Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

ராகு-கேது பெயர்ச்சி ராசி பலன் - ரிஷபம்

ராகு-கேது பெயர்ச்சி ராசி பலன் - ரிஷபம்
, வியாழன், 19 ஜூன் 2014 (12:32 IST)
பொன், பொருள் கொடுத்துப் பொய் சொல்லச் சொன்னாலும் புறங்கூறாத நீங்கள் நீதிக்கும், நியாயத்திற்கும் கட்டுப்பட்டவர்கள். உங்களுக்கு இந்த ராகுவும், கேதுவும் 21. 06. 2014 முதல் 08. 1. 2016 வரை உள்ள காலகட்டங்களில் உங்களை என்ன செய்யப் போகிறார்கள் என்பதை பார்ப்போம். 
 
ராகுவின் பலன்கள்:
 
இதுவரை உங்கள் ராசிக்கு ஆறாம் வீட்டில் அமர்ந்து கொண்டு சமூக அந்தஸ்தையும், வசதி, வாய்ப்புகளையும், வருமானத்தையும் தந்த ராகுபகவான்! இப்பொழுது உங்கள் ராசிக்கு ஐந்தாம் வீட்டில் அடியெடுத்து வைக்கிறார். ஐந்தாம் இடம் ராகுவுக்கு உகந்த இடமல்ல. . என்றாலும் உங்கள் யோகாதிபதி புதனின் வீட்டில் அமர்வதால் கெடுபலன்களை குறைத்து நல்லதையே செய்வார். 
 
குடும்பத்தில் இருந்த சச்சரவு ஒரளவு குறையும். கணவன்-மனைவிக்குள் இருந்த மோதல்கள் விலகும். சோர்வு நீங்கி துடிப்புடன் செயல்படத் தொடங்குவீர்கள். ஆனாலும் புத்தி ஸ்தானமான 5-ம் வீட்டில் ராகு அமர்வதால் முன்கோபம் அதிகரிக்கும். தெளிவான முடிவுகள் எடுக்க முடியாமல் குழம்புவீர்கள். எதிர்மறை எண்ணங்கள் தோன்றும். பிள்ளைகளை நல்ல நிலைமைக்கு கொண்டு வர முடியுமோ, முடியாதோ என்றவொரு தடுமாற்றம் வரும். தன்னம்பிக்கையை வளர்த்துக் கொள்ளுங்கள். 
 
சிலர் அவர்களின் உயர்கல்வி, உத்தியோகத்தின் பொருட்டு பிரிய வேண்டிய சூழ்நிலை உண்டாகும். வீண் சந்தேகத்தால் நல்லவர்களின் நட்பை இழக்க நேரிடும். பூர்வீக சொத்துப் பிரச்னையை சுமூகமாக தீர்க்கப் பாருங்கள். கோர்ட், கேஸ் என்று நேரத்தை வீணடித்துக் கொண்டிருக்காதீர்கள். உறவினர், நண்பர்கள் செய்த துரோகங்களையெல்லாம் நினைத்து கவலைப்பட்டு நிம்மதியை இழந்து விடாதீர்கள். குடும்பத்தினருடன் சென்று குலதெய்வக் கோவிலுக்குச் சென்று காணிக்கையை செலுத்துவீர்கள்.
 
 மகளின் திருமண விஷயத்தில் அவசரம் வேண்டாம். வரன் வீட்டாரைப் பற்றி நன்கு விசாரிப்பது நல்லது. மகனின் அடிப்படை நடத்தைக் கோலங்கள் மாறாமல் பார்த்துக் கொள்ளுங்கள். இலவசமாக சில கூடாப்பழக்க வழக்கங்கள் தொற்றிக் கொள்ள வாய்ப்பிருக்கிறது. எனவே அவரின் நட்பு வட்டத்தை கண்காணியுங்கள். 
 
அக்கம்-பக்கம் விட்டாருடன் அனுசரனையாக நடந்துக் கொள்ளுங்கள். வழக்கில் அலட்சியம் வேண்டாம். அலைப்பேசியில் பேசிக் கொண்டு வாகனத்தை இயக்க வேண்டாம். சிறுசிறு விபத்துகள் நிகழக்கூடும். முன்யோசனையில்லாமல் அவசர முடிவுகள் எடுத்து பிரச்னைகளில் சிக்கிக் கொள்ளாதீர்கள். தாய், தாய் மாமன் வகையில் மனத்தாங்கல் வரும். 

