Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

மேஷம் - சனிப் பெயர்ச்சி பலன்கள் (16.12.2014 முதல் 17.12.2017)

மேஷம் - சனிப் பெயர்ச்சி பலன்கள் (16.12.2014 முதல் 17.12.2017)
, வெள்ளி, 14 நவம்பர் 2014 (13:29 IST)
தன் பலம் பலவீனம் அறிந்து, தன்னை தயார்படுத்திக் கொள்பவர்களே! இதுவரை உங்கள் ராசிக்கு 7-ம் வீட்டில் அமர்ந்து அடுக்கடுக்காக பல கஷ்டங்களையும், நஷ்டங்களை தந்தாலும் ஓரளவு நிம்மதியையும் தந்த சனிபகவான் இப்போது 16.12.2014 முதல் 17.12.2017 வரை உள்ள காலக்கட்டங்களில் 8-ம் வீட்டில் அட்டமத்துச் சனியாக இருந்து செயல்படப் போகிறார். எனவே நீங்கள் எதிலும் கொஞ்சம் நிதானித்து செயல்படுவது நல்லது. எல்லோரும் நல்லவர்கள் என வாரி இரைத்ததையெல்லாம் விட்டு விட்டு சுற்றியிருப்பவர்களின் சுயரூபம் புரிந்து செயல்படப்பாருங்கள்.

உங்கள் குடும்ப விஷயங்களில் மற்றவர்களை அனுமதிக்காதீர்கள். எடுத்தோம், கவிழ்தோம் என்று பேசுவதெல்லாம் இனி சரி வராது. கணவன்-மனைவிக்குள் சிலர் குழப்பத்தை ஏற்படுத்த முயற்சி செய்வார்கள். அவர்களின் பேச்சை கேட்டு வீணாக சந்தேகப்பட்டுக் கொண்டிருக்காதீர்கள். உஷாராக இருங்கள். சில நேரங்களில் எங்கே நிம்மதி என்று தேட வேண்டி வரும். மற்றவர்கள் ஏதேனும் ஆலோசனைக் கூறினாலோ அல்லது உங்களது தவறுகளை சுட்டிக் காட்டினாலோ, அல்லது உங்களை விமர்சித்துப் பேசினாலோ அதை பொறுமையாக ஏற்றுக் கொள்வது நல்லது.

தோல்விமனப்பான்மை தலைத்தூக்கும். சொந்த வாகனத்தில் இரவு நேரப் பயணங்களை தவிர்க்கப்பாருங்கள். சிறுசிறு விபத்துகள் ஏற்படக்கூடும். யாருக்காகவும் ஜாமீன், கேரண்டர் கையப்பமிட வேண்டாம். பிள்ளைகள் இன்னும் கொஞ்சம் பொறுப்பாக நடந்துக் கொண்டால் நலமாக இருக்குமே என்றெல்லாம் ஆதங்கப்படுவீர்கள்.

நெருங்கிய உறவினர், நண்பர்களாக இருந்தாலும் இடைவெளி விட்டுப் பழகுவது நல்லது. சொத்து சம்பந்தப்பட்ட பிரச்னைக்காக கோர்டு, கேஸ் என்று நேரத்தை வீணடித்துக் கொண்டிருக்காதீர்கள். எவ்வளவு பணம் வந்தாலும் எடுத்து வைக்க முடியாதபடி செலவினங்கள் இருந்துக் கொண்டேயிருக்கும். மனைவிவழி உறவினர்களுடன் பிணக்குகள் வரும். இரத்த அழுத்தம் அதிகரிக்கும். சர்க்கரை நோய்க்கான அறிகுறிகள் தெரியும். மெடிக்ளைம் எடுத்துக் கொள்ளுங்கள். சட்டத்திற்கு புறம்பான வகையில் யாருக்கும் உதவ வேண்டாம்.  

சனிபகவான் நட்சத்திர சஞ்சாரப் பலன்கள்:
16.12.2014 முதல் 24.01.2015 வரை மற்றும் 30.04.2015 முதல் 13.6.2015 வரை மற்றும் 06.9.2015 முதல் 17.10.2015 வரை உங்கள் பாக்யாதிபதி குருவின் சாரத்தில் விசாகம் நட்சத்திரம் 4-ம் பாதத்தில் 8-ம் வீட்டில் சனி செல்வதால் கேட்ட இடத்தில் பணம் கிடைக்கும். மகளுக்கு நல்ல வரன் அமையும். மகனுக்கு எதிர்பார்த்த நிறுவனத்தில் வேலைக் கிடைக்கும். ஆனால் அஷ்டமத்துச் சனியாக இருப்பதால் வெளிவட்டாரத்தில் அலைச்சல் அதிகமாகும். முன்கோபத்தால் நல்லவர்களின் நட்பை இழந்துவிடாதீர்கள். 
 
