய வலிமை உண்டு. ஐஸ்வரியத்தை தரக்கூடியது 6 என்ற வழக்கு ஜோதிடத்தில் உள்ளது. ஜோதிடத்தில் 6-ம் எண்ணுக்கு உரிய கிரகம் சுக்கிரன். இவர் லட்சுமியின் அம்சமாக கருதப்படுகிறார்.
திருமணம், வாகனம், வீடு ஆகியவற்றை தரக்கூடியவரும் சுக்கிரன்தான். எனவே சஷ்டி திதியில் விரதம் இருந்தால் வேண்டிய அனைத்தையும் பெறலாம். 16 பேறுகளில் ஒன்றாகவே குழந்தைப்பேறு கருதப்படுகிறது. எனவே குழந்தைப்பேறுடன் மீதமுள்ள 15 பேறுகளையும் அளிக்கும் வல்லமை சஷ்டி விரதத்திற்கு உண்டு.
சஷ்டி திதியில் வேலைக்கு சேருதல், வீடு வாகனம் வாங்குதல், மருத்துவ தொழில் தொடங்குதல் போன்றவை செய்ய உகந்த நாளாகும். சஷ்டியில் விரதம் இருந்தால் முருகனின் அருளை பெற்று வாழ்வில் அனைத்து செல்வ வளமும் பெறலாம்.