இராகுபகவானின் நட்சத்திர சஞ்சாரம்: 
 
உங்கள் சப்தம-விரையாதிபதியான செவ்வாயின் சித்திரை நட்சத்திரத்தில் 21. 06. 2014 முதல் 24. 10. 2014 வரை ராகுபகவான் செல்வதால் எதிலும் பிடிப்பற்றப் போக்கு, தலைச்சுற்றல், தூக்கமின்மை, பயணங்களால் அலைச்சல், செலவுகள் வந்து நீங்கும். மனைவியுடன் ஈகோ பிரச்னை, அவருக்கு ஹார்மோன் கோளாறு, சிறுசிறு அறுவை சிகிச்சைகள் வரக்கூடும். அடகிலிருந்த நகையை மீட்க உதவிகள் கிடைக்கும். திருமணப் பேச்சு வார்த்தை சாதகமாக முடியும். பழைய கடன் பிரச்னை கட்டுக்குள் வரும். சகோதர வகையில் மோதல்கள் வந்தாலும் பாசம் குறையாது. 
 
ராகுபகவான் சேவாதிபதியான சந்திரனின் அஸ்தம் நட்சத்திரத்தில் 25. 10. 2014 முதல் 03. 06. 2015 வரை செல்வதால் சவால்கள், போட்டித் தேர்வுகளில் வெற்றி பெறுவீர்கள். பணப்புழக்கம் அதிகரிக்கும். பிரபலங்களின் நட்பு கிடைக்கும். இழுபறியாக இருந்த வேலைகள் முடிவடையும். பழுதாகிக் கிடந்த வாகனத்தை மாற்றுவீர்கள். வீட்டை விரிவுப்படுத்திக் கட்டுவீர்கள். கடந்த கால இனிய அனுபவங்களை அவ்வப்போது நினைவுகூர்ந்து மகிழ்வீர்கள். நவீன மின்னணு, மின்சார சாதனங்கள் வாங்குவீர்கள். இளைய சகோதர வகையில் ஒத்துழைப்பு உண்டு.   
 
உங்கள் சுகாதிபதியான சூரியனின் உத்திரம் நட்சத்திரத்தில் 04. 06. 2015 முதல் 08. 01. 2016 வரை ராகுபகவான் செல்வதால் வீடு கட்டுவது, வாங்குவது நல்ல விதத்தில் முடியும். வங்கிக் லோன் கிடைக்கும். எதிர்த்தவர்கள் அடங்குவார்கள். வராது என்றிருந்த பணம் கைக்கு வரும். தாயாருக்கு இருந்த நோய் குணமாகும். அவருடனான விவாதங்களெல்லாம் விலகும். அரசால் அனுகூலம் உண்டு. தாய்வழி சொத்துகள் கைக்கு வரும். வீடு, வாகனப் பராமரிப்புச் செலவுகள் குறையும். அதிகாரப் பதவியில் இருப்பவர்களின் உதவி கிடைக்கும். பொது விழாக்கள், சுப நிகழ்ச்சிகளில் முதல் மரியாதைக் கிடைக்கும். வீடு, வாகனப் பராமரிப்புச் செலவுகள் குறையும். வேலைக்கு விண்ணப்பித்து காத்திருந்தவர்களுக்கு நல்ல நிறுவனத்திலிருந்து அழைப்பு வரும்.  
 
மாணவ-மாணவிகளே! சமயோஜித புத்தியை பயன்படுத்தி முன்னேறப்பாருங்கள். விளையாட்டு, இசை, கட்டுரைப் போட்டிகளில் பரிசு, பாராட்டுப் பெறுவீர்கள். நல்ல நட்புச்சூழலை உருவாக்கிக் கொள்ளுங்கள். உயர்கல்விக்காக அயல்நாடு செல்ல வேண்டி வரும். 
 
கன்னிப் பெண்களே! காதல் கசந்து இனிக்கும். உயர்கல்வியில் அதிக கவனம் செலுத்துங்கள். வெளிமாநிலத்தில் வேலைக் கிடைக்கும். பள்ளிக் கல்லூரி காலத் தோழியை சந்திப்பீர்கள். பெற்றோரின் ஆசைகளை நிறைவேற்றுவீர்கள். 
 
கலைத்துறையினரே! பரபரப்புடன் காணப்படுவீர்கள். நீண்ட நாட்களாக எதிர்பார்த்து காத்திருந்த வாய்ப்புகள் வரும். சம்பள விஷயத்தில் கறாராக இருங்கள். 
 