14.6.2015 முதல் 5.9.2015 வரை உங்கள் ராசிக்கு கண்டகச் சனியாக 7-ம் வீடான துலாம் ராசி விசாகம் நட்சத்திரம் 3-ம் பாதத்தில் சனி செல்வதால் இக்காலக்கட்டத்தில் மனைவிக்கு மாதவிடாய்க் கோளாறு, அடிவயிற்றில் வலி, ஃவைப்ராய்டு பிரச்னைகள் வந்துப் போகும். பிள்ளைகள் பிடிவாதமாக இருப்பார்கள். அரசு விவகாரங்களில் அலட்சியம் வேண்டாம். 
 
30.04.2015 முதல் 01.08.2015 வரை குருபகவானின் விசாகம் நட்சத்திரத்திலேயே சனி வக்கரித்து செல்வதால் புது முதலீடுகளை தவிர்ப்பது நல்லது. பங்குதாரர்களுடன் பனிப்போர் வெடிக்கும். பணம் வாங்கித் தருவதில் குறுக்கே நிற்க வேண்டாம். சிலர் உங்களுக்கு உதவுவதாக சொல்லி உபத்திரவத்தில் சிக்க வைப்பார்கள். 
 
உங்கள் பாதகாதிபதியான சனிபகவான் தன் சுய நட்சத்திரமான அனுஷம் நட்சத்திரத்தில் 25.01.2015 முதல் 29.04.2015 வரை மற்றும் 18.10.2015 முதல் 15.11.2016 வரை செல்வதால் இக்காலக்கட்டத்தில் மனஉளைச்சல், திடீர் பயணங்கள் அதிகரிக்கும். உங்கள் மீது சிலர் வீண் பழி சுமத்த முயற்சி செய்வார்கள். பழைய கடன் பிரச்னையால் சேர்த்து வைத்த கௌரவத்திற்கு பங்கம் வந்துவிடுமோ என்று பயம் வரும். நெருக்கமாக பழகிய ஒருசிலர் கொஞ்சம் ஒதுங்கி செல்வார்கள்.
 
15.3.2015 முதல் 29.04.2015 வரை மற்றும் 19.5.2016 முதல் 12.08.2016 வரை உள்ள காலக்கட்டங்களில் சனிபகவான் அனுஷம் நட்சத்திரத்திலேயே வக்ரமாவதால் ஆரோக்ய குறைவு ஏற்படும். அவ்வப்போது சலிப்பு, சோர்வுடன் காணப்படுவீர்கள். வாயுக் கோளாறால் நெஞ்சு வலி, செரிமானக் கோளாறு வந்து நீங்கும். ஆனால் திடீர் பணவரவு உண்டு. வாகனம் வாங்குவீர்கள். மூத்த சகோதரரால் ஆதாயம் உண்டாகும்.
     
16.11.2016 முதல் 17.12.2017 வரை உங்கள் திருதியாதிபதியும்-சஷ்டமாதிபதியுமான புதனின் கேட்டை நட்சத்திரத்தில் சனிபகவான் செல்வதால் இளைய சகோதரருக்கு உடல் நிலை பாதிக்கும். அவருடன் கருத்து மோதல்கள் வரும். தைரியம் குறையும். வழக்கு, கடனை நினைத்து அவ்வப்போது பயம் வந்து நீங்கும்.   

08.04.2017 முதல் 5.08.2017 வரை புதனின் கேட்டை நட்சத்திரத்திலேயே சனி வக்ரமாகி செல்வதால் இக்காலக்கட்டத்தில் பழைய சிக்கல்கள் தீரும். தள்ளிப் போன விஷயங்கள் முடியும். வீட்டை விரிவுப்படுத்திக் கட்டுவீர்கள். வங்கிக் கடன் உதவி கிடைக்கும். சிலர் வீடு மாற வேண்டி சூழல் உருவாகும். ஆனால் நரம்புக் கோளாறு, தூக்கமின்மை, தோலில் அலர்ஜி வந்துப் போகும்.      
 