வியாபாரிகளே! வழக்கமான லாபம் உண்டு என்றாலும் மற்றவர்கள் சொல்வதைக் கேட்டு நட்டப்படாதீர்கள். சந்தை நிலவரத்தை கவனத்தில் கொண்டு புது முதலீடு செய்யுங்கள். புதிய வாடிக்கையாளர்கள் தேடி வருவார்கள். பழைய பாக்கிகளை நயமாகப் பேசி வசூலிக்கப்பாருங்கள். வேலையாட்கள் விசுவாசமாக நடந்துக் கொள்வார்கள். ஹோட்டல், துணி, பெட்ரோ-கெமிக்கல், புரோக்கரேஜ் வகைகளால் ஆதாயமடைவீர்கள். பங்குதாரர்களிடம் நீங்கள் வளைந்துக் கொடுக்க வேண்டி வரும். உத்தியோகத்தில் ஒருபக்கம் வேலைச்சுமை இருந்தாலும் மறுபக்கம் மூத்த அதிகாரிகளின் பாராட்டால் உற்சாகமடைவீர்கள். சக ஊழியர்களில் உங்களுக்கு எதிராக செயல்பட்டவர்களின் மனசு மாறும். இழந்த உரிமையை மீண்டும் பெறுவீர்கள்.  

கேதுவின் பலன்கள்: 
 
இதுவரை உங்கள் ராசிக்கு பனிரெண்டாம் வீட்டில் அமர்ந்து பயணங்களால் அலைச்சல்களையும், சேமிக்க முடியாதபடி அடுத்தடுத்து செலவினங்களையும், மனஇறுக்கத்தையும் தந்த கேது பகவான் இப்போது உங்கள் ராசிக்கு லாப வீடான பதினொன்றில் வந்தமருகிறார். பணப்புழக்கம் அதிகரிக்கும். அவசரத்திற்கு கைமாற்றாகவும், கடனாகவும் வாங்கியிருந்த பணத்தை திருப்பித் தருவீர்கள். குடும்பத்தில் இழந்த செல்வாக்கை மீண்டும் பெறுவீர்கள். உங்கள் ஆலோசனையை எல்லோரும் ஏற்றுக் கொள்வார்கள். 
 
சமூகத்தில் பெரிய அந்தஸ்தில் இருப்பவர்களின் நட்பு கிடைக்கும். ஷேர் மூலம் பணம் வரும். வீட்டில் தடைபட்ட சுபகாரியங்கள் ஏற்பாடாகும். சிலர் சொந்த தொழில் தொடங்குவீர்கள். விலை உயர்ந்த ஆடை, ஆபரணம் வாங்குவீர்கள். புது வீடு கட்டி குடிப்புகுவீர்கள். குழந்தை பாக்யம் கிடைக்கும். வழக்கு சாதகமாகும். கோவில் விழாக்களில் முதல் மரியாதைக் கிடைக்கும். மனைவிவழி உறவினர்கள் மத்தியில் செல்வாக்குக் கூடும். புது பொறுப்புகள், பதவிகளுக்கு தேர்ந்தெடுக்கப்படுவீர்கள். உங்களைச் சுற்றியிருப்பவர்களில் நல்லவர்கள் யார், அல்லாதவர்கள் யார் என்பதை புரிந்துக் கொள்வீர்கள். வீரியத்தை விட காரியம் தான் முக்கிய என்பதை உணர்வீர்கள். கோபத்தை குறைத்துக் கொள்வீர்கள்.   
 
கேதுபகவானின் நட்சத்திர சஞ்சாரம்: 
 
உங்களின் தன-பூர்வபுண்யாதியுமான புதனின் ரேவதி நட்சத்திரத்தில் 21. 06. 2014 முதல் 27. 02. 2015 வரை கேதுபகவான் செல்வதால் வராது என்றிருந்த பணம் வரும். புது டிசைனில் நகை வாங்குவீர்கள். பூர்வீக சொத்தால் வருமானம் வரும். பிள்ளைகளின் வருங்காலம் குறித்து சில முக்கிய முடிவுகள் எடுப்பீர்கள். உறவினர்கள் வீட்டு விசேஷங்களை முன்னின்று நடத்துவீர்கள். நட்பு வட்டம் விரிவடையும். குலதெய்வப் பிரார்த்தனையை நிறைவேற்றுவீர்கள். மகளின் திருமணத்தை சிறப்பாக நடத்துவீர்கள். மகனுக்கு எதிர்பார்த்த நிறுவனத்தில் வேலை அமையும்.
 