சனிபகவான் ராசிக்கு 2-ம் வீட்டைப் பார்ப்பதால் சாமர்த்தியமாகப் பேசுவீர்கள். ஆனால் சில நேரங்களில் நீங்கள் சாதாரணமாகப் பேசுவதைக் கூட சிலர் தவறாகப் புரிந்துக் கொள்வார்கள். பணப்பற்றாக்குறை ஏற்படும். சனிபகவான் 5-ம் வீட்டைப் பார்ப்பதால் தன்னைச் சுற்றியிருப்பவர்கள் தன்னை ஏமாற்றுவதாக நினைத்துக் கொள்வீர்கள். பிள்ளைகளிடம் அதிக கண்டிப்பு காட்ட வேண்டாம். பூர்வீக சொத்தைப் போராடிப் பெறுவீர்கள். சனிபகவான் 8-ம் வீட்டைப் பார்ப்பதால் பிறமொழிக்காரர்களால் திடீர் திருப்பம் உண்டாகும். ஆன்மிகத்தில் ஈடுபாடு அதிகரிக்கும். 
 
வியாபாரத்தில் போட்டிகள் அதிகமாகும். இழப்புகள் ஏற்படும். திடீரென்று அறிமுகமாகுபவரை நம்பி பெரிய முதலீடுகள் போட்டு சிக்கிக் கொள்ளாதீர்கள். முக்கிய வேலைகள் இருக்கும் நாளில் வேலையாள் விடுப்பிலே செல்வார். அதனால் பல வேலைகளையும் நீங்களே பார்க்க வேண்டி வரும். வாடிக்கையாளர்களிடம் கனிவாகப் பழகுங்கள். பங்குதாரர்களில் சிலர் தங்கள் பங்கு பணத்தை கேட்டு தொந்தரவு தருவார்கள்.

உணவு, கட்டிட உதிரி பாகங்கள், பெட்ரோ-கெமிக்கல் வகைகளால் ஆதாயமடைவீர்கள். உத்தியோகத்தில் போராட்டங்கள் அதிகரிக்கும். கூடுதல் நேரம் ஒதுக்கி உழைக்க வேண்டி வரும். மேலதிகாரிகளால் ஒதுக்கப்படுகிறோமோ என்ற ஒரு சந்தேகம் உள்ளுக்குள் இருந்துக் கொண்டேயிருக்கும். சக ஊழியர்களில் ஒருசிலர் இரட்டை வேடம் போடுவதையும் நீங்கள் உணர்ந்துக் கொள்வீர்கள். சிலர் உங்கள் மீது பொய் வழக்குப் போடுவார்கள். புது வாய்ப்புகளும், எதிர்பார்த்த சலுகைகளும் சற்று தாமதமாகி கிடைக்கும்.
 
கன்னிப் பெண்களே! காதல் விவகாரத்தை தள்ளி வைத்துவிட்டு உயர்கல்வியில் கவனம் செலுத்துங்கள். ஃபேஸ் புக், டிவிட்டரை கவனமாக பயன்படுத்துங்கள். சிலர் உங்களுடைய பெயருக்கு கலங்கம் விளைவிக்க முயற்சிப்பார்கள். புதிய நண்பர்களை தவிர்ப்பது நல்லது. பெற்றோரின் முடிவுகளை ஏற்றுக் கொள்ளப்பாருங்கள். மாணவ-மாணவிகளே! நினைவாற்றல் குறையும். அறிவியல், கணிதப் பாடங்களில் சூத்திரங்களை ஒருமுறைக்கு இருமுறை நினைவுக்கூர்ந்துப் பார்ப்பது நல்லது. விருப்பப்பட்ட கோர்ஸில் சேர சிலரின் சிபாரிசை நாடவேண்டி வரும். 
 
இந்த சனி மாற்றம் விபத்துகளையும், சிக்கல்களையும் ஒருபக்கம் தந்தாலும் மற்றொரு கடினஉழைப்பால் முன்னேற வைப்பதாகவும் அமையும்.
 
பரிகாரம்:
கஞ்சனூர் அருகிருலுள்ள திருக்கோடி காவலூரில் அருள்பாலிக்கும் ஸ்ரீபால சனீஸ்வரரை பூசம் நட்சத்திரம் நடைபெறும் நாளில் அல்லது பிரதோஷ நாளில் சென்று பூசணிக்காய் தீபமேற்றி வணங்குங்கள். சாலை விபத்தில் உயிரிழந்தவர்களின் பிள்ளைகளுக்கு உதவுங்கள். 

Share this Story:

Follow Webdunia tamil