உங்கள் பாக்யாதிபதியும்-ஜீவனாதிபதியுமான சனிபகவானின் உத்திரட்டாதி நட்சத்திரத்தில் 28. 02. 2015 முதல் 04. 11. 2015 வரை கேதுபகவான் பயணிப்பதால் உங்களின் புகழ், கௌரவம் உயரும். புது வேலைக் கிடைக்கும். அடுத்தடுத்து சுப நிகழ்ச்சிகளால் வீடு களைக்கட்டும். அரசாங்க விஷயம் உடனடியாக முடிவடையும். பழைய காலி மனையை விற்று புது வீடு வாங்குவீர்கள். இயக்கம், சங்கம் இவற்றில் புது பதவிகள் வரும். 
 
வேற்றுமதத்தவர்கள், மொழியினர்கள், மாநிலத்தவர்களால் பயனடைவீர்கள். தந்தைவழியில் உதவிகள் உண்டு. பிதுர்வழி சொத்து கைக்கு வரும். தந்தைவழி உறவினர்களின் ஆதரவுப் பெருகும். சிலர் சொந்தமாக தொழில் தொடங்கும் முயற்சியில் ஈடுபடுவீர்கள். பெரிய பதவியில், நல்ல நிலையில் இருக்கும் நண்பர்களாலும் உதவிகள் கிடைக்கும்.   
  
கேதுபகவான் அஷ்டம-லாபாதிபதியுமான குருபகவானின் பூரட்டாதி நட்சத்திரத்தில் 05. 11. 2015 முதல் 08. 01. 2016 வரை செல்வதால் இக்காலக்கட்டத்தில் வீண் அலைச்சல், இரக்கப்பட்டு ஏமாறுதல், பண இழப்புகள், இரத்த சோகை, ஹார்மோன் பிரச்னை, பசியின்மை வந்துச் செல்லும். அவ்வப்போது குடும்ப வாழ்க்கையில் பற்றில்லாமல் போகும். மற்றவர்கள் யாரும் உங்களைப் புரிந்துக் கொள்ளவில்லையென்று ஆதங்கப்படுவீர்கள். சட்டத்திற்கு புறம்பான வகையில் எந்த உதவிகள் வந்தாலும் ஏற்றுக் கொள்ள வேண்டாம். சொந்த-பந்தங்களில் ஒருசிலர் உங்களைப் பார்த்தால் ஒரு பேச்சு பார்க்க விட்டால் ஒரு பேச்சு என்றிருப்பதை நினைத்து வருத்தப்படுவீர்கள். திடீர் பயணங்கள் அதிகரிக்கும். மூத்த சகோதர வகையில் சங்கடங்கள் வரும். 
 
வியாபாரத்தில் பழைய தவறுகள் நிகழ்ந்துவிடாத வண்ணம் பார்த்துக் கொள்வீர்கள். லாபம் இரட்டிப்பாகும். புதிய முடிவுகள் எடுப்பீர்கள். சிலர் சில்லரை வியாபாரத்திலிருந்து மொத்த வியாபாரத்திற்கு மாறுவீர்கள். பழைய வேலையாட்கள் மீண்டும் பணியில் வந்து சேருவார்கள். கடையை பிரபலமான இடத்திற்கு மாற்றவீர்கள். உத்தியோகத்தில் உங்கள் கை ஓங்கும். அதிகாரிகள் உங்களுக்கு முன்னுரிமைத் தருவார்கள். இங்கிதமாகப் பேசி சக ஊழியர்களின் குறை, நிறைகளை சரி செய்வீர்கள். விரும்பிய இடத்திற்கே மாற்றம் கிடைக்கும். கௌரவப் பதவிகள் தேடி வரும்.    
  
இந்த ராகு-கேது மாற்றத்தில் ராகுவால் மனநிம்மதியற்றப் போக்கு ஏற்பட்டாலும் கேதுவால் திடீர் யோகமும், வசதி, வாய்ப்பும் உண்டாகும்.  
 
பரிகாரம்:
 
சென்னை-குன்றத்தூர் தலத்தில் அருள்பாலிக்கும் நாகேஸ்வரரை தரிசித்து வாருங்கள். பசுவிற்கு அகத்திக்கீரை கொடுங்கள். 

Share this Story:

Follow Webdunia tamil